search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumani Ramadoss"

    • கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

    அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இன்று 86-ஆம் பிறந்தநாள். அவரால் வாழ்வு பெற்ற கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆயிரம் பிறை கண்டும் இன்னும் ஓய்வு என்பதை அறியாமல் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பிதாமகன் அவர். இளம் வயதில் கல்விக்காக அவர் பட்ட பாடுகள் தான், எனக்கிருந்த தடைகள் வேறு எவருக்கும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், இன்றைய தலைமுறை எளிதாக கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் போராடி பெற்றுத்தர வைத்திருக்கிறது அந்த பெரிய மனிதரை.

    6 வகையான இட ஒதுக்கீட்டில் தொடங்கி தமிழ்நாட்டு மாணவர்களை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்தது வரை தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான புரட்சிகளை தலைமையேற்று சாதித்த சமூகநீதிக் காவலர் அவர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும், 35வயதில் இந்தியாவின் இளம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தது, அதற்காக பல்வேறு

    விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது உள்ளிட்ட நான் பெற்ற பேறுகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் அய்யா.

    என்னைப்போலவே, உலகின் 140 நாடுகளில் பல்வேறு பெரும் பொறுப்புகளை வகித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமான தனிப்பெரும் நாயகன் மருத்துவர் அய்யா.

    ஆனாலும், அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன. சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் சார்ந்த மருத்துவர் அய்யா அவர்களின் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்! என்று கூறியுள்ளார்.

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதி.
    • துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் குறித்து விரைவில் தகவல் சொல்கிறேன் என்றார்.

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் மாநிலத் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் எங்களுக்கு 25 எம்.பிக்கள் வென்று கொடுத்திருக்க வேண்டும்" என்றார்.

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறாமல் இருந்ததற்கு இதுதான் காரணமா ? என கேட்டதற்கு காரணம் என இல்லை, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் எனக் கூறிய அன்புமணி சமாளித்துக் கொண்டார்.

    மேலும் பேசிய அவர், " இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக சொல்கிறேன். தகவல் சேகரித்து கொண்டு இருக்கிறோம். துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் குறித்து தகவல் சொல்கிறேன்" என்றார்.

    • தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது.
    • தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முனைவர் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் 4 மாதங்களாகியும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்ச்சிக் கடிதம் இன்று வரை வழங்கப்படவில்லை.

    அதனால் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தேர்ச்சிக் கடிதங்களை வழங்கி, அவர்கள் குறித்த காலத்தில் முனைவர் பட்டப்படிப்பில் சேருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான் மீன் பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

    வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம் முடிவடைந்து ஜூன் 16-ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதன் பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை பா.ம.க. வலியுறுத்தியும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தமிழக முதல்வரோ, ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.
    • சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே இனி சேர முடியும். அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் பிற கல்லூரி மாணவர்கள் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். இதுவா திராவிட மாடல்?

    தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு ஒரு பிழையை மறைப்பதற்காக இன்னொரு பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும்.
    • மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக இரட்டை அடுக்கு நீட் தேர்வை இரு அமைப்புகளின் மூலம் நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு ஒரு பிழையை மறைப்பதற்காக இன்னொரு பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும்.

    எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ஆம் நாள் நடைபெற்றது. அதில் வினாத்தாள் கசிவு தொடங்கி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது வரை ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பெரும்பான்மையான மாணவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், வெகுவிரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இரட்டை அடுக்கு நீட் தேர்வை, இரு தேர்வு அமைப்புகள் மூலம் நடத்துவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்திய தொழில்நுட்பக் கழகங்களான ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்காக நடத்தபடும் கூட்டு நுழைவுத்தேர்வு போன்று நீட் தேர்வையும் முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரு அடுக்குகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. முதனிலைத் தேர்வில் பங்கேற்பவர்களில் இருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை விட 4 அல்லது 5 மடங்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து முதன்மைத் தேர்வு நடத்துவது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இவற்றில் முதனிலைத் தேர்வை ஓர் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தேர்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மத்திய அரசின் இந்தத் திட்டம் எதிர்பார்க்கும் பயன்களைத் தராது. இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியாது. மேலும், நீட் தேர்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தேர்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவர்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால், நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தான் செழிக்குமே தவிர மாணவர்களுக்கு பயன் ஏற்படாது.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின்படி பார்த்தால், இராஜஸ்தான் மாநிலம் கோட்டா, சிகார், ஹரியானா மாநிலம் ரோட்டக், குஜராத் மாநிலம் ராஜ்கோட், கேரள மாநிலம் கோட்டயம் ஆகிய நகரங்களில் மையங்களில் தேர்வெழுதிய மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பதும், அங்குள்ள பயிற்சி மையங்கள் தான் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கச் செய்யும் தொழிற்சாலைகளாக செயல்பட்டு வருகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த நகரங்களில் உள்ள மையங்களில் தங்களின் பிள்ளைகளைச் சேர்த்து பயிற்சி பெறச் செய்வதற்காக ஒவ்வொரு பெற்றோரும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இனி வரும் காலங்களில் நீட் இரட்டை அடுக்கு கொண்டதாக மாற்றப்பட்டால் இன்னும் கூடுதலாக பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, இதுவரை பயிற்சி பெறாமல், சொந்த முயற்சியில் நீட் தேர்வை எதிர்கொண்டவர்களால் கூட, இனி இரட்டை அடுக்கு நீட்டை பயிற்சி இல்லாமல் எழுத முடியாது. அதனால், அனைத்து மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்க வேண்டியிருக்கும்.

