என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
- கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக பகுதியில் இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
இந்தநிலையில் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பரமேசுக்கு வலிப்பு ஏற்பட்டது. தரையில் சுருண்டு விழுந்தார். அவரைப் பார்த்து மாரத்தானில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பரமேஷ் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளனர்.
பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.
அதன்படி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் தனது குடும்பத்தினருடன் இன்று காலை பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.
அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் இன்று காலை நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார்.
பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவரை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளனர்.
அதற்காக வந்த அவர் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.
- ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
- நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27&ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க விதிகளை வகுக்க அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில்,''தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பிக்கிறோம். பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
ஏதேனும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லாத பட்சத்தில், அதற்கான இடத்தை சம்பந்தப்பட்ட தேர்வு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வாறு அவை தேர்வு செய்து தரும் இடம் பாதுகாப்பானதாகவும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வசதி கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில் அங்கு கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம்'' என்று கூறியுள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வும் உறுதி செய்திருக்கிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த இடைக்கால ஆணையைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது;
பொதுக்கூட்டங்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுக்கிறது.
பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று காவல்துறை தட்டிக் கழிக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறும் போது அவற்றுக்கு வருபவர்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் உறுதி செய்ய வேண்டும்; பங்கேற்கும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவை ஏற்பட்டால் அழைப்பதற்கு தயாராக அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றக் கிளையின் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல லட்சம் மக்கள் பங்கேற்ற ஏராளமான மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இத்தகைய நிபந்தனைகளை தாமாக கடைபிடித்து நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்க வில்லை.
அதேநேரத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்களால் முறையாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படாத, காவல்துறையால் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துயர நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது பாசிசம் தலைதூக்க வழிவகுத்துவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), 19(1)(பி) ஆகிய பிரிவுகளின்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை, அமைதியாக ஓரிடத்தில் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றை பறிக்கும் செயலாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துக் கூறுவதும், நாட்டு நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், நடைபயணங்கள், துண்டுபிரசுரங்களை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் தான் இவற்றை செய்ய முடியும்.
மக்கள் கூடும் இடங்களில் தான் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ஆனால், உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தீர்ப்பைத் தொடர்ந்து தனியார் இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி காவல்துறையும், மாவட்ட நிர்வாகங்களும் கட்டாயப்படுத்துகின்றனர். இதை ஏற்க முடியாது.
அரசியல் கட்சிகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்களை தங்களை நோக்கி வரும்படி கட்டாயப் படுத்தக் கூடாது. ஆளில்லாத இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாத்தியமற்றது. தனியார் இடங்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி காவல்துறையினர் கூறுவது கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இதற்கு நீதிமன்றங்கள் துணைபோகக் கூடாது.
ஏற்கனவே, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் நோக்கம் மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வது தான். மக்கள் பணியாற்றும் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொதுஇடங்களில் தான் அமைக்க முடியும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அப்படித் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் இடத்தை வாங்கி அதில் தான் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்றால், மக்கள் நல நோக்கம் கொண்ட எந்தக் கட்சியும் கொடிக்கம்பங்களை அமைக்கமுடியாது.
ஊழல் செய்து சொத்து சேர்த்தக் கட்சிகள் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதையெல்லாம் உணர்ந்து தான் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை நெடுஞ்சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது அரசியல் கட்சிகளை முடக்கி வைக்கும் செயலாகும்.
அரசியக் கட்சிகளின் நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதற்காக விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகள் அவற்றின் ஜனநாயகக் கடமையை செய்யாமல் முடங்கிக் கிடக்க முடியாது.
எந்த ஒரு சூழலையும் சமாளிக்க இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய சூழலை சமாளிக்கவும் இடைக்கால ஏற்பாடு தேவை.
எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும். அதற்காக அரசின் சார்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம்.
சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது. இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இதில் இடம் பெறுகிறது.
ஆம்னி பஸ்களுக்கு இணையாக வாங்கப்பட்டு உள்ள வால்வோ பஸ் பொங்கலுக்கு பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னையில் மற்ற பகுதிகளை விட தி.நகர் பகுதியில் தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அங்கு தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் மற்றும் அருகிலுள்ள இன்னொரு சாலையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
இதன்மூலம் தி.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தி.நகரில் மட்டும் 80 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா காட்சிகளின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் சில தினங்களில் கமிஷனர் அருண் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
மாதத்தின் தொடக்க நாளாகவும் ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப்பதால் இன்று மாலையில் தி.நகர் பகுதியில் பலர் ஜவுளி எடுக்க அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் தீபாவளியையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
அனைத்து பகுதிகளிலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென கமிஷனர் அருண் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதன்படி இணை கமிஷனர்கள் துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
- பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னை:
தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, டி.டி.கே சாலை ஆழ்வார்பேட்டை யில் மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, 200 மீட்டர் நீளத்திற்கு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
வீனஸ் காலனி 1வது தெரு, 2வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1-வது தெரு, சேஷாத்திரி தெரு மற்றும் முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் மேற்குறிப்பிட்ட தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காவண்ணம், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கட ரத்தினம் சாலை, ராஜ கிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜ புரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டி.டி.கே. சாலை ஆகிய 10 தெருக்களில் மழை நீர் வடிகால்கள் சுமார் 2.16 கிமீ நீளத்திற்கு 8.21 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் மா. சுப்பிரமணியன், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, ஆணையர் குமரகுருபரன், குடிநீர் வாரிய இயக்குநர் வினய் உடனிருந்தனர்.
- கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய "சக்தி" தீவிர புயல், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 10, 11-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர்.
- பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர்.
கரூர்:
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி, கரூர் எஸ்.பி. ஜோஸ் தங்கையா இடம் பெற்றனர். தற்போது இந்த குழுவில் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், 4 டி.எஸ்.பி.க்கள், ஒரு தடயவியல் நிபுணர் ஆகிய 8 அதிகாரிகள் கூடுதலாக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் ஏ.டி.எஸ்.பி. பிரேம்ஆனந்தன் கரூரில் இருந்து சென்னை புறப்பட்டு சென்று ஐஜி அஸ்ரா கார்க்கிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார்.
இதை தொடர்ந்து ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் மற்றும் குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள், கூட்டம் நடைபெற்ற இடத்தில் எத்தனை பேர் நிற்கலாம், விஜய் பிரசாரத்தின்போது எவ்வளவு மக்கள் பங்கேற்றனர் உள்ளிட்டவற்றை ஆராய்கின்றனர்.
பின்னர் பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர். பிரசாரத்தின்போது தொண்டர்கள், பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்று கேட்டறிகின்றனர்.
அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார்.
- தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை.
சென்னை:
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
வள்ளலாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி.
ஆனால் தமிழகத்தின் நிலை வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்திற்கான உரிமை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. அறிவிருக்கும் சமுதாயம் எப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்க முடியும். வள்ளலார் கூறியதுதான் தமக்கு நினைவுக்கு வருகிறது.
தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசும்போது தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், வென்று காட்டுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் வகையில் தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
- தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
- நெல்லையில் இருந்து இன்று மாலை புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
- மதுரையில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை இயக்கப்படுகிறது.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06014) நெல்லையில் இருந்து இன்று (அக்டோபர் 5ம் தேதி) மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மேலும் இந்த சிறப்பு ரெயிலானது நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 17 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் செல்கிறது.
இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தன், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், மதுரையில் இருந்து இன்று (அக்டோபர்-05) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது.






