என் மலர்
நீங்கள் தேடியது "பாரதிதாசன் பிறந்தநாள்"
- மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்தவர் கவிஞர் பாரதிதாசன்.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
என்று தமிழ் மொழியின் பெருமைகளை முழங்கி, மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்து, தன் வாழ்நாள் முழுவதும் தமிழை உயிருக்கு நிகராக கருதி தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் “தமிழ் வாரம்” கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை:
பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் "தமிழ் வாரம்" கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.
- அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.
சென்னை:
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ் மொழிக்கு பாவேந்தர். திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர். தமிழினத்தின் மறு மலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமை அடைகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழை வளர்த்தல் ஒன்று. சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.
1929-ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.
முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990-ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமை வாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.
இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.
பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு. அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும். எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.
இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறும்.
1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்க ளிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:
புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:
மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம். நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்" என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
"கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்" என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.
"வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு" என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.
"தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.






