search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravichandran Ashwin"

    • மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி. சேப்பாக்க அணி தரப்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் குமார் துரைசாமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாராயண் ஜெகதீசன், பாபா அபார்ஜித் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.

    4.5 ஓவர்களில் 65 ரன்கள் அடித்து சேப்பாக் அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. அதிரடியாக விளையாடிய நாராயண் ஜெகதீசன் 32 ரன்களும் பாபா அபார்ஜித் 31 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது. 

    • ஸ்ரீசாந்தின் அலட்சியத்தால் டோனி கோவமடைந்தார்.
    • டோனி அப்படி இருந்து நான் பார்த்ததில்லை.

    மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை பெற்று தந்தவர்.

    இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இவரை குல் கேப்டன் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். காரணம் மைதானத்தில் அழுத்தமாக இடங்களிலும் அமைதியாக இருந்து சாதித்து காட்டியவர்.

    இந்நிலையில் 2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி கோபப்பட்ட சம்பவத்தை தமிழக வீரர் அஸ்வின் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டிருந்த டோனிக்கு நான் ட்ரிங்க்ஸ் எடுத்துச் சென்றேன். அப்போது ஸ்ரீசாந்த் எங்கே என கேட்டார். அவர் ஓய்வு அறையில் இருக்கிறார் என கூறினேன். அவரை உடனடியாக வீரர்கள் அமரும் இடத்திற்கு வர சொல் என்றார். ஆனால் ஸ்ரீசாந்த அதை புறக்கணித்தார்.

    அடுத்த முறை ஹெல்மெட்டுடன் மைதானத்துக்குள் செல்கிறேன். அப்போது டோனி கோபத்துடன் இருந்தார். அவர் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை. ஸ்ரீ எங்கே அவர் என்ன செய்கிறான் என மீண்டும் கேட்டார்.

    அவர் ஓய்வு அறையில் மசாஜ் செய்கிறார் என்று நான் அவரிடம் சொல்கிறேன். அதற்கு டோனி எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஓவரில், ஹெல்மெட்டைத் திருப்பித் தரும்படி என்னை அழைத்தார். அப்போது அமைதியாக இருந்தார். ஹெல்மெட் கொடுக்கும்போது, ஒரு காரியம் செய். ரஞ்சிப் சார் கிட்ட போங்க. ஸ்ரீ-க்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். நாளைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யச் சொல்லுங்கள். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினார்.

    நான் திகைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்க்கிறேன். உடனே டோனி 'என்ன நடந்தது? உனக்கு நான் பேசும் ஆங்கிலம் புரியவில்லையா என கேட்டார்.

    இதனை கேட்ட ஸ்ரீ உடனே எழுந்து உடைகளை அணிந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து ட்ரிங்க்ஸ் கொடுக்கும் கடமைகளை அவரே ஏற்றுக்கொள்கிறார். அடுத்த முறை டோனிக்கு ட்ரிங்க்ஸ் தேவைப்படும்போது, ஸ்ரீசாந்த் அங்கு இருப்பார் என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்று மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பியிருந்தார்.
    • வெற்றிக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி என அவரே கூறினார்.

    கயானா:

    டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இதனிடையே உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக அனைத்து சூழல்களும் மாற்றப்படுவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாக பலர் குற்றச்சாட்டி வந்தனர்.

    குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், அரையிறுதி போட்டியில் மற்ற அணிகள் எங்கு விளையாடப் போகிறது என்று தெரியாமல் இருந்த சூழலில் இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்து பேட்டிங் செய்த அதே மைதானத்தில் தான் இந்தியாவும் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் வெற்றிகுறித்து மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி. இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா உள்ளது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும். இந்தியா இது போன்ற குறைவாக சுழலும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மைக்கேல் வாகனை இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கமாய் கலாய்த்துள்ளார். நகைச்சுவை மற்றும் அறிவுபூர்வமாக வெற்றிபெற்றதாக அஸ்வின் அதில் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், " ∫ 1 dx = x + C. ∫ a dx = ax+ C. ∫ xn dx = ((xn+1)/(n+1))+C ; n≠1... இதனால் தான் இந்தியா வென்றது" என்று அதில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

    • இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
    • இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் டெஸ்ட் அணியின் மட்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். மேலும் டெஸ்ட்டில் 516 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் 9-வது இடத்திலும் இந்திய அளவில் கும்பேவுக்கு அடுத்த (2-வது) இடத்திலும் உள்ளார்.

    இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

    இந்நிலையில் அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பெரிய புத்தக கடையில் அஸ்வின் வாழ்க்கை பயணம் புத்தகம் இருந்தது. என்னை போன்ற ஒருவருக்கு இது ஒரு கனவு எனவும் நானும் எனது தந்தையும் பல புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறோம் மற்றும் நிறைய கதை ஆசிரியர்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் வீடியோவுக்கு தலைப்பிட்டிருந்தார். 

    • சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.
    • அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் ஆனார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொரில் ஹோம் கிரவுண்டில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.

    மேலும், இந்த போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதே போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து பிராவோ 44 விக்கெட்டுகளையும், மார்கெல் 36 விக்கெட்டுகளையும், ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், பொலிஞ்சர் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

    • வருகிற 22-ந் தேதி சென்னையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த போட்டியின் டிக்கெட்டுகள் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட்டுக்கு டிமெண்ட் இருக்கிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் காண என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். உதவி செய்யுங்கள் சிஎஸ்கே நிர்வாகம்.

    என அஸ்வின் கூறியிருந்தார்.

    • அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    சென்னை:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

    அதன் வாயிலாக உலகிலேயே தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100-வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு:-

    "ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்" என்று கலகலப்பாக பேசினார்.

    அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • இந்திய வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
    • 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் சமீபத்தில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி இந்திய வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

    இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிசந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்-இலும் 25.4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

     


    2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் களமிறங்கிய அஸ்வின் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியை போன்றே தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 128 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இத்தனை ஆண்டுகள் விளையாடியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது தாயார் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை கூற முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
    • சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2-வது போட்டியில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே தனி விமானம் மூலம் வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்திய அணிக்காக விளையாட வந்தார்.

    இந்நிலையில் அந்த கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவினார் என தமிழக வீரர் அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள்.

    ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்.

    ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

    அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது.

    அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார். டோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • இங்கிலாந்து அணியின் கிராலி அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்த்தார்.

    தர்மசாலா:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது.

    இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. 4 போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றார். தேவ்தத் படிக்கல் டெஸ்டில் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 5-வது இந்திய வீரர் ஆவார். ஏற்கனவே ரஜத் படிதார் துருவ் ஜூரல், சர்பிராஸ்கான், ஆகாஸ் தீப் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். காயம் அடைந்த ரஜத் படிதார் இடத்தில் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

    இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு மார்க்வுட் இடம் பெற்றார்.

    இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோக்கும் இன்று 100-வது டெஸ்டில் விளையாடினார்கள். 100-வது டெஸ்டில் இதுவரை 76 வீரர்கள் விளையாடி உள்ளனர்.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கிராவ்லி யும், பென் டக்கெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 14.2 ஓவர்களில் 50 ரன்னை தொட்டது.

    இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென்டக்கெட் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    அப்போது ஸ்கோர் 64 ஆக இருந்தது. அடுத்து ஆலி போப் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரியில் 50 ரன்னை தொட்டார். அவரது 14-வது அரை சதமாகும்.

    2-வது விக்கெட் ஜோடியையும் குல்தீப் யாதவே பிரித்தார். போப் 11 ரன்னில் அவுட் ஆனார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. கிராவ்லி 61 ரன்னில் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய குல்தீப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிராலி 79 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 29 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 0 ரன்னிலும் குல்தீப் ஓவரில் வெளியேறினார்.

    இதனையடுத்து அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அஸ்வினும் அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 57.4 ஓவரில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
    • முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும். 

    இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர். 

    • இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
    • இதன் மூலம் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×