என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு யாருடன் போராடும்?- ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி
- பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார்.
- தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை.
சென்னை:
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
வள்ளலாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி.
ஆனால் தமிழகத்தின் நிலை வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்திற்கான உரிமை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. அறிவிருக்கும் சமுதாயம் எப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்க முடியும். வள்ளலார் கூறியதுதான் தமக்கு நினைவுக்கு வருகிறது.
தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசும்போது தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், வென்று காட்டுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் வகையில் தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






