என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
- கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.
இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
அப்போது, பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
மேலும், " பெண்கள், சிறார்கள் விலங்கிடப்படுவதில்லை என்றாலும், நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இதுவரை மொத்தம் 388 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
- சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் தொடக்க போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். அவர் சென்னை அணியிடன் இணைந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவிற்கு 'ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை' என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது.
- உள்கட்சியில் நிலவும் பூசல்தான் காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இந்த இலக்குடன் தேர்தல் பணிகளை தி.மு.க. மேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 234 தொகுதிகளிலும் ரகசிய ஆய்வு நடந்ததாக தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இந்த ஆய்வு நடந்துள்ளது.
மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள செல்வாக்கான நபர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
ஆய்வு முடிவில் சுமார் 50 தொகுதிகளில் தி.மு.க. 100 சதவீதம் வெல்லும் வாய்ப்புடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
என்றாலும் சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது. உள்கட்சியில் நிலவும் பூசல்தான் அதற்கு காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது. இதையடுத்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதே போன்ற ஒரு கருத்து கணிப்பை அ.தி.மு.க.வும் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதில் எத்தகைய முடிவுகள் கிடைத்து இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.
- சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும்.
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகரை அழகுபடுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
- இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப் போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.
இதுவரை 17 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக தலா 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.
18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (சனிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. மே 25 வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ( வரிசை 1) நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2), ராஜஸ்தான் ராயல்ஸ் (3), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (4), பஞ்சாப் கிங்ஸ் (5) ஆகியவையும், பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ் (1), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2), குஜராத் டைட்டன்ஸ் (3), டெல்லி கேப்பிடல்ஸ்(4), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (5) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வரிசைப்படி 2 தடவை விளையாட வேண்டும். மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை ஆட வேண்டும். உதாரணத்திற்கு சி. எஸ்.கே. அடுத்த பிரிவில் உள்ள மும்பையுடன் மட்டும் 2 போட்டியில் ஆடும். ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளே ஆப் சுற்றில் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் 'குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதி போட்டிக்குள் நுழையும்.
மே 18- ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. பிளே ஆப் சுற்று மே 20- ந் தேதி தொடங்குகிறது. அன்று 'குவாலிபையர் 1' போட்டியும், மறுநாள் 21-ந் தேதி எலிமினேட்டர் ஆட்டமும் ஐதராபாத்தில் நடக்கிறது. குவாலிபையர் 2 ஆட்டம் 23- ந் தேதியும், இறுதிப்போட்டி மே 25- ந் தேதியும் நடைபெறுகிறது.
58 நாட்கள் லீக் ஆட்டங்கள் நடைபெறும். இதில் 12 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெறும்.
நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.
ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் ஜியோ ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியான கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் அன்றைய தினம் கொல்கத்தாவில் மழை பெய்ய 70-90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி பெருமளவில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் அன்றைய தினம் அந்த பகுதிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்த பகுதிக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட படி போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
- நாங்கள் உங்களை விட கம்மியாக படித்தவர்கள்தான்.
- எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எங்களுக்கு எங்களது தலைவர் இருக்கிறார்.
சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசும் போது, நிதி நிலை அறிக்கையில் உறுப்பினர் பேசும்போது ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியது சம்பந்தமாக நான் கேட்ட கேள்வி இந்த நிதி ஆண்டுக்கு முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதி என்றார்.
இதை முதலில் கூறி இருந்தால் தெரிந்திருக்கும். நாங்கள் உங்களை விட கம்மியாக படித்தவர்கள்தான். கூட்டல் கணக்கு எங்களுக்கு சரியாக தெரிந்தாலும் கூட நீங்கள் இன்னொற்றை சொன்னீர்கள். வேறு ஒரு கூட்டல் கணக்கில் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எங்களுக்கு எங்களது தலைவர் இருக்கிறார். சாதாரணமான ஒரு கிராமத்தில் இருந்து வந்த அவர் இந்த அளவுக்கு இயக்கத்தை வலிமையோடு நடத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால், எந்த கூட்டல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீங்கள் (அ.தி.மு.க.), ஏமாறாமல் இருந்தால் எங்களது வாழ்த்துகள்" என்றார்.
- வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். டெல்லியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில், நீதிபதி யஸ்வந்த வர்மா வீட்டில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தனர். அப்போது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பணம் இருப்பதுபற்றி உச்சநீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஊழல் முறைகேடு தொடர்பான புகாரில் சிக்கிய நிலையில், நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, "நீதித்துறையில் ஊழல் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனை. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை சார்ந்தவர்கள் இதுப்பற்றி பேசுவது முதல்முறை அல்ல. இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது"
"நியமனங்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை கண்காணிக்க உச்சநீதிமன்றத்திற்கு இதுதான் தக்க தருணம். நியமன விவகாரங்கள் வெளிப்படையாகவும், மிகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் மிகவும் தீவிரமான விவகாரம், பிரதமர் மோடி என்ன கூறினாலும் ஊழல் அதிகரித்துவிட்டது," என்று கூறினார்.
- சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.
வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பேருந்தில் குதித்து உள்ளார்.
- சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவன மினிபஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறுகையில்,
ஊழியர்கள் உயிரிழப்பிற்கு தீ விபத்து காரணமல்ல... நாசவேலை தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர், ஏற்கனவே சில ஊழியர்களுடன் தகராறு செய்ததாகவும், அவர்களை பழிவாங்க விரும்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள குறைப்பில் அதிருப்தியில் இருந்த அவர் பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
இறந்த நால்வரில் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ஊழியர்கள் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.
புனே நகருக்கு அருகிலுள்ள ஹின்ஜாவாடி பகுதியில் வ்யோமா கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ் 14 ஊழியர்களை பணியிடத்திற்கு ஏற்றிச்சென்றது.
குற்றம் சாட்டப்பட்டவர் பென்சீனை (அதிகமாக எரியக்கூடிய ரசாயனம்) வாங்கியிருந்தார். டோனர்களைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியையும் அவர் பஸ்சில் வைத்திருந்தார். நேற்று பஸ் ஹின்ஜாவாடி அருகே வந்தபோது, அவர் தீப்பெட்டியை ஏற்றி துணியை தீ வைத்துக் கொளுத்தினார்.
ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உள்ளார். அவர் வெளியே வருவதற்கு முன்பே தீக்காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவசரகால வெளியேறும் கதவை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் 4 ஊழியர்கள் இறந்தனர். மேலும், 6 பயணிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.
சென்னை:
சென்னை வானலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. அதே நேரம் சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வரும் 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி.
- எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது.
கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக பல மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இந்த முடிவு எடுத்துக் காட்டுவதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்று பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.
- அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.
- எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.
* 5 ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்.
* சதவீத அடிப்படையில் கூறி நிதி அமைச்சர் சமாளித்து கொண்டிருக்கிறார்.
* கடனை குறைத்து வருவாய் அதிகரிக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
* தி.மு.க. ஆட்சி அமைத்த நிதி மேலாண்மை குழு 4 ஆண்டுகளில் என்ன அறிக்கை சமர்பித்துள்ளது. நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னர் தான் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.
* மாநில அரசின் வரி வருவாய் 1 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
* மத்திய அரசின் வரி பகிர்வில் 33 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
* மூலதன செலவு வெறும் 57 ஆயிரம் கோடி ரூபாய் என்று தான் கணக்கிடப்பட்டுள்ளது.
* அரசின் கடன் தொடர்பான வெள்ளை அறிக்கை கேட்டோம், அதையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.
* அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.
* எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.
* பட்ஜெட் கணக்கை சரியாக செய்யுங்கள், எங்களது கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
* ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம். அ.தி.மு.க. தன்மானத்தை இழக்காது என்றார்.






