search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறில் ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி
    X

    திருவையாறில் ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

    திருவையாறில் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    தஞ்சையை அடுத்த திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் நிகழ்ச்சியான 14-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சையை சுற்றியுள்ள 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு ஐயாறப்பர் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து சப்தஸ்தான பெருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும்் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவில் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் பல்லக்குகள் சங்கமித்தன. காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.

    நேற்றுகாலை 7 ஊர் பல்லக்குகளும் காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டு திருவையாறுக்கு நேற்றுமாலை வந்தன. அங்குள்ள வீதிகளில் 7 ஊர் பல்லக்குகளும் உலா வந்து திருவையாறு தேரடியை வந்தடைந்தன. பின்னர் அங்கு ஐயாறப்பர் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மாலை 6.50 மணிக்கு தொடங்கியது. பல்லக்கு அருகில் பொம்மை வந்தபோது பக்தர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு 7.10 மணிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகள் கோவிலில் இருந்து புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு சென்றன. இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.
    Next Story
    ×