என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
    • சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

    ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.

    ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

    மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    • காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.

    இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.

    உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

    • சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
    • போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

    தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

    இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார்.

    போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

    • இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார் சபாநாயகர்.
    • எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேச ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் 3 பேரின் பெயரை கொடுத்துள்ளனர்.

    அதன்படி, இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தங்கள் பெயரை குறிப்பிடவில்லை. தங்களின் அனுமதியுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை விவாதத்திற்கு கொடுத்துள்ளார்கள். உங்கள் பெயரை கொடுக்காமல் பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

    அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் தங்களை பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள்? முக்கிய பிரச்சனைக்காக நான் பேசுகிறேன் என்று பேச முயன்றார்.

    இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர், நீங்கள் பேசுவதை அனுமதிக்க முடியாது. அவை மரபிலும் இல்லை, விதியிலும் இல்லை. இப்படி திடீரென்று ஒருத்தர் எழுந்து நின்று பேச முடியாது. யார் பெயரை கொடுத்தீர்களோ, அவர்கள் பேசட்டும். அவர்கள் உங்களுடைய கருத்துக்களை பேசட்டும் என்றார்.

    உடனே பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் என்னை பேச அனுமதி மறுக்கிறீர்கள்? எங்களை பார்த்து பயமா? என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.முக.உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

    • எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உள்ள 95-வது வார்டில் உள்ள சில்வர் ஜூப்ளி பகுதிக்குட்பட்ட அண்ணா நகரில் கழிவறை ஒன்று உள்ளது.

    சமீபத்தில் இந்த கழிவறை புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. வர்ணம் பூசி முடித்தும், அந்த கழிவறை சுவற்றில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்: 95, தியாகி கக்கன் ஜி, பேரறிஞர் அண்ணா நினைவு நவீன கழிப்பிடம் என எழுதப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை கழிவறைக்கு வைத்திருக்கிறார்கள்.

    எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாகம் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி உதவி கமிஷனர் குமரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சரண்யா ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் 95-வது வார்டு அண்ணா நகர் பகுதிக்கு சென்றனர்.

    அங்கு கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இது புதிதாக எழுதப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே இதில் அப்படி தான் இருந்துள்ளது. புதிதாக அதில் பெயிண்ட் அடித்ததால் பளிச்சென தெரிந்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. தற்போது பெயிண்ட் ஊற்றி அதனை அழித்து விட்டோம் என்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கழிப்பறையில் தலைவர்கள் பெயர் இடம்பெற்று சர்ச்சையாகி உள்ளது.

    • நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.

    அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். 

    • கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
    • மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.

    கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு ஜாமின் வழக்கி உத்தரவிட்டார்.

    மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

    இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.

    • உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
    • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை பேரணியை அறிவித்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே போலீசார் கைது செய்தனர்.

    உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேப்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்தது தமிழ்நாடு தான் என்றார்.

    • பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.
    • அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ் மொழிக்கு பாவேந்தர். திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர். தமிழினத்தின் மறு மலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமை அடைகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.

    தமிழை வளர்த்தல் ஒன்று. சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.

    1929-ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.

    முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990-ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமை வாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.

    இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.

    பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு. அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும். எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.

    இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறும்.

    1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்

    "எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்க ளிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.

    2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:

    தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.

    3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:

    புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.

    4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:

    மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:

    தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.

    தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம். நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.

    "வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்" என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.

    "கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்" என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.

    "வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு" என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.

    "தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.

    பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
    • நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

    உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.

    எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.

    • பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன.
    • தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி , பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு, தண்ணீரை தேடி சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அந்த யானை கூட்டங்கள் அந்தப் பகுதியில் சுற்றி வந்தன. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டங்கள் சென்றன. இதன் பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானை கூட்டங்கள் இடம்பெயர்ந்து வருகிறது. அதன்படி கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து தமிழக எல்லைப் பகுதியான காரப்பள்ளம், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.

    தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணக் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.

    • எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.
    • முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

    முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×