என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உள்ளூர் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது- அஸ்வின் கருத்து
- சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது.
- அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.
சென்னை:
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் எடுத்தார். மேலும் ஆயுஷ் லோஹருகா, சகிபுல் கானி ஆகியோரும் சதம் அடித்தனர்.
இந்த நிலையில் உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்து உள்ளார்.
சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இது அணிகளுக்கு இடையே சரியான போட்டி உருவாகும் வாய்ப்பை முழுமையாக நீக்குகிறது. வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
ஆனால் நான் மீண்டும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சில அணிகளிடையே தரத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இது ஒருதலைப்பட்சமாக மாறி எந்தவித போட்டியும் இல்லாமல் போகிறது. இது ஒரு சிறந்த சூழ்நிலை அல்ல.
வைபவ் சூர்யவன்ஷி என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்கிறார். ஆனால் அருணாச்சலப்பிர தேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






