search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child sales"

    • தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.
    • விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரத்தை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கும் லால்குடி பகுதியில் வக்கீலாக பணிபுரிந்த பிரபு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஜானகி கர்ப்பமானார்.

    இதையடுத்து ஜானகியை வக்கீல் பிரபுவும், அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியும், குழந்தை பிறந்தவுடன் அதனை விற்று காசு பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்படி ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை பிரபு வாங்கி சென்று ரூ.3.50 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

    ஆனால் 1 லட்சத்திற்கு குழந்தையை விற்றதாக கூறி ரூ.20 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ரூ.80 ஆயிரத்தை ஜானகியிடம் கொடுத்துள்ளார். இதனை மோப்பம் பிடித்த மற்றொரு வக்கீல் குழந்தை ரூ.3.50 லட்சத்திற்கு விற்கப்பட்டதை ஜானகியிடம் கூறவே, ஆத்திரம் அடைந்த ஜானகி பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.

    இதனால் குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனுதாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது குழந்தை விற்கப்பட்டதை அறிந்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதன் காரணமாக ஜானகி, பிரபு, அவரின் 2-வது மனைவி சண்முகவள்ளி, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் விற்கப்பட்ட குழந்தையை மீட்பதற்கு டி.எஸ்.பி. அஜய்தங்கம் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.

    இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பிரெட்ரிக், பாண்டியராஜன், அபுதாகீர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டு உள்ளனர்.

    தொடர் தேடுதல் வேட்டையில் குழந்தை புரோக்கர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவரை சுற்றி நடத்திய ரகசிய விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குழந்தையை மீட்கும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே டெல்லியில் குழந்தை புரோக்கர் விரைவில் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும், குழந்தையும் மீட்கப்படலாம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ×