என் மலர்
நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷியா போர்"
- ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
- புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார்.
ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.
இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.
ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து லிண்ட்சே கிரஹாம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
7-ந் தேதி, ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம். அதைத்தொடர்ந்து, ரஷிய பொருளாதார தடை மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டினார்.
அந்த மசோதா மீது மற்றொரு செனட் உறுப்பினர் புளுமெந்தார் உள்ளிட்டோருடன் நான் பல மாதங்களாக பணியாற்றினேன்.
ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அதற்கு ஜனாதிபதி டிரம்ப் சம்மட்டி அடியாக அந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
இந்த நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவுக்கு பணம் கிடைக்கிறது. எனவே, போரை நிறுத்துவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.
அடுத்த வார தொடக்கத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அமைதியை ஏற்படுத்த உக்ரைன் சலுகை அளிக்கிறது. ஆனால், ரஷிய அதிபர் புதின் நிறைய பேசுகிறார். அப்பாவிகளை கொன்று வருகிறார். எனவே, புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தன்னிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். அதனால், வரியை குறைக்கும்படி டிரம்பிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே டிரம்ப் விதித்த 25 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 500 சதவீத வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
- அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் நடந்த டிரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஆண்டுக்கணக்கில் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
டிரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ரஷிய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
- அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியா குற்றம்சாட்டியது.
- இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
வாஷிங்டன்:
ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியாவின் வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீது அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது வீடு மீது தாக்குதல் நடந்ததாகக் கூறினார். இதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு. இதுபோன்ற செயல்களுக்கு இது சரியான நேரம் அல்ல.
எனினும் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதை மீறி தாக்குதல் நடந்து இருந்தால் அது மிகவும் மோசமான விஷயம். தாக்குதல் நடத்ததா என்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடிப்போம்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு சில மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன என தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தக் குற்றச்சாட்டு பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் நடந்து வருகிறது.
- இந்தப் போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார்.
வாஷிங்டன்:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதாக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி அந்த ஒப்பந்தத்தை உக்ரைன் நிராகரித்தது.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போரில் கடந்த மாதம் மட்டும் இரு தரப்பைச் சேர்ந்த 25 ஆயிரம் வீரர்கள் பலியாகினர் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
எனவே இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய தூதுக்குழுவை அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் சந்தித்துப் பேசினர். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கான அமைதி ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
- டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று இரு தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புடா பெஸ்ட் நகரில் நடைபெற விருந்த டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு தற்போது நடைபெறாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.
- இந்திய இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்தன. இதனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்தது.
அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது ரஷியா. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரஷிய ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்கவேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
- ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.
- ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.
வாஷிங்டன்:
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீத வரியையும் விதித்தார்.
ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையே உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின்-டிரம்ப் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்து உள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மிகப் பெரிய பொது அழுத்தத்தை அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.
ரஷியாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷியா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
- நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று புதின் கூறினார்.
வாஷிங்டன்:
உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.
இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிபர் புதின் கூறியதாவது:
எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.
டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.
அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.
உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு உடன்படுகிறேன்.
அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
- ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
- டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாஷிங்டன்:
நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.
3 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் அதிபர் டிரம்ப், அதிபர் புதினை நேருக்கு நேர் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
- ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாஷிங்டன்:
நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.
3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து விட்டனர். இருந்த போதிலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் இரு தரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப்-புதின் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நான் 6 மாதங்களில் 6 போர்களை தீர்த்து விட்டேன். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியா தயாராக உள்ளது. புதின் ஒரு ஒப்பந்தத்தை காண விரும்புகிறார் அவர் அதை செய்வார் என நினைக்கிறேன். நான் அதிபராக இல்லாவிட்டால் அவர் முழு உக்ரைனை கைப்பற்றி இருப்பார் என நினைக்கிறேன். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் முத்தரப்பு சந்திப்பை நோக்கி நகர்வதே தனது இலக்கு. நாங்கள் உக்ரைனுக்கு எந்த நிதி உதவியும் அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம்.
அதுவும் 100 சதவீதம் நேட்டோ நாடுகள் மூலம் வழங்குகிறோம். உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியபோது நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்து இருக்காது.
எங்களது 2-வது சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சந்திப்பாக இருக்கும்.
இது தொடர்பாக புதின் கூறும்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக டிரம்ப் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார். இரு தலைவர்களும் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.
ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 1959-க்கு பிறகு அமெரிக்கா மாகாணங்களில் ஒன்றாக அலாஸ்கா மாறியது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது உடன்பாடு ஏற்படாவிட்டால் ரஷியாவுக்கு மிக கடுமையான பொருளாதார தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு தோல்வியடையும் பட்சத்தில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட் கூறி உள்ளார். இதனால் டிரம்ப்-புதின் சந்திப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
- உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை.
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதில் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார்.
இவ்விவகாரத்தில் சமீபத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்த முயற்சியின் ஒரு பகுதியாக வருகிற 15-ந்தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப்-புதின் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில பகுதிகளை உக்ரைன் வழங்க வேண்டியிருக்கும். உக்ரைனுக்கு சில பகுதிகள் கிடைக்கும் என்றார்.
இதற்கிடையே உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் இடம்பெறாமல் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, போர் நிறுத்த பேச்சு எங்கோ தொலைவில் நடக்க உள்ளது.
இந்தப் போரை எங்களைத் தவிர வேறு யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை. அதேபோல் எங்கள் நிலத்தை விட்டுதர மாட்டோம் என்றார்.
இந்த நிலையில் அலாஸ்காவில் நடைபெற உள்ள டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அலாஸ்காவில் அதிபர் டிரம்பை சந்திக்க உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அதை ஏற்று ஜெலன்ஸ்கி சென்றால் அவருடன் டிரம்ப் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று புதின் கூறிஉள்ளார். இதனால் அவர்கள் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை.
- உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் உக்ரைனின் சிறைச்சாலை, மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தனர்.
கீவ்:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, போர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட புதினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனாலும் அதைப் பொருட்படுத்தாத ரஷியா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் மூலம் சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரஷிய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இவை வேண்டுமென்றே, நடத்தப்பட்ட தாக்குதல்கள். தற்செயலானவை அல்ல என தெரிவித்தார்.






