search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumani Ramadoss"

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
    • எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக, அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாமக இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை.

    டெல்டாவை அழிக்க பார்த்த கட்சிகள் திமுக, அதிமுக. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமக தான் வலியுறுத்தியது.

    மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.

    எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள்.
    • தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

    தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    • தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.
    • கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான்.

    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

    கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நான் போராட்டம் நடத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சியில் இருந்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.

    தனது தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடும் தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பாருங்கள். முந்திரி விலை வீழ்ச்சிக்கு தற்போதைய தி.மு.க. எம்.பி. ரமேஷ்தான் காரணம்.

    என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிலத்தடி நீர் 800 அடிக்கும் கீழாக சென்று விட்டது. நிலக்கரி சுரங்கங்கள் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். ஆரணி பாராளுமன்ற உறுப்பினரான அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அங்கு சீட் கொடுக்காததால் இங்கு வந்துள்ளார். அவர் போட்டியிடுவதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு பா.ம.க.வும், கூட்டணியும்தான் முக்கியம்.

    தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வாக இருந்த போது, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தங்கர்பச்சானை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் மனதில் ஆழமான சமூக நீதிக் கருத்துகள் உள்ளன.

    நாம் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் உயிர் கொடுத்துள்ளோம். பா.ம.க. ஆள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக இல்லை.

    இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தோம். 2026-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைப்போம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக போவதில்லை. உங்களின் எதிரி தி.மு.க.

    தி.மு.க.வை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.
    • தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குருராஜன் என்ற பொறியாளர், ஆன்லைன் ரம்மியில் பெருமளவில் பணத்தை இழந்ததாலும், அதற்காக வாங்கியக் கடனை திரும்ப அடைக்க முடியாததாலும் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள நான்காவது உயிர் குருராஜன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ள ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இரு முறை சட்டம் இயற்றியும் அதை தடை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 5 மாதங்களாகியும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.


    சுப்ரீம் கோர்ட்டுக்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அவர் தனது எக்ஸ்தள பதிவில் வெளியிட்டிருப்பதாவது:-

    நாள்காட்டியில் இன்றைய நாள் ஏப்ரல் ஒன்று. இந்த நாள் இப்போது அழைக்கப்படும் நாளாகவே நீடிக்கட்டும். இந்த நாளை நாம் வாக்காளர்கள் நாளாக மாற்றி விடக்கூடாது. அவ்வாறு மாற்றி விடாமல் இருப்பதற்கு வரும் 19-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

    வாக்களிப்பீர் பா.ம.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு. வாக்களிப்பீர் மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர் , பலா ஆகிய சின்னங்களுக்கு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
    • சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ம.க.வை வேடந்தாங்கல் பறவை போல் மாறி மாறி செல்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதை அவர்கள் முழு மனதோடு தரவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான தேதி அறிவிப்பு செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வந்தால்தான் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று தெரிவித்தனர். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தனர்.

    அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர அ.தி.மு.க. முயற்சி செய்யவில்லை. எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

    தற்போது கூட்டணிக்காக வலை வீசினார். திருமாவளவன், சீமான் போன்றோருக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கூட்டணிக்கு வராததால் எங்களுக்கு அழைப்பு கொடுத்தார்.

    அதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர அக்கறை காட்டவில்லை. சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. 2 வருடமாக இழுத்தடித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் பா.ஜ.க. பூஜ்ஜியம் மதிப்புள்ள கட்சியாக விமர்சனம் செய்யவில்லை. எந்த கட்சியையும் தரக்குறைவாக பேசியதில்லை.

    தற்போது பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்த உடன் பெரிதாக பேசுகிறார்கள். விமர்சனம் செய்யும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட தயாரா? நாங்கள் தனியாக நிற்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது.
    • கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான "தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு" எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை 66 சதவீதம் உயர்த்தி அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500லிருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-லிருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500லிருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மாநிலத் தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கட்டணமாக குறைந்தது ரூ.30 கோடி வசூலிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது. எனவே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.
    • பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் பா.ம.க. தொடர்ந்து பேசி வந்தது. திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு நலன் மற்றும் கட்சி நலன் கருதி பா.ஜனதா கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருப்பதாக பாம.க. அறிவித்தது.

    நேற்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்திலும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற பிரதமர் மோடியும் பா.ம.க. இணைந்ததன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக மாறி இருப்பதாக குறிப்பிட்டார்.

    மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக பா.ம.க.வில் இருந்து வரும் தொண்டர்கள் சிலர் கூறும்போது, "டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க.வுடன்தான் சென்றிருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்து இருந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கலாம். பா.ஜனதாவுடன் கை கோர்த்ததால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை.

    இதற்கு முக்கிய காரணம் எங்கள் கிராமங்களில் பா.ஜனதாவுக்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை. அதே நேரம் அ.தி.மு.க.வுக்கு பூத் கமிட்டி இல்லாத கிராமங்களையே பார்க்க முடியாது. கூட்டணி அமைத்தாலும் வேலை செய்ய தொண்டர்கள் வேண்டுமல்லவா" என்றார்கள்.

    அரியலூரை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தும் பா.ம.க. வலுவாக இருக்கும் ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொகுதிகளில் தோற்றோம். அதற்கு காரணம் தி.மு.க.வின் வலிமையான அடித்தளம்தான். இந்த நிலையில் இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது" என்றார்கள்.

    ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    ஆனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் இடஒதுக்கீட்டை எதிர்த்தன. அப்படியிருக்கும் போது மக்கள் ஆதரவை எப்படி பெற முடியும்?

    பெயர் வெளியிட விரும்பாத பா.ம.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எங்கள் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறது. அதை காங்கிரஸ் ஒத்துக்கொண்டது. ஆனால் பா.ஜனதா மவுனம் காத்து வருகிறது. இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது தொண்டர்கள் எப்படி திருப்தியாக வேலை செய்வார்கள்?" என்றனர்.

    மேலும் சில முக்கிய விஷயங்களை அவர்கள் விவரித்தனர். "வட மாவட்டங்களில் பா.ஜனதாவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ம.க.வில் இருந்து சென்றவர்கள்தான். இப்போது கூட்டணியை தலைமை அறிவித்து விட்டாலும் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது கேள்விக்குறியே" என்றனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது.
    • பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் நானும் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தோம்.

    தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ராமதாஸ் வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார்.
    • தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அதிரடி திருப்பமாக பாரதிய ஜனதா கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் வைத்து பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட கட்சியான பா.ம.க. மிக முக்கியமான முடிவை இன்று எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் மூத்த அரசியல் தலைவரான டாக்டர் ராமதாஸ் இந்த முடிவை எடுத்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி மனமுவந்து வரவேற்கிறது.

    400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைப்பதற்காக நாங்கள் வேள்வியோடு களம் இறங்கியுள்ளோம்.

    தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். மேலும் அவர் போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை பாரதிய ஜனதா கட்சி அளிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார். வாஜ்பாய் காலத்தில் இருந்தே ராமதாஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக அன்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் இந்த நேரத்தில் மீண்டும் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

    பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் புதிய விடியலுக்காக, மாற்று அரசியலுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதனை முன்னெடுத்து செல்லும் தலைவராகவும் அவர் விளங்கி வருகிறார்.

    தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது. இதற்காக டாக்டர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எடுத்துள்ள முடிவால் நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் மட்டுமின்றி 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சயம் அர சியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    கூட்டணியை இறுதி செய்து சேலத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் டாக்டர் ராமதாசையும், அன்புமணி ராமதாசையும் மேடை ஏற்றுவதற்கு முடிவு செய்தோம். இதற்காக இரவோடு இரவாக கோவையில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தோம்.

    டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு சிற்றுண்டி கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இருவருமே இசைவளித்துள்ளார்கள். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளது.

    நடைபெற உள்ள தேர்தலில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கைகோர்த்துள்ளோம்.

    60 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். டாக்டர் ராமதாசும் அதையே கூறி வருகிறார். அவர் தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் வலு சேர்க்கப்போகிறார். அவருக்கு நாங்கள் முழு மரியாதையை அளிப்போம். இந்த நேரத்தில் வேறு அரசியலை பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம், எந்தெந்த தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதுபற்றி விரைவில் அறிவிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார். பா.ம.க.வுக்கு மேல்சபை எம்.பி. அளிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு அன்புமணி, ராமதாஸ் இருவருமே பதில் அளிக்காமல் சென்று விட்டனர்.

    • தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள்.
    • எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்திலும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    இதையடுத்து தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்கிற கோஷத்தை முன்வைத்தீர்களே? அது என்ன ஆனது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை.

    ×