என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். டெல்லியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில், நீதிபதி யஸ்வந்த வர்மா வீட்டில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தனர். அப்போது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், பணம் இருப்பதுபற்றி உச்சநீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

    அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஊழல் முறைகேடு தொடர்பான புகாரில் சிக்கிய நிலையில், நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, "நீதித்துறையில் ஊழல் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனை. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை சார்ந்தவர்கள் இதுப்பற்றி பேசுவது முதல்முறை அல்ல. இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது"

    "நியமனங்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை கண்காணிக்க உச்சநீதிமன்றத்திற்கு இதுதான் தக்க தருணம். நியமன விவகாரங்கள் வெளிப்படையாகவும், மிகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் மிகவும் தீவிரமான விவகாரம், பிரதமர் மோடி என்ன கூறினாலும் ஊழல் அதிகரித்துவிட்டது," என்று கூறினார்.

    • சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.

    அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.

    வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

    இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பேருந்தில் குதித்து உள்ளார்.
    • சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவன மினிபஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறுகையில்,

    ஊழியர்கள் உயிரிழப்பிற்கு தீ விபத்து காரணமல்ல... நாசவேலை தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர், ஏற்கனவே சில ஊழியர்களுடன் தகராறு செய்ததாகவும், அவர்களை பழிவாங்க விரும்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள குறைப்பில் அதிருப்தியில் இருந்த அவர் பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

    இறந்த நால்வரில் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ஊழியர்கள் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.

    புனே நகருக்கு அருகிலுள்ள ஹின்ஜாவாடி பகுதியில் வ்யோமா கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ் 14 ஊழியர்களை பணியிடத்திற்கு ஏற்றிச்சென்றது.

    குற்றம் சாட்டப்பட்டவர் பென்சீனை (அதிகமாக எரியக்கூடிய ரசாயனம்) வாங்கியிருந்தார். டோனர்களைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியையும் அவர் பஸ்சில் வைத்திருந்தார். நேற்று பஸ் ஹின்ஜாவாடி அருகே வந்தபோது, அவர் தீப்பெட்டியை ஏற்றி துணியை தீ வைத்துக் கொளுத்தினார்.

    ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உள்ளார். அவர் வெளியே வருவதற்கு முன்பே தீக்காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவசரகால வெளியேறும் கதவை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் 4 ஊழியர்கள் இறந்தனர். மேலும், 6 பயணிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

    ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

    சென்னை:

    சென்னை வானலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. அதே நேரம் சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வரும் 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    • இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி.
    • எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது.

    கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

    மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக பல மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இந்த முடிவு எடுத்துக் காட்டுவதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

    மேலும், மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்று பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.

    • அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.
    • எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.

    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.

    * 5 ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்.

    * சதவீத அடிப்படையில் கூறி நிதி அமைச்சர் சமாளித்து கொண்டிருக்கிறார்.

    * கடனை குறைத்து வருவாய் அதிகரிக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சி அமைத்த நிதி மேலாண்மை குழு 4 ஆண்டுகளில் என்ன அறிக்கை சமர்பித்துள்ளது. நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னர் தான் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

    * மாநில அரசின் வரி வருவாய் 1 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

    * மத்திய அரசின் வரி பகிர்வில் 33 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

    * மூலதன செலவு வெறும் 57 ஆயிரம் கோடி ரூபாய் என்று தான் கணக்கிடப்பட்டுள்ளது.

    * அரசின் கடன் தொடர்பான வெள்ளை அறிக்கை கேட்டோம், அதையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

    * அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.

    * எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.

    * பட்ஜெட் கணக்கை சரியாக செய்யுங்கள், எங்களது கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

    * ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம். அ.தி.மு.க. தன்மானத்தை இழக்காது என்றார். 

    • குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது.
    • ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக ஐ.பி.எல். உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு அணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள்.

    பேட்டிங்கில் அனைத்து அணிகளுமே அதிரடி காட்டுவதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.பி.எல். போட்டி பெரும் விருந்தாக இருக்கிறது. 18-வது ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை(22-ந்தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் போட்டி நடக்கும் நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறார்கள்.

    போட்டியில் பங்கேற்கும் நேரம் மிகக் குறைவு என்றாலும், பயணிக்கும் தூரம் மற்றும் நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதில் அதிக தூரம் பயணிக்கும் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது.

    சுமார் 2 மாதங்கள் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட பெங்களூரு அணி பல நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் வீரர்கள் லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்.

    நாளை முதல் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்றுள்ள அந்த அணி வீரர்கள், நாட்டின் தெற்கில் உள்ள சென்னைக்கு வருகிறார்கள். பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் 1,500 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்க வேண்டி உள்ளது.

    ஐ.பி.எல். கோப்பையை இந்த முறையாவது வென்று விட வேண்டும் என்ற இலக்குடன் விளையாட உள்ள பெங்களூரு அணி வீரர்களுக்கு அதிக தூர பயணம் என்பது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    அதே நேரத்தில் குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகளை சொந்த மைதானமான ஐதராபாத்தில் விளையாடுகிறது. அந்த அணி வீரர்கள் முதல் வெளியூர் போட்டிக்காக 500 கிலோ மீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறார்கள். இதேபோல் மற்ற அணிகளும் பயணிக்கும் தூரம் தொடர்பான விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 16,184 கிலோமீட்டரும், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் 14,341 கிலோமீட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் 13,537 கிலோ மீட்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 12,730 கிலோமீட்டரும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 12,702 கிலோ மீட்டரும், குஜராத் டைட் டன்ஸ் அணி வீரர்கள் 10,405 கிலோமீட்டரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள் 9,747 கிலோ மீட்டரும், டெல்லி கேப்பிட் டல்ஸ் அணி வீரர்கள் 9,270 கிலோமீட்டரும் விமானத்தில் பயணிக்கிறார்கள்.

    விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் போட்டிகளில் விளையாட ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பறக்க வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    லண்டன்:

    உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் கடுமையான புகை மூட்டமாக இருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையமும் இன்று இரவு 11.59 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

    விமான நிலையத்துக்கு பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    விமான நிலையம் அருகில் இருந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

    • 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
    • நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    மதுரை:

    மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

    15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

    முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை தமிழக பா.ஜ.க.வின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. ஆனால் இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

    இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால் கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட, அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது. அவருக்கு மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை. அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் D.K சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக.

    முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை.

    தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

    அரிசி பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தொடர்ந்து தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

    தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    • இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், உசிலம்பட்டி தொகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 230 கோவில்கள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில் 1, 700 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளன. எஞ்சிய கோவில் நிலங்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.
    • அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

    * அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.

    * வேறு ஒரு இடத்தில் இருந்து வேறு யாரோ ஒருவர் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கிறார். கவனமாக இருங்கள்.

    * வேறு யாரோ ஒருவரின் கணக்குகளை அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும்.

    * அ.தி.மு.க.வை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    * வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார், பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று பேசினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    ×