என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
- ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராம் கோபால் வர்மா கொடுத்த பேட்டியில், "ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
- புதிய வருமான வரி மசோதா 536 பிரிவுகள் உள்ளன.
- மொழியை எளிமைப்படுத்துவதற்காகவே வடிவைமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961, 60 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. இதில் பல ஆண்டுகளாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனால் அதில் சில சிக்கல்களும் ஏற்பட்டன.
எனவே புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரி சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025, பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வருமான வரிச் சட்டம் 1961-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'முந்தைய ஆண்டு' என்ற வார்த்தையை, புதிய வருமானவரி மசோதாவில் 'வரி ஆண்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது, முந்தைய ஆண்டில் (2023-24) ஈட்டிய வருமானத்திற்கு, மதிப்பீட்டு ஆண்டில் (2024-25) வரி செலுத்தப்படுகிறது. இந்த முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்து நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ் வரி ஆண்டு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. மொழியை எளிமைப்படுத்துவதற்காகவே வடிவைமைக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா 536 பிரிவுகள் உள்ளன. (தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் 298 பிரிவுகள் உள்ளன). தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன, அவை புதிய சட்டத்தில் 16-ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதே நேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.
வருமான வரிச் சட்டம், 1961 கொண்டு வரப்பட்டபோது, 880 பக்கங்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, குறைக்கப்பட்ட வரி தகராறுகளுக்கு பங்கு விருப்பத்தேர்வுகள் மீதான தெளிவான வரிவிதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது,
''வருமான வரிச் சட்டம் 1961-ல் வருமான வரித்துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்கள் மற்றும் இணக்க கட்டமைப்புகளுக்கு பாராளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. இப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் அத்தகைய திட்டங்களை தாமாகவே அறிமுகப்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது, இது வரி நிர்வாகத்தை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது.
- சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக காலை 8.30 மணிக்கு பிறகே விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.
எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.
இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-1 (வியாழக்கிழமை)
பிறை: மேய்பிறை
திதி: பிரதமை இரவு 9.01 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: மகம் இரவு 9.47 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டி யூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-திடம்
ரிஷபம்-கவனம்
மிதுனம்-நட்பு
கடகம்-புகழ்
சிம்மம்-அமைதி
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- நன்மை
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- மேன்மை
மகரம்-முயற்சி
கும்பம்-ஆதாயம்
மீனம்-வெற்றி
- குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருவான்மியூரில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "தவெக கட்சியில் இருப்பதே குழந்தைகள் தான், அதனால் தான் குழந்தைகள் விங் என உருவாக்கி உள்ளனர். புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் ஒருவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார். ஜி.எஸ்.டி. கவுன்சில் வேறு பட்ஜெட் வேறு" என்று தெரிவித்தார்.
- குடும்பஸ்தன் திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் அப்படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பினார்.
- பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.
பாரிஸ்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில், பிரான்சில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
வாஷிங்டனில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
- உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது என்றார் அண்ணாமலை.
சென்னை:
திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ, அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி.
கவர்னரும், அண்ணாமலையும் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம்.
உங்கள் கட்சியில்தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.
பா.ஜ.க. தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- இந்தியா 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அகமதாபாத்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73-வது ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார்.
ஆசியாவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் விராட் கோலி. இதன்மூலம் குறைவான இன்னிங்சில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி (340 இன்னிங்ஸ்) சாதனையை படைத்தார்.
- சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
- குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அகமதாபாத்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார். விராட் கோலி அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன் 50-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
- ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
- ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது என்றார்.
வாஷிங்டன்:
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஷியா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது.
உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைன் உடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.