    நீட் தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்ப்பதற்கு காரணமே அது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தான். கடந்த சில ஆண்டுகளில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பின்னணியை ஆய்வு செய்தால், அவர்களில் 85%க்கும் அதிகமானவர்கள் குறைந்தது 2 அல்லது 3 முறை நீட் தேர்வு எழுதியவர்களாக உள்ளனர். எத்தனை முறை மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்களோ, அதை விட அதிக ஆண்டுகள் அவர்களுக்கு நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இவை எதுவும் ஏழை மாணவர்களால் சாத்தியமாகாது, பயிற்சி இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் முடியாது என்பதால் தான் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்தகைய சமவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கி பயணிக்காமல், இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பை முழுமையாக பறிப்பதை நோக்கி பயணிப்பது சமூக அநீதி.

    மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நீட் அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தரத் தீர்வாக இருக்குமே தவிர, ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை.
    • பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் பொதுமக்களையும், தொழில் துறையினரையும் கடுமையாக பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதும் சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. திமுக அரசின் தூண்டுதலில் சென்னைக் காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த அடக்குமுறையும், பொய்வழக்கு பதிவும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

    தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு கடந்த 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. அந்தப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பி.கே.சேகர் சென்னை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் திரு.சங்கரலிங்கம் என்பவரிடம் மனு அளித்தார். அதை ஆய்வு செய்த காவல்துறை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டடம் நடத்திக் கொள்ள வாய்மொழியாக அனுமதி அளித்தது. அதன்படி தான் அங்கு போராட்டம் நடத்தப்பட்டது.


    எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்துவதற்காக காலை முதலே தொண்டர்கள் கூடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை. மாறாக, போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்தனர். இத்தகைய சூழலில் போராட்டம் முடிவடைந்த பிறகு அனுமதியின்றி போராடியதாக வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

    மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் நான் பேசினேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு, இன்னும் செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்து ஆதாரங்களுடன் விளக்கினேன். அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 2021-22ஆம் ஆண்டில் 1558 படுகொலைகள், 2022-23ஆம் ஆண்டில் 1596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார். 2023-24 ஆம் ஆண்டில் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க முடியவில்லை. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்துக் கடைகள் எனப்படும் சட்ட விரோத மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறாக, மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்குப் பதிவு செய்கிறது திமுக அரசு.

    பா.ம.க. நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. அடக்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி. இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் அறவழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

    • மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    மேலும், கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றார்கள். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
    • வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்று இருந்தால் நிச்சயம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்வாரியத்துக்கு கடன் வெறும் ரூ.10 ஆயிரம் கோடி தான். ஆனால் இன்னும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள்.

    இதற்கு காரணம் நிர்வாக திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது. மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. வீதிக்கு வந்து போராடுங்கள். மின்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மாதம் தோறும் மின் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அது என்னாச்சு? வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பானு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஈகை தயாளன், ரா.செ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
    • பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பாமக-வினர் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வையும், தமிழக அரசையும் கண்டித்து பாமக-வினர் கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் பாமக போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

    * 2 மாதங்களில் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

    * இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி.

    * திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது.

    * பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    * அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார்.

    • தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.
    • பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 விழுக்காடு. அதாவது யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இரு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதே அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது 6% அல்லது அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம். இவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்த ஆணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நான். இனிவரும் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினேன். அதையும் மீறி தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.

    பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், அதை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களில் 80%க்கும் கூடுதலானவர்கள் அமைப்புசாரா தொழில்களை நம்பியிருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அவர்களின் வருவாய் பணவீக்கத்திற்கு இணையாக உயருவதற்கு வாய்ப்பே இல்லை. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி கடந்த 100 மாதங்களுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. இத்தகைய சூழலில் பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது ஏழைகளின் வாழ்நிலையை அறியாத மன்னர் வாழ்க்கையை வாழும் ஆட்சியாளர்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.

    மின்சாரக் கட்டண உயர்வும். அது அறிவிக்கப்பட்டுள்ள நேரமும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக கருதுகின்றனர் என்பதையே காட்டுகிறது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கான மின்கட்டண உயர்வை அதற்கு முன்பாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்து அறிவித்திருப்பதிலிருந்தே அவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இதிலிருந்து தமிழக அரசும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தப்ப முடியாது.

    ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்பதால் அந்தக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மே மாதத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனின் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கான 2.18% மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டதைப் போல இப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லாவிட்டால் ஜூன் 10-ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கட்டண உயர்வை அறிவித்திருக்கலாம். ஆனால். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இம்முறை கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளாததும், விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு கட்டண உயர்வை அறிவிப்பதும் மக்களை அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இனியாவது அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

    2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. 2022-23ஆம் ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23.863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதற்கு முன் மின் வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10.000 கோடியாக அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கடந்த ஆண்டும் மின்சார வாரியம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் இழப்புக்கு அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. அதை சரி செய்யாமல் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் நீர் பிடிப்பதற்கு ஒப்பான செயல் ஆகும்.

    மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.000 மிச்சமாகும் வகையில் மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் 3 முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15,000 கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலையை திமுக அரசு உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய. பகுதி. நகர. பேரூர். வட்ட, கிளை நிர்வாகிகளும், இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ×