என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.

    வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மெஹ்முதுல்லா கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது.

    மெஹ்முதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டியில் 5 சதங்களுடன் 2914 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 5689 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 2444 ரன்களும் அடித்துள்ளார்.

    அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43, ஒருநாள் கிரிக்கெட்டில் 82, டி20 கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    • சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது.
    • இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்து பிப்ரவரியில் 3.61%-ஆக குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

    சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் வாங்கும் சில்லறைப் பொருட்களின் விலைகள் காலப்போக்கில் உயரும் விகிதம் ஆகும்.

    நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.

    கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 4%-க்கும் கீழ் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

    இதேபோல், உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 5.97 சதவீதமாக இருந்தது.

    கிராமப்புறங்களில் 4.06 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 3.20 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்துறை வளர்ச்சி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 3.2சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் அது 5 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    • பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
    • படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.

    அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.

    மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    • விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் .
    • இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    `நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.

    இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சக்தித் திருமகன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • உக்ரைன் மீதான ராணுவ உதவிக்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது மோதிக் கொண்டதால், அமெரிக்க உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளை நிறுத்தியது. அத்துடன உளவுத்துறை தகவல் பகிர்வதையும் நிறுத்தியது.

    இந்த நிலையில்தான் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ரஷியா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

    இதற்கிடையே உக்ரைன் மீதான ராணுவ உதவிகள் மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு ஆகியவற்றிற்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    இந்த நிலையில் புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பின் பிப்ரவரி 12-ந்தேதி புதின் உடன் டெலிபோனில் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இரு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை.

    • ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
    • பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.

    சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.

    பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார்.

    தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.

    இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.

    கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.

    • ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம்.
    • இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    கல்வியில் இருந்து மக்களை நீக்கும் இனைத்து வேலைகளையும் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை.

    இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர தேசிய கல்விக் கொள்கை மூலம் முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம்.

    ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ?

    இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ?

    திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
    • மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

    நேற்று மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என தெரிவித்தார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

    முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

    குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

    ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும் பெரியார் சிந்தனை போற்றுதும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
    • தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகின்றனர்.

    அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் வளைந்த முதுகோடு அடகு வைத்த ஆட்சி தமிழகத்தில் நடந்தது.

    திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

    கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக திமுக எப்போதும் ஒலிக்கும்.

    பிரதமர் மோடி சர்வாதிகார எண்ணத்தோடு செயல்படுகிறார். மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகார பகிர்வுக்கு வழிவகுப்பேன் என பிரதமர் மோடி சொன்னார்.

    வரி விதிப்பில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிப்பதாக சொன்ன நீங்கள், அப்படி செய்ததாக ஒரு சாட்சியை காட்ட முடியுமா ?

    மாற்றுக்கட்சி ஆளும் மாநிலங்களை பழிவாங்க மாட்டேன் என சொல்லிவிட்டு, பழிவாங்கும் அரசியலை மட்டுமே செய்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம்.
    • எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது.

    ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

    எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர் மற்றும் என்னுடன் ஆறு பேரை தக்கவைத்தது. இதனால் அவர் அணியில் இருந்து வெளியிடுவது கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து தொடரின்போது அவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பட்லரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராாக இல்லை என்று முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை எனத் தெரிவித்தேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு விசயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால், ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் வீரர்களை வெளியிட வேண்டும் என்ற விதியை மாற்றுவேன்.

    ஐபிஎல் விதிக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக உருவாக்கிய அந்த இணைப்பை, உறவை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நான் வேறு என்ன சொல்ல முடியும்?.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 6ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நாளை நடைபெற உள்ளது.

    அதன்படி, மாவட்ட பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளார்.

    தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதனால், ஏற்கனவே சந்தித்தவர்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை காலை 11 மணியளவில் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×