என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை விற்பனை"
- ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.
- பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது பனியன் தொழிலாளி.
இவருக்கு 30 வயதில் மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், 4-வதாக கர்ப்பம் ஆனார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது கணவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர். இதனால் அந்த பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிந்து (வயது32) என்ற பெண், அந்த தம்பதிக்கு அறிமுகம் ஆனார். சிந்து, அவர்களிடம், எனக்கு தெரிந்த ஒருவர் மிகவும் வசதியானவர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை.
எனவே அவர்களிடம் உங்கள் குழந்தையை கொடுத்தால் நன்றாக பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார். அதன்படி பெற்றோர், பிறந்து 11 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சிந்துவிடம் கொடுத்தனர். பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த குழந்தையை மீட்டனர். மேலும் சிந்து மற்றும் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது பெற்றோர், தங்களால் குழந்தையை வளர்க்க முடியாததால் வேறு ஒரு நபரிடம் கொடுத்து வளர்க்க அந்த குழந்தையை சிந்துவிடம் கொடுத்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்ததால் அதிகாரிகள் சிந்துவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட 11 நாள் பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் சிந்துவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிந்து, இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் தொழிலாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை சந்தித்து, எனக்கு தெரிந்த வசதி படைத்த ஒருவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.
அவர்களுக்கு உங்களது குழந்தையை கொடுத்து விடலாம் என கூறியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதித்து சிந்துவிடம் குழந்தையை கொடுத்துள்ளனர்.
குழந்தையை வாங்கிய சிந்து, அதனை சோமனூரை சேர்ந்தவரிடம் ரூ.2 லட்சத்திற்கு விற்க பேரம் பேசியுள்ளார். அவர் பணம் தந்ததும் குழந்தையை கொடுத்துவிட தயாராக இருந்தார். ஆனால் அதற்குள் போலீசில் சிக்கி கொண்டார்.
குழந்தையை விற்பதற்கு சிந்துவுக்கு, மற்றொரு புரோக்கரான பிரசாத் மற்றும் குழந்தையின் தந்தையும் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிந்து, பிரசாத், குழந்தையின் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
பிறந்த 11 நாளே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
- குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
செங்குன்றம்:
சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தன. இதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளதாக வித்யா என்ற இளம்பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
வித்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி அம்பத்தூர், ஒடகடம் பகுதியில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
இந்த குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பிடிபட்ட வித்யாவிடம் குழந்தை கடத்தல் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் முழு தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர்.
- போலீசார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆகியோரை கைது செய்தனர்.
அசாம்:
அசாம் மாநிலம் சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த மாதம் 22 வயதான இளம்பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர். குழந்தை விற்கப்போகும் தகவல் குழந்தைகள் நலக்குழு மருத்துவமனைக்கு தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை விற்க வேண்டாமென அந்த இளம்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் அறிவுரை வழங்கினர். அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே அவர்கள் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆஷா பணியாளர் ஒருவர் என 3 பேரை கைது செய்தனர். குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- லதா, தனது தோழி வளர்மதியிடம் குழந்தை இருந்தால் விலைக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
- கைதான தம்பதி மதியழகன்-வளர்மதி, புரோக்கர் லதா ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிப்பாளையம் தேக்கவாடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 38). இவரது மனைவி வளர்மதி (25). இவர்களது நண்பர் ஈரோடு சாஸ்திரி சாலை அணைக்கட்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் லதா (வயது 35).
இவர்கள் சேலத்தில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சேலம் கொண்டு வந்தனர். அவர்கள் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்ற ஒரு பெண்ணிடம் குழந்தையை துணியில் சுற்றி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார், டவுண் போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்து குழந்தையை மீட்டனர். பச்சிளம் குழந்தையை உடனடியாக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கைதான மதியழகன், வளர்மதி, லதா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 25). இவரது கணவர் ராமராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான கஸ்தூரி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதையடுத்து 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, திருச்செங்கோட்டில் வசிக்கும் சகோதரி காயத்ரி வீட்டிற்கு வந்து விட்டார்.
காயத்ரி, பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் இயங்கி வரும் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த வளர்மதியுடன் காயத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் வளர்மதியும், லதாவும் சேர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பு என்பவர் லதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. விரைவில் ஒரு குழந்தையை கொடுங்கள். ரூ.5 லட்சம் கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு லதா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லதா, தனது தோழி வளர்மதியிடம் குழந்தை இருந்தால் விலைக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஸ்தூரிக்கு குழந்தை பிறந்த தகவலை வளர்மதி, லதாவிடம் தெரிவித்துள்ளார்.
அந்த குழந்தையின் புகைப்படத்தை பெற்ற லதா, விவசாயி அன்பு வாட்ஸ் அப்புக்கு அனுப்பினார். படத்தை பார்த்த அன்பு, உடனடியாக குழந்தையுடன் சேலம் வாருங்கள், ரூ.5 லட்சம் ரொக்கமாக தருகிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை தாய் கஸ்தூரி விற்க முடிவு செய்து, அந்த குழந்தையை தனது சகோதரி காயத்திரி, வளர்மதியிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வளர்மதி மற்றும் இவரது கணவர் மதியழகன், லதா ஆகியோர் சேலம் வந்தனர். அப்போது இது பற்றி வாலிபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர் என்பது தெரியவந்தது.
