என் மலர்
வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.
- 11-ம் திருவிழாவான 3-ந்தேதி இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வருபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.09 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், கோவில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருணாசலம், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்தி நாதன், முன்னாள் செயலாளர் சந்தணராஜ், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
5-ம் திருவிழாவான 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. 7-ம் திருவிழாவான 27-ந் தேதி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவை நடக்கிறது.
காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற (மார்ச்) 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது.
11-ம் திருவிழாவான 3-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






