என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக கட்சி நிர்வாகிகளின் பணி குறித்து விஜய் ஆய்வு செய்தார்.
    • பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு யூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த இருப்பதாக அறிவித் தார்.

    அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை விஜய் நேரடியாக சந்திக்க இருக்கிறார். த.வெ.க. கொள்கை மற்றும் விஜயின் மாறுபட்ட அரசியல் குறித்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தினந்தோறும் வீடுகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இது ஒருபுறமிருக்க சென்னை நந்தனத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள த.வெ.க. தேர்தல் வியூக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று திடீரென சென்று விஜய் ஆலோசனை நடத்தினார். த.வெ.க.வின் தற்போதைய செயல்பாடுகள், தேர்தல் வியூகங்கள் வாக்காளர் மத்தியில் கட்சியை கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சமூக வலைதளங்கள் வழியாக மக்களை சென்றடைய வேண்டிய திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக கட்சி நிர்வாகிகளின் பணி குறித்தும் விஜய் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பட்டியலை விஜய் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில்,

    பூத் கமிட்டி நிர்வாகிகளை அந்தந்த பகுதியில் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். நிர்வாகிகள் நியமனத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தினமும் நேரில் செல்ல வேண்டும். 2 வாரங்களுக்கு ஒரு முறை சேகரித்த விபரங்களை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    விஜயின் திடீர் உத்தரவு த.வெ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
    • திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு தென் கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் 'அப்பர் கயிலை காட்சி விழா' வெகு விமரிசையாக நடந்தது.

    முன்னதாக நேற்று காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். தொடர்ந்து, மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    பின்னர், இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிகர நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது.
    • மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் மரியாதை கிடையாது. நேர்மையாக பணியாற்றுபவர்களை உடனடியாக சஸ்பெண்டு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல என்று கூறினார்.

    மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திப்பது குற்றம் என்றால், முதலமைச்சரும், அவரது மகனும் சென்று அவர் வீட்டு கதவை தட்டினார்களே அதற்கு பெயர் என்ன? அவர்கள் சந்தித்தால் தவறு இல்லை. நாங்கள் சந்தித்தால் தவறு. இந்திய நாட்டுடைய உள்துறை மந்திரிதானே அவர். வேறு யாரும் இல்லையே. அவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.

    நான் டெல்லி சென்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடப்பாடி டெல்லி சென்றிருக்கிறார் என்று கருத்து தெரிவித்தார். ஏதோவொரு சூழ்நிலையில் அமித்ஷாவை சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனைகளை கூறுங்க என்று அவரே சொல்லிவிட்டு, இப்படியான கேள்விகளை அவர்களே கேட்பது நியாயம் தானா?.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவருடைய அமைச்சர்களும் அனைத்து இடங்களிலும் சொல்வது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்கிறார்கள். அவர்கள் கூறிய 525 அறிவிப்புகளில் ஒரு 10 அறிவிப்புகளை முன்வைத்து புதிய பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். ஸ்க்ராட்ச் கார்டுகள் மூலமாக அ.தி.மு.க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வழங்கி அவர்கள் நிறைவேற்றப்பட்டது எது? நிறைவேற்றப்படாதது எது? என கேள்வி எழுப்பி உள்ளோம்.

    அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது. மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நானும் கிராமத்தில் உள்ளவன்தான். ஒரு தோட்டத்தில் வீடு இருந்தால் அனுமதி வாங்க சொல்வது நியாயம். அனுமதி வாங்கலைன்னா உடனே சீல் வைக்கலாம் என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ரூ.7 ஆயிரத்து 50 கோடிக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். தாலிக்கு தங்கமும் கொடுத்து கொண்டுதான் இருந்தோம். இந்த 4 ஆண்டு ஆட்சியில்தான் கொடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில்தான் லேப்டாப்க்கு என்று டெண்டர் அறிவிக்க முடியாமல் ஓராண்டு காலம் எல்லா பணிகளும் தள்ளிப்போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் அதனை கைவிட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்களை எல்லாம் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைவிட்டு விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டி இருந்தார்.
    • தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா கூறியிருந்தார்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.

    மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.

    • சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு விழா, உலக சாதனை சிலம்பம் நிகழ்வு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
    • மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமோடு இருக்க வேண்டும்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சரஸ்வதி கல்லூரியில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா, புதிய கைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா, சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு விழா, உலக சாதனை சிலம்பம் நிகழ்வு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் 87 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அவருடன் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் காந்திமதி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் புகைப்பட கலைஞரிடம் கேமராவை வாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்த மாணவ, மாணவிகளை வீடியோ எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் டாக்டர் ராமதாசுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து சூரிய மின்சக்தி கட்டுப்பாட்டு அறையை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற முக்கிய தலைவர்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் என கூறினார்.

