என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது.
    • அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம்.

    ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.

    மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற "செமிகான்இந்தியா 2025" மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் பேசிய மோடி, "உலகம் இந்தியாவை நம்புகிறது, உலகம் இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்று நான் இங்கே இருக்கிறேன். அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது, ஆனால் 'சிப்'கள் டிஜிட்டல் வைரங்கள். நமது கடந்த நூற்றாண்டு எண்ணெயால் வடிவமைக்கப்பட்டது... ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது. இந்த சிப்உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.

    • தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள்.
    • துஷ்பிரயோகம் எனது தாயாருக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தாயாருக்கும் அவமானமாகும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மேடையில் எனது தாயாரை அவமானப்படுத்தினார்கள். இந்த துஷ்பிரயோகம் எனது தாயாருக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தாயாருக்கும் அவமானமாகும். அம்மாக்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அவமானம்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
    • இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    சென்னை:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

    மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

    பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ச்சுன்ராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், பாதிப்புகளை சரிகட்ட மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடி பாதி ட்ரம்ப் பாதி இருக்கும் முகமூடி அணிந்து கட்சியினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி.
    • கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

    திருப்பூர்:

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி. நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார் .

    மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை. உக்ரைன் மீது ரஷியா போர் நடத்துகிறது. அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார். அரசு வணிகம் தவிர்த்து தனியாருக்கு வாங்கி தருகிறது. அவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு விற்பனை செய்யாமல் ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பயன் இல்லை.

    கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்த லாபம் முழுவதும் அம்பானிக்கு சென்று சேர்கிறது. பல காரணங்கள் இருந்தாலும் இந்த வர்த்தகம் காரணமாகவே வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நம் நாட்டு பொருள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும். மற்ற நாட்டு தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும். இதனால் நம் பொருட்கள் விற்பனை ஆகாது. வெறும் ஜவுளி மட்டும் அல்ல. இறால் ஏற்றுமதி, நவரத்தின கற்கள் என அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு சிம்பிள் சொல்யூசன் அதானியை அழைத்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்ல வேண்டும். இந்த வரி விதிப்பால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை . ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாம் பாதிக்கப்படுகிறோம். சனாதன அரசியலை திணிக்கிறார்கள், மதவெறியை தூண்டுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., பருப்பு வேகவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாதுகாப்பு அரண். மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்து நிற்பது தான் நமது கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும் என்றார். 

    • விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார்
    • விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'விசாரணை' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், ஆங்கில யூடியூப் சேனலான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் சேனலுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன், விசாரணை படம் குறித்து இதுவரை தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    பேட்டியில் பேசிய வெற்றிமாறன், "விசாரணை படத்தின் கதையோடு தனுஷைச் சந்திக்கச் சென்றேன். படத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று மட்டும் கேட்டார். நான் சொன்ன பணத்தை அவர் கொடுத்தார். பின்பு விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார். அந்த மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார்.

    விசாரணை படத்தை நாங்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்திற்கு எடுத்தோம். இந்த படத்தில் நானும் நடிகர் தினேஷும் நடிகர் கிஷோரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் எடிட்டர் கிஷோரும் சம்பளம் வாங்கவில்லை.

    சமுத்திரக்கனி மட்டும் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டார். அவருக்கு நாங்கள் சம்பளம் வாங்கவில்லை என்று தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் அட்வான்ஸ் வாங்கி இருக்கமாட்டார்.

    விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது. அந்த வகையில் அந்த படம் வெற்றிப் படம் தான். ஒருவேளை அந்த படத்திற்கான நாங்கள் சம்பளம் வாங்கி இருந்தால் அந்த படத்தை அப்போது வணிக ரீதியாக வெற்றி படமாக மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

    இன்று விசாரணை படத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூபாய் 8 கோடிகள் வரை செல்வாகும். நாங்கள் அந்த படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்தோம். இந்த கதையை உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன்" என்று தெரிவித்தார்.

    • டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது. டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை நதியின் நீர்மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது. இதனால் யமுனை நதியின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    யமுனை உட்பட சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததால், யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறக்க தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிப்பு ஏற்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருகிராமில் பெய்த கனமழையால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர்.

    யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், பழைய ரெயில் பாலத்தில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    வெள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வயல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. நேற்று இரவு முதல் மக்களை மீட்டு வருகிறோம். மக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்.

    நேற்று இரவு முதல் 50-60 பேரை மீட்டுள்ளோம். சிக்கித் தவிக்கும் கால்நடைகளையும் மீட்டு வருகிறோம். இந்த படகுகள் டெல்லி அரசின் சார்பாக இயக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

    • நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில், வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார்.

    தற்போது வெனஸ்டே தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது.

    இந்நிலையில், வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக ஆலோசனை.
    • கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கு காலக்கெடு வைக்கப்பட்டது.

    அந்தக் காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ரகசியமாக பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை டாக்டர் ராமதாசிடம் வழங்கினர்.

    இன்னும் 2 நாட்களில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என நேற்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக பா.மக. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளராக தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர்கள் 108பேரும், மாவட்டத் தலைவர்கள் 108பேரும், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் 111பேரும், மாவட்ட தலைவர்கள் 111 பேரும் கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார். 

    • நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது.
    • நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.

    சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பேட் கேர்ள்’.
    • 'காந்தி கண்ணாடி' படத்தில் கே.பி.ஒய். பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'தலைவன் தலைவி', 'கூலி', படங்கள் வெளியானது. இவ்விரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், இம்மாதம் (செப்டம்பர்) வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்...

    வருகிற 5-ந்தேதி 4 படங்கள் வெளியாக உள்ளது. அவை, 'மதராஸி', 'பேட் கேர்ள்', 'காட்டி', 'காந்தி கண்ணாடி' உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் 'பேட் கேர்ள்'. வர்ஷா பரத் இயக்கி உள்ள இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

    கிரிஷ் ஜகாரலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள 'பொலிட்டிக்கல் த்ரில்லர் காட்டி'. அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பின் 'காட்டி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

    'காந்தி கண்ணாடி' படத்தில் கே.பி.ஒய். பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பாலாஜி கே ராஜா கையாள, சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

    செப்டம்பர் 12-ந்தி வெளியாகும் படங்கள்...

    * மிராய்

    * யோலோ

    * பாம்ப்

    * குமார சம்பவம்

    செப்டம்பர் 19-ந்தேதி வெளியாகும் படங்கள்...

    * கிஸ்

    * தண்டகாரண்யம்

    * சக்தி திருமகன்

    செப்டம்பர் 25-ந்தேதி பவன் கல்யாண் பிரியங்கா மோகன் நடித்து தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'ஓஜி' படமும், பல்டி உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன. 

    • சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
    • முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

    * இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 5 ஆண்டு காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே தி.மு.க. அரசு தமிழகத்தை மீட்டுள்ளது.

    * கொரோனா கால நெருக்கடிகள், நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.

    * உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

    * 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.17%, 4.91% ஆக இருந்த நிதி பற்றாக்குறை 3% ஆக குறைந்துள்ளது.

    * சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம்.

    * உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம். இது 10 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாகும்.

    * தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது.

    * 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    * முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    * நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 3.28 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    * தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்கள், 14 நியூ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.

    * மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.

    * மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×