என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • . இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
    • படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகினார் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்பொழுது ரூபா தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.

    இப்படத்திற்கு எமகாதகி என தலைப்பிட்டுள்ளனர். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொல்.திருமாவளவன் பேசுகையில், வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
    • மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம்.

    சென்னை:

    திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செய லகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாக செலவிடுவது, திட்ட செயல்பாடுகளைக் கண்காணிப்பது, ஒன்றிய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசினுடைய திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாக நாம் செய்து வருகிறோம்.

    கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதின்படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டு வாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தொல்.திருமாவளவன் பேசுகையில், வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், நான் தொடக்கத்திலேயே தெரிவித்தபடி, அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்தக் குழு மூலமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

    மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம்.

    ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படுமென்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்று

    உள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.

    'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக குற்றம் சாட்டியது.

    ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.

    பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் இல்லத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உத்தரவிட்டுள்ளது.

    பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா அளித்த புகாரின் பேரில், விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய பொதுப்பணித் துறையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • ஜெர்மனியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிகாரிகள் உடன் சந்தித்து பேசியுள்ளார்.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

    நான் அதிபர் ஆனால் ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் உடன் தொலைபேசியின் வாயிலாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், உக்ரைனின் 50% கனிம வளங்கள் மீதான உரிமையை வழங்க வேண்டுமென உக்ரைனிடம் அமெரிக்க அரசு வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெர்மனியில் நடைபெற்ற அமெரிக்க அதிகாரிகள் உடனான சந்திப்பில் இது தொடர்பான ஒப்பந்தத்தை சரியாக படிக்கக்கூட விடாமல் அதில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஜெலென்ஸ்கி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    • அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு தான் தி.மு.க.வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் ஏர் ஷோ கூட நடத்த தெரியாத முதலமைச்சர் தான் உள்ளார். ஆனால் அவர் மணிப்பூர் பற்றி பேசுகிறார்.

    கோவை:

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.கட்சியினர், தி.மு.க.வினர் காட்டும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு யாருடைய டப்பிங்கும் தேவையில்லை.

    உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் டப்பிங் பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது. முதலமைச்சருக்கு டப்பிங் செய்ய அ.தி.மு.க.வில் இருந்து இம்போர்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. வளர்ந்து கொண்டு இருக்கிறது.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட, 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 7 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அது 20 சதவீதத்திற்கு கீழே சென்று விடும்.

    அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு தான் தி.மு.க.வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அ.தி.மு.கவில் இருந்து தி.மு.க.விற்கு வந்த 13 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாட்டில் கோவில்களுக்கு தானம் வழங்ககூடிய பசுக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்திற்கும் உரிய கணக்கு இல்லை. தமிழ்நாட்டில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    பெங்களூருவில் ஏர் ஷோ நடத்தினார்கள். மத்திய அரசின் பார்வையில் அது நடந்தாலும் அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். ஆனால் சென்னையில் ஏர் ஷோ கூட நடத்த தெரியாத முதலமைச்சர் தான் உள்ளார். ஆனால் அவர் மணிப்பூர் பற்றி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார்.
    • ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் உள்கட்சி மோதலால் அ.தி.மு.க. தவித்து வருகிறது.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு கட்சியின் தலைமை பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வில் ஆள் ஆளுக்கு கருத்துக்களை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்ததும் அடுத்தடுத்து அவர் தெரிவித்த கருத்துக்களும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

    செங்கோட்டையனின் கருத்துக்கு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் புதிய பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை மையமாக வைத்து செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் சேர தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோடு அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்கு வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்னும் 6 மாதம் பொறுமையோடு காத்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இப்படி ஓ.பி.எஸ்.சை சேர்க்கும் விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இதுபற்றி அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர முன் வந்தால் அவர்களை நிச்சயம் வரவேற்க வேண்டும் என்பதில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியுடனேயே உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.

    ஏனென்றால் ஓ.பி.எஸ்.சின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி இருந்து உள்ளன. அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது முதல் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டது வரை எதை மறந்து விட்டு ஓ.பி.எஸ்.சை கட்சிக்குள் சேர்த்துக் கொள்வது? என்பதே எடப்பாடி பழனிசாமியின் கேள்வியாக இருந்து வருகிறது.

    இருப்பினும் அவரது மனதை மாற்றி ஓ.பி.எஸ்.சை மீண்டும் கட்சியில் சேர்த்து உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்கிற கருத்து அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய தலைவர்களின் விருப்பமாகவே இருந்து வருகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள முன்னணி நிர்வாகிகள் இதுபற்றி அவரிடம் தொடர்ந்து எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர், "ஓ.பி.எஸ்.சை சேர்ப்பது பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி அந்த பேச்சை அப்படியே முடித்துக் கொண்டுள்ளார்.

    இருப்பினும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நம்மால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அ.தி.மு.க. தலைமையிடம் எடுத்து கூறியுள்ளனர். எனவே தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் போது ஓ.பி.எஸ். உள்ளிட்ட பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக பெரிதாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    • மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சிறையில் இருந்து காதல் கடிதங்கள் எழுதி வருகிறார்.

    பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வருகிறார்.

    இதனிடையே சிறையில் இருந்துகொண்டே ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுதிய காதல் கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசாக கொடுத்த ஜெட் விமானத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குறிக்கும் விதமாக ஆங்கிலத்தில் ஜேஎஃப் என்று விமானத்தில் எழுதப்பட்டுள்ளது

    இது தொடர்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "ஜெட் விமானத்தை எனது காதலி ஜாக்குலினுக்கு அனுப்புகிறேன். இந்த விமானம் குற்றச்செயல்களால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கவில்லை.

    அடுத்த பிறவி என்று எனக்கு இருந்தால், அதில் நான் ஜாக்குலின் உடைய இதயமாகப் பிறக்க விரும்புகிறேன். அவருக்குள் நான் "துடித்துக் கொண்டே இருக்க" விரும்புகிறேன். நீ என் காதலியாக இருப்பதால் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதன் நான்தான். ஜாக்குலின் போன்ற மிகவும் அழகான மற்றும் அற்புதமான பெண் காதலியாக கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    பேபி, நீ எப்போதும் வேலை மற்றும் படப்பிடிப்பிற்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருப்பாய். இப்போது இந்த ஜெட் விமானத்துடன், உன் பயணம் உன் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார். 

    • தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
    • தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?

    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

    எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.

    ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?

    இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?

    இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.



    • மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம்.
    • எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அவ்வப்போது கூட்டப்படும்.

    மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம். இந்த குழுவின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் திட்டப் பணிகள் பற்றி விளக்க உரையாற்றப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில் முதலச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை நிகழ்த்தினார்.

    சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது.

    இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்தது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் ப்ரொபசலை ஓபன்ஏஐ நிறுவனம் நிராகரித்துள்ளது. OpenAI விற்பனைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே எலான் மஸ்க்கின் கோரிக்கை தொடர்பாக ஓபன்ஏஐ சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று கிண்டலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்றைய சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில விமர்சனத்தையும், சில வரவேற்பையும் பெறும். அப்படி வரவேற்பை பெற்ற இளம்பெண்ணின் வீடியோ அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண் காந்த கண்ணால் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் வைரலானார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.

    தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலை அடுத்து நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸை அணிவித்து அழகு பார்த்த நிகழ்வு தற்போது பேசு பொருளாகி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
    • சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.

    இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.

    அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.

    இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

    ×