என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு.
- நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.
சென்னை :
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.
நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.
மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.
தமிழ்நாடு பொறுக்காது! என்று தெரிவித்துள்ளார்.
- அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார்.
- போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.
இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதனால் போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.
அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.
- வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார்.
- மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வேலூர்:
அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வேலூர் மண்டலம் சார்பில் லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார்.
அங்கு அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு வருகை தருகிறார்.
மாநாட்டிற்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை தாங்குகிறார். பாசறை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, மாநாட்டு வளாகத்திற்குள் தலைவர்களின் மின்விளக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது.
- தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
திருப்பூர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இங்கு பல்வேறு நாடுகள் உருவாகும்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு நிதியில் பெரும் வருவாயை கொடுப்பது தமிழ்நாடும் ஒன்று.
மும்மொழிக் கொள்கை காரணமாக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்காதது வரவேற்கத்தக்கது.
மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
மத்திய அரசை எதிர்த்தால் ED, IT என விசாரணை அமைப்புகள் ரெய்டு வரும் என பயப்படுகின்றனர். என் வீட்டிற்கு ED, IT போன்றவை ரெய்டு வரமுடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமில்லை.
கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதகம் வரும் போது ஆட்சியாளர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்றார்.
- மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமையும்.
- பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.
திருச்சி:
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.
திருச்சி பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டோம்.
ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
- காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
கால்நடைகளை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 725 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்கள் 350 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 7.45 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இதில் கிழக்கு தாசில்தார் மீனாதேவி, மண்டல துணை வட்டாட்சியர் பிரேம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. சுல்தான் பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, குக்கர், ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் லிங்கவாடியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22), தவசி மேடையைச் சேர்ந்த பாதுகாப்பு குழு விக்டர் (28), மதுரையைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் ஆனந்த்(29), நொச்சி ஓடைபட்டியை சேர்ந்த பார்வையாளர் தனுஷ் ராஜா (22) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வம், மகேஷ், புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. சிபி சாய் சவுந்தர்யன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
ஒகேனக்கல்:
தமிழக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவில் நீர்வரத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வழியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று குறைந்து வினாடிக்கு 1200 கன அடியாக வருகிறது. மேலும் இந்த நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
தற்போது வரும் இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வேகம் குறைந்து கொட்டி செல்கின்றன.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
- மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
- கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளன.
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செயல்படுத்த தவறினால், நாய்கள் அனைத்தையும் கடித்து பழகிவிடும்.
தெரு நாய் கடித்து ஆடு உள்ளிட்டவை இறந்தால், அடுத்த நாளே இழப்பீடு வழங்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இப்பிரச்சனையில் போதிய முயற்சி இல்லை. மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். இது, இந்த ஆட்சியின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின் முதல்வர் இன்னும் வேகமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.
அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி, போலியான வெற்றி என இ.பி.எஸ்., கூறுவதை ஏற்க முடியாது. கடந்த இடைத் தேர்தலில் பெற்ற ஓட்டை விட தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதை சிந்திக்க வேண்டும்.
கள்ளச் சாராய சாவு, அதற்கான கொலைகள், மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை போன்றவை தொடர்ச்சியாக நடப்பவை, இதில் அரசு நடவடிக்கை எடுத்தாலும், சம்பவங்கள் தொடர்வதை பார்க்க முடிகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை தேவை.
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் செயல்பாட்டை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அவர் 'திஷா' கூட்டத்தில் பங்கேற்றதில் எந்த தவறுமில்லை. ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்கேற்பது சரிதான்.
அதேநேரம், அவரது கட்சி விசுவாசத்தை யாருடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்பது போன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது, உட்கட்சி பிரச்சனை.
இதை சரி செய்தால், அவர்கள் ஒன்றிணைவார்கள். 'சிஓட்டர்ஸ்' கருத்து கணிப்பில் தி.மு.க., 5 சதவீதமும், பா.ஜ.க, 3 சதவீதமும் கூடுதல் ஓட்டுக்களை பெற்றுள்ளதை, தனிப்பட்டதாக பார்க்கக்கூடாது. அது தி.மு.க.,வுக்கானது மட்டுமல்ல. அக்கூட்டணிக்கானது.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு ஒய் பாதுகாப்பு ஏன் என்று யாருக்கும், புரியவில்லை. அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. மாநில அரசோடும் கலந்து பேசவில்லை, இதனால் பாதுகாப்புக்கான என்ன அரசியல் இருக்கிறது என்று தேர்தல் நெருங்க நெருங்க தான் காரணம் முழுமையாக தெரியவரும்.
இந்திய கூட்டணியில் பிளவு என்று சொல்வதற்கு எல்லாம் முதல்வர் தெளிவாக விளக்கம் சொல்லிவிட்டார். தோழமை கட்சிகள் போராட்டம் திட்டமிட்டு செய்வதில்லை, ஜனநாயாக ரீதியாக தான் செய்கிறார்கள் என்று முதல்வர் சொல்லி விட்டார்.
தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கள் இயக்கம் நல்லசாமி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்.
இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். பொருளாதார ரீதியாக மேம்படுவர். இதுபற்றி, 3 முறை சட்டசபையிலும், முதல்வரிடமும் பேசி, கள்ளுக்கான தடையை நீக்க கோரி உள்ளேன். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என நானும் ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை;
- ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை; இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு என்று கூறி, அந்த ஆணையத்தை எல்லையில்லா அதிகாரம் பெற்ற அமைப்பைப் போன்ற தோற்றத்தை அரசும், மின்சார வாரியமும் ஏற்படுத்துகின்றன.
ஆனால், மின்சாரக் கொள்முதல் போன்ற தங்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். இதேபோக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது. இனி வரும் காலங்களிலும் இத்தகையப் போக்கு தொடர்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
- தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை அரசு, அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதித்தும், அதனை கட்டத்தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.
பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீனவர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. இது கண்டனத்திற்குரியது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., மீனவர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?
- இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.
'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள்.
வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?
இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.
எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
- 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
- போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட காளைகள், 800-க்கும் அதி கமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இன்று 3-வது முறையாக சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக வருவாய் கோட்ட அலுவலர் ஷாலினி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களமாடி வருகிறார்கள். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளை களை அடக்கும் வீரர்களுக்கும் தங்கநாணயம், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதி சான்று வழங்கிய வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர்.
பொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து குதூகலமாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.
இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பட்டிமன்ற பேச்சாளர் பிக்பாஸ் புகழ் அன்னபாரதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பொழுது போக்கு நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இடையே நவீன இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.