கைதான தம்பதி மதியழகன்-வளர்மதி, புரோக்கர் லதா ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதியழகன் சேலம் மத்திய ஜெயிலிலும், வளர்மதி, லதா ஆகியோர் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலிலும் போலீசார் அடைத்தனர்.
சட்டவிரோதமாக பேரம் பேசி குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற எடப்பாடியை சேர்ந்த அன்பு தலைமறைவாகி விட்டார். அன்பு என்பவருக்கு உண்மையிலேயே திருமணம் ஆகிவிட்டதா? அவருக்கு குழந்தைகள் இருக்கா? இல்லையா? அவர் வேண்டும் என்றே திட்டமிட்டு 3 பேரையும் போலீசில் மாட்டி விட்டாரா? இந்த குழந்தை விற்பனை சம்பவத்தில் மேலும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி அன்பு பிடிபட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதனால் அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அவர் பிடிபடும் பட்சத்தில் மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்.
- கடந்த வாரம் வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
- சங்கீதா மற்றும் அவரது 2 மாத குழந்தையை நாமக்கல்லில் உள்ள அரசு காப்பகத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 25). இவரது மனைவி சங்கீதா (22). இருவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்தனர். அப்போது சங்கீதா கர்ப்பமானார். உடன் இருந்து கவனிக்க உறவினர் யாரும் இல்லாததால் மனோஜ் குமார் தனது தாயாரிடம் கூறினார்.
திருப்பூரிலிருந்து அழைத்து வந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தார் .கடந்த 2 மாதத்திற்கு முன் சங்கீதாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இது குறித்து மனோஜ்குமாரின் தாயாரிடம் சங்கீதா கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. மேலும் அவர் 2 மாத பெண் குழந்தையை புரோக்கர் மூலம் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை விசாரிக்க மறுத்துவிட்டனர். இதனால் சங்கீதா நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு புகார் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், குழந்தை பிறந்தது முதல் மனோஜ்குமார் வீட்டில் சண்டை போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் எனக்கும், கணவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதற்கு பெண் குழந்தை தான் காரணம் என நினைத்து அந்த குழந்தையை எனது மாமியார் ரகசியமாக விறக்க முயன்றார் என தெரிவித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சங்கீதாவின் மாமியாரிடம், நீங்கள் பேரம் பேசிய புரோக்கர் யார்? குழந்தையை யாருக்கு விற்க நினைத்தீர்கள்? என துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சங்கீதா மற்றும் அவரது 2 மாத குழந்தையை நாமக்கல்லில் உள்ள அரசு காப்பகத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.
- தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.
- விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரத்தை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கும் லால்குடி பகுதியில் வக்கீலாக பணிபுரிந்த பிரபு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஜானகி கர்ப்பமானார்.
இதையடுத்து ஜானகியை வக்கீல் பிரபுவும், அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியும், குழந்தை பிறந்தவுடன் அதனை விற்று காசு பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்படி ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை பிரபு வாங்கி சென்று ரூ.3.50 லட்சத்துக்கு விற்றுள்ளார்.
ஆனால் 1 லட்சத்திற்கு குழந்தையை விற்றதாக கூறி ரூ.20 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ரூ.80 ஆயிரத்தை ஜானகியிடம் கொடுத்துள்ளார். இதனை மோப்பம் பிடித்த மற்றொரு வக்கீல் குழந்தை ரூ.3.50 லட்சத்திற்கு விற்கப்பட்டதை ஜானகியிடம் கூறவே, ஆத்திரம் அடைந்த ஜானகி பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.
இதனால் குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனுதாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது குழந்தை விற்கப்பட்டதை அறிந்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதன் காரணமாக ஜானகி, பிரபு, அவரின் 2-வது மனைவி சண்முகவள்ளி, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் விற்கப்பட்ட குழந்தையை மீட்பதற்கு டி.எஸ்.பி. அஜய்தங்கம் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பிரெட்ரிக், பாண்டியராஜன், அபுதாகீர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டு உள்ளனர்.
தொடர் தேடுதல் வேட்டையில் குழந்தை புரோக்கர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவரை சுற்றி நடத்திய ரகசிய விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குழந்தையை மீட்கும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே டெல்லியில் குழந்தை புரோக்கர் விரைவில் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும், குழந்தையும் மீட்கப்படலாம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
- வக்கீல் அந்த குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார்.
- குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பக பராமரிப்பில் விடப்படுமா? என்பது தெரியவரும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 33). திருமணம் ஆகாத நிலையில் தகாத உறவினால் கர்ப்பம் தரித்தார். பின்னர் அந்த கருவை கலைக்க முயற்சி செய்தார். ஆனால் 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கலைப்பது சாத்தியமில்லை என்பதை அறிந்து அமைதியானார்.
