என் மலர்
இந்தியா

கேரளாவில் குடும்பத்தினர் சண்டையை விலக்கிய பள்ளி மாணவி குத்திக்கொலை- தந்தை கைது
- உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
- இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள குஞ்சத்தூர் பகுதியை சேர்ந்தவர் உம்மர் பாரூக். வளைகுடா நாட்டில் பணியாற்றிய இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.
உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் உம்மர்பாரூக், தனது குடும்பத்துடன் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர்கள், தங்களுக்குள் பிரச்சனை இருக்கும் 10 சென்ட் நிலம் தொடர்பாக பேசியிருக்கின்றனர்.
இதனால் உம்மர் பாரூக் மற்றும் அவரது தங்கை கணவர் ஷேகுஞ்சி(வயது53) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களின் மகள் படிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் நிலத்தை எழுதித் தர முடியாது என்று உம்மர் பாரூக் மனைவியின் தங்கை மற்றும் ஷேகுஞ்சி ஆகியோர் மறுத்துவிட்டனர்.
அதில் ஆத்திரமடைந்த உம்மர் பாரூக், தன்னிடம் இருந்த கத்தியால் ஷே குஞ்சியை குத்தினார். அந்தநேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உம்மர்பாரூக்கின் மகள் ஜூமைலா, தனது தந்தையை தடுத்தார். அப்போது மாணவி ஜூமைலாவின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.
உம்மர் பாரூக்கின் தாக்குதலில் சிக்கி கத்திக்குத்து காயமடைந்த அவரது மகள் ஜூமைலா மற்றும் மனைவியின் தங்கை கணவர் ஷேகுஞ்சி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவி ஜூமைலா பரிதாபமாக இறந்துவிட்டார். ஷேகுஞ்சிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மாணவி கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து உம்மர் பாரூக்கை கைது செய்தனர். உம்மர் பாரூக் மோதலில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தாக்குதலின் போது மகளை கவனிக்காமல் கத்தியால் குத்திவிட்டதாக தெரிகிறது.
குடும்பத்தினர் மோதலில் விலக்கிய மாணவி, பரிதாபமாக பலியாகி விட்டார். இந்த சம்பவம் காசர்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