    பின்னர் தங்களது பிறந்தநாளில் மக்களுக்கும், பா.ம.க.வினருக்கும் என்ன கூற இருக்கிறீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு, மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமோடு இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். ஒரு சொட்டு மழைநீரை கூட கடலில் கலக்க விடக்கூடாது என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கைப்பந்து விளையாட்டு மைதானத்தை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து கைப்பந்தை அடித்து விளையாட்டை தொடங்கி வைத்தார். 

    • குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
    • குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தன. இதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளதாக வித்யா என்ற இளம்பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

    வித்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி அம்பத்தூர், ஒடகடம் பகுதியில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

    இந்த குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பிடிபட்ட வித்யாவிடம் குழந்தை கடத்தல் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் முழு தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
    • காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 75). நிலக்கடலை வியாபாரி. இவரது மகன் ராஜா (45).

    இவர் விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விளக்கை ஏற்றி விட்டு கீழே வந்து இரவு தூங்கியுள்ளார். பின்னர் மீண்டும் இன்று காலை விளக்கை அணைப்பதற்காக சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீடிற்குள் இருந்த பீரோ உடைப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிறப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • தமிழகத்தில் தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி.
    • தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    சிவகங்கை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிவகங்கையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பிரிந்து சென்றதால் கடந்த முறை தி.மு.க. வெற்றி பெற்றது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடும் முயற்சி எடுத்து அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் புதிய கட்சியிரையும் ஒன்றிணைக்கும் முயற்சி என்பது தி.மு.க. வீழ்த்துவதற்காகத்தான்.

    பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின்னர் தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என தெரியவரும். தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. 6 நொடியில கூட அரசியலில் மாற்றம் வரும். 2026 ஜனவரியில்தான் கூட்டணி நிலைப்பாடுகள் பற்றி தெரியும்.

    தமிழகத்தில் தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி. அவர்கள் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட இயலவில்லை. கூலிப்படைகள் அதிகமாகி விட்டன. முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் ஒரு சில திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் 4½ ஆண்டு ஆட்சி மக்களுக்கு 7½ ஆட்சியாக தான் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த கூட்டணியில் முரண்பாடு என்கிற கருத்திற்கே வேலையில்லை. ஒரே நோக்கமாக தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதையும், அதன்காரணமாகவே ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்தோம்.

    தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என கூறிவிட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் உங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் வெற்று விளம்பர ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவோம். பிரதமர் ஆட்சி சிறந்த ஆட்சி என்பதற்கு உதாரணம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதே சாட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
    • விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ. 381 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை (சனிக்கிழமை) இரவு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் முதல் ரூ.200 கோடியில் அமைக்கப்பட்டு முடிவுற்ற 6 வழிச்சாலை திட்டப் பணி என மொத்தம் ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து செட்டிநாடு கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் போன்ற இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடியை வரவேற்க மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து, 2 ஆயிரம் வாகனங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர்.

    இதுபோல கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்களும் பிரதமரை காண ஆயிரக்கணக்கில் வருகை தர உள்ளனர். இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விழா மேடை முன்பு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் மட்டுமே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது, விழா மேடையில் முக்கிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தூத்துக்குடி போலீசார் உள்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
    • திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது "கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு"; இதைச் சொல்வது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள்.

    ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    சரி, நீங்கள் சொல்லும் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?

    கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?

    இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா? என்று வினவியுள்ளார். 



    • ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வைகோ பேச உள்ளார்.
    • ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் 30 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் 8 இடங்களில் மாநில வாழ்வாதாரங்களை பாதுகாக்க பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி தூத்துக்குடியில் அவரது இந்த பிரசாரம் தொடங்குகிறது. ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் அவர் தூத்துக்குடியில் பேச உள்ளார்.

    ஆகஸ்டு 10-ந்தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11-ந்தேதி கம்பத்தில் முல்லை பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12-ந்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் பேச உள்ளார்.

    ஆகஸ்டு 13-ந்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும் மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14-ந்தேதி நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் பற்றியும் பேசுகிறார். ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.

    ஆகஸ்டு 19-ந்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் பேசுகிறார். அவருடன் அனைத்து கூட்டங்களிலும் ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளுடன் மற்ற கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் முறிந்த கூட்டணியை சட்டசபை தேர்தலை நோக்கி புதுப்பித்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. கூட்டணி அறிவித்ததில் இருந்து இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    கூட்டணி ஆட்சியா? முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்ற கேள்விகளால் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

    இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் திடீர் திடீரென சலசலப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் இருந்து கூட்டணியில் தொடரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி. தினகரன் கூறியது குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, சிரித்துக்கொண்டே... அவருக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு கேட்க வேண்டாம். தயவு செய்து வேறு கேளுங்கள் என்றார்.

    மேலும், பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கிறதா சொல்கிறார்கள் சார்... என்ற கேள்விக்கு, அவர் இருக்கிறதா சொல்கிறார். அதற்கு நாங்கள் ஒன்னும் சொல்லலையே. நாங்கள், அ.தி.மு.க-பா.ஜ.க.கூட்டணி என்று கூறினார். 

    ×