என் மலர்
நீங்கள் தேடியது "Kongunadu People's National Party"
- மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
- கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளன.
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செயல்படுத்த தவறினால், நாய்கள் அனைத்தையும் கடித்து பழகிவிடும்.
தெரு நாய் கடித்து ஆடு உள்ளிட்டவை இறந்தால், அடுத்த நாளே இழப்பீடு வழங்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இப்பிரச்சனையில் போதிய முயற்சி இல்லை. மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். இது, இந்த ஆட்சியின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின் முதல்வர் இன்னும் வேகமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.
அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி, போலியான வெற்றி என இ.பி.எஸ்., கூறுவதை ஏற்க முடியாது. கடந்த இடைத் தேர்தலில் பெற்ற ஓட்டை விட தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதை சிந்திக்க வேண்டும்.
கள்ளச் சாராய சாவு, அதற்கான கொலைகள், மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை போன்றவை தொடர்ச்சியாக நடப்பவை, இதில் அரசு நடவடிக்கை எடுத்தாலும், சம்பவங்கள் தொடர்வதை பார்க்க முடிகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை தேவை.
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் செயல்பாட்டை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அவர் 'திஷா' கூட்டத்தில் பங்கேற்றதில் எந்த தவறுமில்லை. ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்கேற்பது சரிதான்.
அதேநேரம், அவரது கட்சி விசுவாசத்தை யாருடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்பது போன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது, உட்கட்சி பிரச்சனை.
இதை சரி செய்தால், அவர்கள் ஒன்றிணைவார்கள். 'சிஓட்டர்ஸ்' கருத்து கணிப்பில் தி.மு.க., 5 சதவீதமும், பா.ஜ.க, 3 சதவீதமும் கூடுதல் ஓட்டுக்களை பெற்றுள்ளதை, தனிப்பட்டதாக பார்க்கக்கூடாது. அது தி.மு.க.,வுக்கானது மட்டுமல்ல. அக்கூட்டணிக்கானது.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு ஒய் பாதுகாப்பு ஏன் என்று யாருக்கும், புரியவில்லை. அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. மாநில அரசோடும் கலந்து பேசவில்லை, இதனால் பாதுகாப்புக்கான என்ன அரசியல் இருக்கிறது என்று தேர்தல் நெருங்க நெருங்க தான் காரணம் முழுமையாக தெரியவரும்.
இந்திய கூட்டணியில் பிளவு என்று சொல்வதற்கு எல்லாம் முதல்வர் தெளிவாக விளக்கம் சொல்லிவிட்டார். தோழமை கட்சிகள் போராட்டம் திட்டமிட்டு செய்வதில்லை, ஜனநாயாக ரீதியாக தான் செய்கிறார்கள் என்று முதல்வர் சொல்லி விட்டார்.
தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கள் இயக்கம் நல்லசாமி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்.
இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். பொருளாதார ரீதியாக மேம்படுவர். இதுபற்றி, 3 முறை சட்டசபையிலும், முதல்வரிடமும் பேசி, கள்ளுக்கான தடையை நீக்க கோரி உள்ளேன். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என நானும் ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
- தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம்.
கோவை:
தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்தாலும், தற்போதே தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
கூட்டணி அமைப்பது, எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுவது, கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எது என்பதை கண்டறிவது, என பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்டது. அந்த கட்சியின் பொதுச்செயலாளரான ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தி.மு.க. கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடருமா? அல்லது கூட்டணி மாறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் தான் தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நான் பாராட்டி பேசியதை வைத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைகிறதா? என்று கேட்பது தவறு. நாங்கள் நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம்.
அண்மைக்காலமாக அ.தி.மு.க.வில் நடந்து வரும் பிரச்சனை குறித்து என்னிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நான், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது உள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் புதியதாக அ.தி.மு.க.விற்கு வேறு யாரையாவது நியமிப்பது நன்றாக இருக்காது என்ற ஒரு பொதுவான கருத்தை தான் நான் தெரிவித்தேன். அவ்வளவு தான். அதில் வேறு ஒன்றுமில்லை. அந்த கருத்தை வைத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று பேசுவது சரியல்ல.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கட்சி வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இன்று நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். இதற்காக ஏற்கனவே நன்றி தெரிவித்து இருக்கிறோம்.
அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நீர் காளிங்கராயன் மலையிலிருந்து தான் வருகிறது. எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன்-அத்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






