என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி- தம்பதி, புரோக்கர் சிக்கினர்
- லதா, தனது தோழி வளர்மதியிடம் குழந்தை இருந்தால் விலைக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
- கைதான தம்பதி மதியழகன்-வளர்மதி, புரோக்கர் லதா ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிப்பாளையம் தேக்கவாடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 38). இவரது மனைவி வளர்மதி (25). இவர்களது நண்பர் ஈரோடு சாஸ்திரி சாலை அணைக்கட்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் லதா (வயது 35).
இவர்கள் சேலத்தில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சேலம் கொண்டு வந்தனர். அவர்கள் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்ற ஒரு பெண்ணிடம் குழந்தையை துணியில் சுற்றி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார், டவுண் போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்து குழந்தையை மீட்டனர். பச்சிளம் குழந்தையை உடனடியாக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கைதான மதியழகன், வளர்மதி, லதா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 25). இவரது கணவர் ராமராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான கஸ்தூரி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதையடுத்து 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, திருச்செங்கோட்டில் வசிக்கும் சகோதரி காயத்ரி வீட்டிற்கு வந்து விட்டார்.
காயத்ரி, பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் இயங்கி வரும் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த வளர்மதியுடன் காயத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் வளர்மதியும், லதாவும் சேர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பு என்பவர் லதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. விரைவில் ஒரு குழந்தையை கொடுங்கள். ரூ.5 லட்சம் கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு லதா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லதா, தனது தோழி வளர்மதியிடம் குழந்தை இருந்தால் விலைக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஸ்தூரிக்கு குழந்தை பிறந்த தகவலை வளர்மதி, லதாவிடம் தெரிவித்துள்ளார்.
அந்த குழந்தையின் புகைப்படத்தை பெற்ற லதா, விவசாயி அன்பு வாட்ஸ் அப்புக்கு அனுப்பினார். படத்தை பார்த்த அன்பு, உடனடியாக குழந்தையுடன் சேலம் வாருங்கள், ரூ.5 லட்சம் ரொக்கமாக தருகிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை தாய் கஸ்தூரி விற்க முடிவு செய்து, அந்த குழந்தையை தனது சகோதரி காயத்திரி, வளர்மதியிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வளர்மதி மற்றும் இவரது கணவர் மதியழகன், லதா ஆகியோர் சேலம் வந்தனர். அப்போது இது பற்றி வாலிபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர் என்பது தெரியவந்தது.
கைதான தம்பதி மதியழகன்-வளர்மதி, புரோக்கர் லதா ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதியழகன் சேலம் மத்திய ஜெயிலிலும், வளர்மதி, லதா ஆகியோர் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலிலும் போலீசார் அடைத்தனர்.
சட்டவிரோதமாக பேரம் பேசி குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற எடப்பாடியை சேர்ந்த அன்பு தலைமறைவாகி விட்டார். அன்பு என்பவருக்கு உண்மையிலேயே திருமணம் ஆகிவிட்டதா? அவருக்கு குழந்தைகள் இருக்கா? இல்லையா? அவர் வேண்டும் என்றே திட்டமிட்டு 3 பேரையும் போலீசில் மாட்டி விட்டாரா? இந்த குழந்தை விற்பனை சம்பவத்தில் மேலும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி அன்பு பிடிபட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதனால் அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அவர் பிடிபடும் பட்சத்தில் மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்