அதன் பின்னர் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தையை வளர்க்க மனமின்றி அதனை விற்க முயற்சி செய்துள்ளார். அதன்படி அந்த பகுதியில் வசித்து வரும் வக்கீல் பிரபு என்பவர் மூலம் குழந்தையை விற்பனை செய்தார்.
வக்கீல் அந்த குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார். இதனைத் தாமதமாக அறிந்து கொண்ட ஜானகி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வக்கீலை பழி வாங்குவதற்காக குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனு தாக்கல் செய்து ஒரு நாடகம் ஆடினார்.
அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தாயின் ஒப்புதலுடனேயே அந்த குழந்தை விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் ஜானகி, வக்கீல் பிரபு, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா உள்ளிட்ட 6 பேரை லால்குடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் புரோக்கர் கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த குழந்தை டெல்லியில் உள்ள மற்றொரு புரோக்கர் மூலம் மீண்டும் கை மாறி இருப்பது தெரிய வந்தது. உடனே குழந்தையை மீட்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி விரைந்தனர். அதன் பின்னர் டெல்லியை சேர்ந்த புரோக்கர் கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் ஜானகியின் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஜன்னம்மா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பாக்யஸ்ரீ தம்பதிக்கு குழந்தை இல்லாததால் டெல்லியில் சிகிச்சை பெற்றபோது, அவரை அணுகிய புரோக்கர் கோபி ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்து அவரும் கமிஷன் பெற்றுள்ளார்.
இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையுடன் தனிப்படை போலீசார் திருச்சி திரும்பி உள்ளனர். பின்னர் முறைப்படி அந்த குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அதன் பின்னரே அந்த குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பக பராமரிப்பில் விடப்படுமா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே கைதான டெல்லி புரோக்கரை அங்குள்ள கோர்ட்டு அனுமதியுடனும், ரூ.5 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிய பாக்கியஸ்ரீ என்ற பெண்ணையும் உரிய அனுமதியுடன் திருச்சிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளர்.
- பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர், உடந்தையாக இருந்த நர்சுகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரநேரி ஈசுவரன் காலனியை சேர்ந்தவர் பாண்டீசுவரன் (வயது 28). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (24). இவர்களுக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகன்களும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.
ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், பஞ்சவர்ணம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த மாதம் 23-ந்தேதி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில், 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.
ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி இந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்துவந்த அஜிதா (34) என்பவருக்கு தெரியவந்தது. அவர், தனக்கு தெரிந்த ஒருவர் நாகர்கோவிலில் உள்ளதாகவும், அவரிடம் குழந்தையை கொடுத்தால், தேவையான பணம் கொடுப்பார் என்று கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் ஆகியோர் சிவகாசியில் இருந்து குழந்தையுடன் நாகர்கோவில் புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் நெல்லையில், வங்கி அதிகாரியான ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி ஐரின் (42) ஆகியோரிடம் ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டு குழந்தையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாண்டீசுவரன், பஞ்சவர்ணத்துக்கு இடையே குழந்தையை விற்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜானகி, நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது உறுதியானது. இதை தொடர்ந்து அதிகாரி ஜானகி, மாரநேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டீசுவரன், பஞ்சவர்ணம், நாகர்கோவிலை சேர்ந்த ஜார்ஜ், அவருடைய மனைவி ஐரின், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக மாரநேரி ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் அஜிதா, முத்துமாரி அம்மாள் (51) ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், ஐரின், அஜிதா, முத்துமாரி அம்மாள் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- வடலூரில் குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா, சுடர் விழி, சீர்காழி சட்ட நாதபுரம் ஆனந்தன், புவனகிரி கீரப்பாளையம் கஜேந்திரன் மனைவி ஷீலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏழை பெற்றோரிடம் இருந்து ஆண் குழந்தையை குறைந்த விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதன் பேரில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் புவனகிரி, வடலூர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விவரம் சேகரித்து வருகின்றனர்.
கைதான சித்த மருத்துவர் மெகருன்னிசா தான் 3 குழந்தைகளை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். எனவே வடலூரில் பிடிபட்ட குழந்தை விற்பனை கும்பலுக்கு தமிழகத்தில் பிற குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வடலூர் நறிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் மற்றும் கடலூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நந்தினி ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
- குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.
இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .
இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.
அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
- போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.
அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
"இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.
- குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார்.
- ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நோனா டங்கா பகுதியில் உள்ள ரெயில்வே காலனியை சேர்ந்தவர் இளம் பெண் ரூபாலி மோண்டல்.
இவருக்கு கடந்த 21 நாட்குளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் அந்த குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அனந்தபுர் போலீசார் ரூபாலியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மிட்னாபூரை சேர்ந்த கல்யாணி குஹா பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை விற்றதாக ரூபாலி கூறினார். இதைத்தொடர்ந்து ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ரூபாலிக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மற்றும் கல்யாணி குஹா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






