என் மலர்
இந்தியா
- பாதிக்கப்பட்டவர்களுடன் டெல்லியில தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தார்.
- தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு இடைத்தரகராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம்சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.
தேர்தல் ஆணையம் பாஜக-வின் இடைத்தரகராக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-
* எங்களுக்கு பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் SIR-ஆல் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற நான் லட்சக்கணக்கான மக்களை இங்கு அழைத்து வர முடியும்.
* SIR-ஆல் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை.
* தேர்தலுக்கு சற்று முன்னதாக SIR நடத்தப்படுவது ஏன்?
* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமெ நடத்தப்படுகிறது. 4 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 3 மாநிலங்களில் SIR நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் அசாமில் நடத்தப்படவில்லை.
* எந்தவித திட்டமும் இல்லாமல் 2 முதல் 3 மாதங்களில் நடத்தி முடிப்பது சாத்தியமாகுமா?
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
- மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.
இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்
- இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3657 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1220 புள்ளிகள் வரையும் உயர்ந்து உயர்வுடன் தொடங்கியது.
இந்நிலையில், இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 2072 புள்ளிகள் உயர்ந்து 83,739 புள்ளிகளிலும் நிஃப்டி 639 புள்ளிகள் உயர்ந்து 25,727 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றுள்ளது.
- இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை.
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி "உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை. இந்த வெற்றிகளால் என்.டி.ஏ. திருப்தியடைந்து விடக் கூடாது. சிறந்த பணிகளை தொடர வேண்டும்" என்று கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் 39 நாடுகளுடன் வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்ததாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- மாணிக்கம் தாகூர் உள்பட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.
- மீதமுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க இயலாது.
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், சு. வெங்கடேசன் உள்பட மற்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்களும் இதில் அடங்குவர்.
சபாநாயகரை நோக்கி பேப்பரை கிழித்து எறிந்ததாக இவர்களுக்கு எதிராக கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த 9 பேரும் மீதமுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.
- மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே.
- இவர் முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமாக இருந்து வருபவர் பங்கஜா முண்டே. இவர் முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.
இந்நிலையில், பங்கஜா முண்டே இன்று காலை லத்தூர் செல்வதற்காக புறப்பட்டார். மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பங்கஜா முண்டே சம்பாஜி நகரில் இருந்து லத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அப்போது அவர் பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.
கடந்த வாரம் மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியான அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்துச் சிதறியதில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
- நாட்டு நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றிரவு டெலிபோன் மூலம் பேசினார். பின்னர் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் ஒப்பந்தம் குறித்து பதிவிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
Zoro Hour முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்த தகவல் வாஷிங்டனில் இருந்து பெறப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
இதற்கு ஆளுங்கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகளின் விரக்தி வெளிப்படுகிறது. நல்ல விசயங்களை கூட தவறானதாக பார்க்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்பதை இந்த அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்றார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாட்டின் நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளன என குரல் எழுப்பினர். அதற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கும்போது, அதை கேட்க வேண்டும் என்றார். மேலும், விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது. எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றார்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
- உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
- இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள குஞ்சத்தூர் பகுதியை சேர்ந்தவர் உம்மர் பாரூக். வளைகுடா நாட்டில் பணியாற்றிய இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.
உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் உம்மர்பாரூக், தனது குடும்பத்துடன் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர்கள், தங்களுக்குள் பிரச்சனை இருக்கும் 10 சென்ட் நிலம் தொடர்பாக பேசியிருக்கின்றனர்.
இதனால் உம்மர் பாரூக் மற்றும் அவரது தங்கை கணவர் ஷேகுஞ்சி(வயது53) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களின் மகள் படிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் நிலத்தை எழுதித் தர முடியாது என்று உம்மர் பாரூக் மனைவியின் தங்கை மற்றும் ஷேகுஞ்சி ஆகியோர் மறுத்துவிட்டனர்.
அதில் ஆத்திரமடைந்த உம்மர் பாரூக், தன்னிடம் இருந்த கத்தியால் ஷே குஞ்சியை குத்தினார். அந்தநேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உம்மர்பாரூக்கின் மகள் ஜூமைலா, தனது தந்தையை தடுத்தார். அப்போது மாணவி ஜூமைலாவின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.
உம்மர் பாரூக்கின் தாக்குதலில் சிக்கி கத்திக்குத்து காயமடைந்த அவரது மகள் ஜூமைலா மற்றும் மனைவியின் தங்கை கணவர் ஷேகுஞ்சி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவி ஜூமைலா பரிதாபமாக இறந்துவிட்டார். ஷேகுஞ்சிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மாணவி கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து உம்மர் பாரூக்கை கைது செய்தனர். உம்மர் பாரூக் மோதலில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தாக்குதலின் போது மகளை கவனிக்காமல் கத்தியால் குத்திவிட்டதாக தெரிகிறது.
குடும்பத்தினர் மோதலில் விலக்கிய மாணவி, பரிதாபமாக பலியாகி விட்டார். இந்த சம்பவம் காசர்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்.
- அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் என கூறினார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மோடி ஜி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்."
"முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். முதல் முறையாக, குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடி ஜி சமரசத்திற்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உங்கள் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார்."
"நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.
- சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது.
- 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா பேசி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.
இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுத்துள்ளார்.
அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன். அவரும் என் பக்கம் தான் நிற்பார். எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும்" என்று டி.கே சிவகுமார் தெரிவித்தார்.
- சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
ஒடிசாவின் பாலசோரில், ஒருவர் ஒரு ராட்சத பாம்பை தன் கைகளால் மட்டுமல்லாமல், வாயாலும் கையாளும் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தக் குறுகிய வீடியோவின் தொடக்கத்தில், ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற அந்த நபர், ஒரு பாம்பை பிடித்து தன் வாயில் வைத்துக் கொள்கிறார். அவர் இதை மிக வேகமாக செய்கிறார், அதனால் அந்த பாம்பு எதுவும் செய்ய முடியாதவாறு தெரிகிறது.
அடுத்து, அவர் அந்த பாம்பை தன் வாயில் வைத்தபடியே சுற்றி திரிகிறார், பின்னர் அதை தரையில் வைத்து, வெறும் கைகளால் பிடித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் அந்த பாம்பை அவரிடமிருந்து எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அவரை தள்ளிவிட்டு, விலகி நிற்குமாறு கூறுகிறார். ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
சில வினாடிகளுக்கு பிறகு, அவர் அந்த பாம்பைத் தரையில் மெதுவாக வைத்து, அதனுடன் விளையாடிவிட்டு, பின்னர் எந்த கருவிகளும் இல்லாமல் ஒரு சாக்குப்பையில் போடுகிறார். வீடியோவின் இறுதியில் அவர் மற்றொரு பாம்பை எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
முன்னதாக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் கொண்ட கருநாக பாம்பால் கடிக்கப்பட்டார். உதவிக்காக ஓடுவதற்கு பதிலாக, அந்த நபர் தன்னைக் கடித்த உடனேயே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துண்டித்தார்.
பின்னர் அவர் அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதைத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அதனுடனேயே உறங்க சென்றதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நள்ளிரவுக்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவி, அவரது நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
- மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.






