என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
- பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர்.
இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் வந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் பழைய பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சென்று, புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும்" என்றார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன.
- தி.மு.க. அரசு உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர தி.மு.க. நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் தி.மு.க. அரசு தோல்வியடைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க. அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது தி.மு.க. அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இங்குள்ள அம்மனை ‘சீதளாதேவி’ எனவும் அழைப்பர்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜம் பேட்டையில் பிரசித்தி பெற்ற மகா மாாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனை 'சீதளாதேவி' எனவும் அழைப்பர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி வரை நடக்கிறது. இதனை யொட்டி கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று (16-ந்தேதி) 2-ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வெள்ளி அன்ன வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா இன்று (பங்குனி 2-ம் ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதாவது, சகல விதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் பூரணநலம் பெற வேண்டி அம்மனை வேண்டிக் கொள்வர். பின்னர், உடல் நலம் குணமடைந்ததும், பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
நோயில் இருந்து குணமடைந்தவர்களை ஆற்றில் குளிக்க வைத்து, நெற்றியில் திருநீறு பூசி, பச்சை பாடையில் படுக்க வைத்து இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் எப்படி நடக்குமோ அதை போன்று அவர்களை, அவர்களது உறவினர்கள் முன்னிலையில் பாடையில் படுக்க வைத்து கண், கால்களை கட்டி, வாயில் வாய்க்கரிசி போட்டு, உறவினர்கள் 4 பேர் பாடையை சுமந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வருவர். பின்னர், கோவில் பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வார்.
இதேபோல், குழந்தைபேறு இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொட்டில் காவடி எடுத்தும், அவரவர்களின் வழக்கப்படி ரதக்காவடி, அலகுக்காவடி, பக்க அலகு காவடி, பால் அலகுக்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனை காண டெல்டா மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிதிரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
- சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.
அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.
இந்தநிலையில் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான காளீஸ்வரன் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபற்றிய விபரம் வரு மாறு:-
மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.
பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.
வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார்.
வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
- மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
- அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.
ஒட்டன்சத்திரம்:
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற ஒருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான நல்லமுத்து என்ற கண்ணன் (வயது 40) மூலம் அந்த நோட்டுகளை பெற்று புதுச்சேரியில் மாற்றியதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நல்லமுத்து தரகராக செயல்பட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதுச்சேரியில் மாற்றி கொடுத்துள்ளார். இவருக்கு சேலம் மாவட்டம் சுந்தரம்வரதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் புதுச்சேரியில் புதிய நோட்டுக்கு பழைய நோட்டு தருவதாக மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ராமானுஜம் (48), பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற 20 சதவீதம் கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம்
கன்னிவாடி அடுத்து புதுப்பட்டிக்கு வந்த புதுச்சேரி போலீசார் ரெட்டியார்சத்திரம் போலீசார் உதவியுடன் நல்லமுத்து என்ற கண்ணன் குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதை அடுத்து அங்கு விரைந்து சென்று புதுச்சேரி போலீசார் நல்ல முத்து என்ற கண்ணனை கைது செய்து விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்லமுத்து என்ற கண்ணன் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு ரெயில்களை இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
- 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரும்பாலான ரெயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகமுள்ள விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக செல்லும் விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறை தொடங்கும்போது பொதுமக்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள்.
எனவே, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரெயில்களை இயக்கவும், வழக்கமான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரெயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்களில் முன்பதிவு, காத்திருப்போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரெயில்வே தயாரித்து வருகிறது.
இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை:
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.
இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-
திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.
அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.
இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.
- ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்
எத்தனை ஆடுகள் வந்தாலும் பள்ளபட்டிக்கு உள்ளேயும் வரமுடியாது, வந்துவிட்டால் வெளியேயும் செல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
- அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.






