என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
    • கருத்து கேட்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தொடங்கி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 3-வது தடவையாக வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    பிரதமர் மோடி இந்த தடவை 2014 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். குறிப்பாக 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்து நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் இலக்கை நிறைவேற்றும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் மிக கவனமுடன் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் 195 பேர் இடம் பெற்றுள்ளனர்.


    அந்த பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இராணி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் அந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 2-வது பட்டியலில் இடம் பெறும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வெற்றி வாய்ப்புள்ள பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகர்களுக்கு இந்த 2-வது பட்டியலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேட்பாளர்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி நேற்று சென்னையில் தமிழக பா.ஜனதா மையக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர்கள் பெயர்களை தயார் செய்தனர்.

    இந்த பட்டியல் நாளை (6-ந்தேதி) டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று மையக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறினார். இதற்கிடையில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி நிர்வாகிகளிடமும் யாரை வேட்பாளராக போடலாம் என்று கருத்து கேட்டு பட்டியலை தயாரித்து தரும்படி கட்சி மேலிடம் கேட்டுள்ளது.


    கருத்து கேட்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டனர். யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கேட்டு பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் மண்டல தலைவர்கள், மண்டல பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    வடசென்னையில் முன்னாள் எம்.பி., கே.பி. ராமலிங்கம், கராத்தே தியாக ராஜன் ஆகியோரும், தென்சென்னையில் மத்திய மந்திரி முருகன், ஏ.பி.முருகானந்தம் ஆகியோரும் மத்திய சென்னையில் டாக்டர் கனகசபாபதி, முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோரும் கருத்து கேட்டனர். இதேபோல் திருவள்ளூர் தொகுதியில் சதீஷ்குமாரும், ஸ்ரீபெரும்புதூரில் அரவிந்த் மேனன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத் ஆகியோரும் கருத்து கேட்டனர். காஞ்சிபுரம் தொகுதியில் எம்.முருகானந்தம், ஆர்.சி.பால்கனகராஜ், அரக்கோ ணத்தில் பாலகணபதி, சந்திரன் ஆகியோரும் கருத்து கேட்டார்கள்.


    இந்த கருத்து கேட்பின் போது, "நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் பாராளுமன்ற தொகுதி பெயர், மாவட்டம், கருத்து சொல்லும் நிர்வாகியின் பெயரை பூர்த்தி செய்து 3 வேட்பாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி பூர்த்தி செய்ய வேண்டும். அந்த படிவத்தில் கையெழுத்திட்டு கருத்து கேட்பு குழுவிடம் வழங்க வேண்டும்.

    இந்த படிவங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தொகுதி வாரியாக நிர்வாகிகளின் ஆதரவின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்கள் பெயர் தயார் செய்யப்படும். இந்த பட்டியலும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    டெல்லியில் நடக்கும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள பட்டியலை மூத்த தலைவர்கள் ஆய்வு செய்வார்கள். 39 தொகுதிகளில் குறிப்பிட்ட 12 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

    அந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக யார்-யாரை தேர்வு செய்யலாம் என்பது நாளைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது போல மற்ற மாநிலங்களிலும் வேட்பாளர்களை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

    நாளை பா.ஜ.க.வின் அந்த 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தகவல்களும் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    2019 தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,

    * தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன்.

    * மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு உள்ளேன்.

    * மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன்.

    * வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை தெரிவிப்பேன் என்று கூறினார்.

    • வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
    • ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

    ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
    • பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்து அங்குள்ள பயிர்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.

    தொடர்ந்து அந்த யானையை மயக்கஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை திடீரென அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டதால் வனத்துறையினர் தற்காலிகமாக தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் சம்பவத்தன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பாகுபலி யானை திடீரென மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது.


    இதனை பார்த்து வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரோட்டை கடக்க முயன்ற யானை திடீரென அங்கு நின்றிருந்த ஒரு காரை லேசாக முட்டி தள்ளி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சிறுமுகை காட்டுக்குள் சென்று விட்டது.

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் கோடைக்காலம் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் பாகுபலி யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து உள்ளது. வனப்பகுதியில் கோடைமழை பெய்து பசுமை திரும்பினால் காட்டு யானைகள் மீண்டும் மலைஅடிவாரத்துக்கு வரும் நிலைமை ஏற்படாது. மேலும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
    • இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சிலமலை கிராமம். இங்கிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை அருகே ஜமீன் பைபாஸ் வண்டிப் பாதையில் சுமார் 34 சென்ட் நிலம் போடி சரக போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே தலையீட்டின் பேரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    மேலும் சிலமலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் போலீஸ்நிலையம் கட்டுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு கூறி விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிலமலை அருகில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை அருகே வசித்து வரும் கனகராஜ் என்பவர் போலீஸ் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கட்டிடப் பணிகளை தொடங்கினார்.

    அஸ்திவாரங்கள் தோண்டப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை எச்சரித்து பணியை நிறுத்துமாறு கூறினார். இதனால் சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.

    தற்போது அஸ்திவாரங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு சுவர் எழுப்பப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகராஜிடம் வேலையை நிறுத்தும்படியும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    மேலும் அப்பகுதியை சர்வே செய்ததில் அப்பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் சிட்டா அடங்கல் பட்டாவில் வண்டிப்பாதையாக குறிப்பிட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார். அதனையடுத்து ஆவணங்களை காட்டி இந்த இடம் உங்களுடையது இல்லை என கூறினார். மேலும் அப்பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து புதிதாக கட்டப்பட்ட சுவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கனகராஜ் தானே புதிதாக கட்டிய சுவர்களை அகற்றினார். அதன்பின் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
    • ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது.

    சென்னை:

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 65 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் மீத முள்ளவை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.


    திருமயிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணி தொடங்கியது.

    பிளமிங்கோ என்ற சுரங்கம் தோண்டும் எந்திரமும் ஈகிள் என்ற 2-வது எந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    இந்த இரண்டு எந்திரங்க ளும் மெரினா கடற்கரை காந்திசிலை அருகே உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, திருமயிலை மெட்ரோ வரை கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கலங்கரை விளக்கத்தை வந்தடையும். வருகிற 20-ந் தேதி பிளமிங்கோ எந்திரமும், ஏப்ரல் 20-ந் தேதி ஈகிள் இரண்டாவது எந்திரமும் அதே இடத்தை அடையும்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளமிங்கோ எந்திரம் 134 மீட்டர் நீள சுரங்கப்பாதையை முடித்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவர் சிலைக்கு அருகில் உள்ளது.

    அதே நேரத்தில் ஈகிள் எந்திரம் 71 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துள்ளது. 19-ந் தேதி முக்கியமான பணிகள் தொடங்கப்படும்.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.


    திருமயிலையில் சில கடைகளை அகற்றுவதில் சிரமமாக உள்ளது. அதனால் தண்டவாளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்றார்.

    இது பற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், திருமயிலை மெட்ரோ 3 மற்றும் 4 வழித்தடங்களின் பரிமாற்றமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சில ரெயில் நிலையங்கள் 2028-ம் ஆண்டில் கடைசி இரண்டு நிலையங்களாக திறக்கப்படும்.

    ஏனென்றால் இந்த ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது. ஆனாலும் நடைபாதை 4-ல் தொடரும் கலங்கரை விளக்க மெட்ரோ, திருமயிலை மெட்ரோ இயக்கப்படுவதற்கு முன்பு திறக்கப்படும்.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் தயாரானாலும் போரூர், பூந்தமல்லி வரை வசிக்கும் மக்கள் எளிதாக மெட்ரோ ரெயிலில் மெரினா கடற்கரையை அடையலாம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.
    • உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    சென்னை:

    அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசாமி அருளிய 'சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் எழுதிய அந்த புத்தகத்தை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அவர் கூறுகையில்,

    அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.

    சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. 1600-ம் ஆண்டுகளில் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.

    * ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.

    * அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும்.

    * உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    * அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.

    * கவர்னர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் என்று கூறி உள்ளார்.

    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செங்கவள நாட்டார்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்தனர்.

    ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.

    வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில

    காளைகள் களத்தில் நின்று கெத்து காட்டியதோடு, அருகில் வந்த காளையர்களை பந்தாடியது.

    பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அடக்கினர்.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, கிரைண்டர், டைனிங்டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

    • திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார்.
    • கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முதலமைசசர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான செங்குழி ரமேஷ் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், ஆழ்வை மத்திய பகுதி செயலாளர் நவின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. அமைப்பு துணை செயலாளர் தாயகம் கவி, சண்முகய்யா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் பேசியதாவது:-


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தந்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்தி உள்ளார்.

    அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ1,000, குடிசை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற அடிப்படையில் வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

    இந்த அரசு சிறுபான்மை மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை. மழை வெள்ளம் காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்றினார். கலைஞரின் மறு உருவமாக கனிமொழி எம்.பி மீண்டும் இந்த தொகுதியில் எம்.பி.ஆக நிற்கிறார். இந்தியா கூட்டணி வெற்றி பெறப்போகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது.

    தொழிலாளர் அனைவரையும் காக்கும் ஒரு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார். நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தி காட்டுவார் மு.க.ஸ்டாலின். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வருவார்.

    தற்போது அ.தி.மு.க. காணாமல் போய்விட்டது. இந்த தேர்தலோடு அதுவும் முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
    • சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.

    அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

    இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.

    அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.

    பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
    • பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.

    சென்னை:

    பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி தமிழ்நாடு வந்த போது பல்லடம் பொதுக் கூட்டத்திற்கு பிறகு மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.

    அதன் பிறகு இரவு 8 மணிக்கு பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு மதுரையில் ஓட்டலில் தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடிக்கு சென்றார்.

    இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை வீர பாஞ்சான் பள்ளி ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்று சால்வை அணிவித்தார்.

    இந்த நிலையில் அன்றைய தினம் பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அமைச்சர் பழனிவேல் பழனிவேல் தியாகராஜன் அங்கே சென்றும் பிரதமர் மோடியை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி ஓட்டலில் இருந்து பிரதமர் புறப்பட்டபோது, முதல் நபராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமரை சந்தித்தார்.

    இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது. இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை. அதன் பிறகு மதுரை விமான நிலையத்திற்கு சென்றும் பிரதமரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழியனுப்பி வைத்தார்.

    பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.

    இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

    மதுரை வந்த பிரதமர் மோடியை நான் 4 முறை சந்தித்தேன். அவரை வர வேற்பதற்காக தமிழக அரசு எனக்கு 2 முறை புரோட்ட கால் கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்ட காலில் பிப்.27-ல் ஓட்ட லுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப்ரவரி 27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பு எனக்கு வந்தது உண்மை தான். அப்போது மாநில அரசின் வழி காட்டுதலையே நான் பின்பற்றினேன்.

    பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்ததை நான் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதன் நகல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்று விடும்.

    பிரதமர் பயணத்தில் மாநில அரசின் புரோட்ட கால்படி துணை செயலாளர் ஒருவரும் இருப்பார்.

    அவரும் எனக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு குறித்து தகவல் தெரிவித்தார். பிரதமரிடம் என்ன பேசினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. ஆனால் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை தேங்க்யூ பாய்.. தேங்யூ பாய் என்று தட்டிக் கொடுத்தார்.

    பிரதமரை சந்தித்த போட்டோவை எங்கும் நான் வெளியிடவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×