search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvaiyaru"

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
    • ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா.

    திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (1767 – 1848) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இவர் `தியாக பிரம்மம்' என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர், ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

    இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி, இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர், அரசவைக்கு செல்ல மறுத்து ''நிதிசால சுகமா'' என்ற கல்யாணி ராகக் கிருதியைப் பாடினார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

    "ஏல நீ தயராது" கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்ய நாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாக தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் இசைவாணர்களால் இன்றளவும் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

    ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா திருவையாறில் எதிர்வரும் 2024 ஜனவரி 26 தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நிறைவுநாள். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாள். இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.

    • காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தீா்த்தவாரியும் நடைபெற்றன.
    • அப்பா் பெருமானுக்கு சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறும். அதன்படி ஆடி அமாவாசையான நேற்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தீா்த்தவாரியும் நடைபெற்றன.

    இதைத்தொடா்ந்து, இரவு ஐயாறப்பா் கோயிலில் தென் கயிலாயம் எனப்படும் அப்பா் சன்னதியில் அப்பா் பெருமானுக்குச் சிவபெருமான் கயிலைக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாா்ய சுவாமிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

    • திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது.
    • பூணூல் கல்யாணம் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம்.

    1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

    2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

    3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

    4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

    5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

    6. `திருக்கயிலாய ஞான உலா' எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

    7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

    8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

    9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

    10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்க சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

    12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

    13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

    14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    15. குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

    16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

    17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

    18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

    19. தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளை சொல்லி வணங்குவதற்காகத்தான் இத்தலத்தில் காலபைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

    20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

    22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

    23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

    24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

    25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

    26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

    28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

    29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

    30. ஒரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.

    • காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது.
    • திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது.

    கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர் திருக்காட்டுப்பள்ளி, சாத்தனூர், மருவூர், வடுககுடி, தில்லைஸ்தானம் ஆகிய பகுதிகளை கடந்து திருவையாறுக்கு வந்தது.

    திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலைஊற்றி தீபாராதனை காண்பித்தனர். பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

    மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி வழங்கியது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி நேற்று வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கு துரை.சந்திரசேகரன் எம்எல்.ஏ. தலைமை வகித்து புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

    எய்டு இந்தியாதொண்டு நிறுவனத்தின் இணைச்செயலாளர் முனைவர் தாமோ தரன் முன்னிலை வகித்தார்.

    இதில் திருவையாறு பேரூராட்சி துணைத்த லைவர் நாகராஜன்,ஒன்றியக் கவுன்சிலர்சிவஞானம், ஊராட்சி மன்றத்தலை வர்கள் மரூர் மணிகண்டன், சாத்தனூர் அகிலா சாமிநா தன், மகாராஜபுரம்சுஜாதா பாஸ்கர், எய்டு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • திருவையாறு ஆஞ்சநேயர் கோவிலில் சம்வத்சராபிஷேகம் நடந்தது.
    • மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலின் 7 ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது. மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா ஆராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் வருசாபிஷேகம் தரிசனம் செய்து அருள் பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவு பல வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு துளசி தல அர்ச்சனை செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் வீதிஉலா வந்தருளினார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

    திருவையாறு அருகே இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டு நடுக்காவேரி மெயின்ரோட்டில் வரும்போது வெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு அதே ஊரை சேர்ந்தவர்கள் 2 கோஷ்டியாக மோதி கொண்டனர்.

    இது சம்மந்தமாக நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மகன் திலீபன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அதே ஊரை சேர்ந்த செந்தில், சிலம்பரசன், சுப்பிரமணியன், கிஷோர், கார்த்திகேயன், ஆகிய 5 மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இதே போல் மொட்டையாண்டி மகன் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ், புதியவன், திலீபன்ராஜ், ராஜபாண்டி, சூர்யா ஆகிய 5 பேர் மீதும் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவையாறில் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    தஞ்சையை அடுத்த திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் நிகழ்ச்சியான 14-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சையை சுற்றியுள்ள 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு ஐயாறப்பர் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து சப்தஸ்தான பெருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும்் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவில் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் பல்லக்குகள் சங்கமித்தன. காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.

    நேற்றுகாலை 7 ஊர் பல்லக்குகளும் காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டு திருவையாறுக்கு நேற்றுமாலை வந்தன. அங்குள்ள வீதிகளில் 7 ஊர் பல்லக்குகளும் உலா வந்து திருவையாறு தேரடியை வந்தடைந்தன. பின்னர் அங்கு ஐயாறப்பர் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மாலை 6.50 மணிக்கு தொடங்கியது. பல்லக்கு அருகில் பொம்மை வந்தபோது பக்தர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு 7.10 மணிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகள் கோவிலில் இருந்து புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு சென்றன. இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.
    திருவையாறில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தன்னைத்தான பூஜித்தல், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவிலில் இருந்து ஏழூருக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஐயாறப்பர் மற்றும் நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய 7 ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் 7 ஊர்களில் இருந்து வந்த சாமி பல்லக்குகள் சங்கமிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    அதேபோல திருச்சோற்றுத்துறையில் உள்ள அன்னபூரணி உடனாகிய ஓதனவனேஸ்வரர் கோவிலிலும் சப்தஸ்தான திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நேற்று நடந்தது. இந்த கோவில் மூவரால் பாடல் பெற்ற தலம் ஆகும். இங்கு ஆறுமுகம், 12 கைகளுடன், 8 அடி உயரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவில் சப்தஸ்தான திருவிழாவுடன் தொடர்புடைய கோவில்களுள் 3-வது கோவிலாகும். சப்தஸ்தான திருவிழாவையொட்டி இந்த கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் நேற்று சாமி புறப்பாடானது. இதனை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நடந்த அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், நாகை நீதிபதி மணிகண்டராஜா, மன்னார்குடி நீதிபதி சோமசுந்தரம், திருவையாறு ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் இளங்கோவன், பரம்பரை டிரஸ்டி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சப்தஸ்தான திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் ஏழூர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் சங்கமித்து, சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாமி பல்லக்குகள் 6 ஊர் திரும்பும் உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    திருவையாறு அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    திருவையாறு:

    தஞ்சை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சை பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலைச்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு பிரான்சிஸ் ஆகியோர் திருவையாறை அடுத்த ஈச்சங்குடி மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அந்தணர்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (வயது24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் வைத்திருப்பதும் தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச் செல்வம் முன்னிலையில் திருவையாறு தாசில்தார் இளம்மாருதியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார். #Loksabhaelections2019

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் பிரசித்திப்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்துக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கொடி கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 14-ந் தேதி தன்னைத்தான் பூஜித்தல், மகேஸ்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 18-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 21-ந் தேதி சப்தஸ்தான திருவிழா நடக்கிறது. அன்று ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    22-ந் தேதி ஐயாறப்பர் கோவில் உள்பட 7 கோவில்களில் இருந்து சாமி பல்லக்குகள் திருவையாறு தேரடியில் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    ×