என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே கால்வாய், மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ந் தேதி 69.46 அடியாக இருந்தது. இதனையடுத்து 58-ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடிநீர் வீதம் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும், தண்ணீர் வெளியேறியதால் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2299 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5063 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக 58-ம் கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீர் நின்றுபோனது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.10 அடியாக உள்ளது. வரத்து 1051 கன அடி. திறப்பு 1711 கன அடி. இருப்பு 5656 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு அணை 9.4, உத்தமபாளையம் 3, வீரபாண்டி 2.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    பழனி:

    தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

    மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்த நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்திருந்தது. இதன் மூலம் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை பயணிக்க தொடங்கிவிட்டதோ? என்று பேசும் அளவுக்கு விலை உயர்வு இருந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்து இருந்தது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,550-க்கும் சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920

    13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200

    12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600

    10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-11-2025- ஒரு கிராம் ரூ.180

    13-11-2025- ஒரு கிராம் ரூ.183

    12-11-2025- ஒரு கிராம் ரூ.173

    11-11-2025- ஒரு கிராம் ரூ.170

    10-11-2025- ஒரு கிராம் ரூ.169

    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • அணையில் தற்போது 82.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 208 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் தற்போது 82.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்த காலத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் பணி.
    • தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால் தி.மு.க. களத்தில் இருக்கிறது.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தியாவில் தேர்தல் ஆணையமே திருடனாக மாறிவிட்டது.

    * SIR திட்டத்தை அமல்படுத்திய தேர்தல் ஆணையம் திருடன் என்றால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெரும் திருடர்கள்.

    * தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்த காலத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் பணி.

    * தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால் தி.மு.க. களத்தில் இருக்கிறது.

    * திருடர்களிடம் இருந்து தேர்தல் ஆணையத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
    • தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    * காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை.

    * காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்

    * காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.

    * தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி.

    * காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    * தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    * அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

    * பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்.

    * தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை சீசனில் ரெயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது.

    அந்த வகையில், ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்ததால் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. 

    • பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.
    • பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.

    பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.

    * பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.

    * பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்.

    * தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ் நிலைக்கு சென்றுவிட்டது.

    * பீகார் தேர்தல் முடிவானது தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயலை வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
    • வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில், இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில்கள் இருக்கை வசதி கொண்டதாக இருப்பதால் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    எனவே, இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில், கடந்த ஆண்டு முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றது. பின்னர், ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டுவரப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோல, 2-வது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து தற்போது ஆமதாபாத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் சேவைகளும் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதேபோல, வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரெயிலின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் மார்ச் மாத இறுதிக்குள் கூடுதலாக 8 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேவைக்கேற்ப ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணி நடைபெறும். இதேபோல, பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கன்னியாகுமரி வரையில் ஒரு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.

    இவ்வாறு கூறினார்கள்.

    • ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
    • 7 மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, 'நீரிழிவு நோய் வகை -1' விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தேசிய நலவாழ்வு குழுமத்துடன் இணைந்து பணியாற்றும் பங்குதாரர்களை சிறப்பித்தார்.

    அதைதொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கர்ப்பகால நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்காது என்பது குறித்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான மாதிரி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.

    சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நெல்லை, தர்மபுரி, திருச்சி ஆகிய 7 மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2.5 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.

    நீரிழிவு நோய் பாதிப்பு இந்திய அளவில் 12 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 13 சதவீதமாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பாதிப்புகள் இருந்தாலும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதார இயக்குனர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்குனர் சுகந்தி ராஜகுமாரி, ஊரகநலப்பணிகள் இயக்குனர் சித்ரா, நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் ஷேசையா மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×