என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர்.
- கோவையில் 18-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கட்சிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன.
பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி உருவாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., பா.ஜனதாவை விட தி.மு.க. தேர்தல் களத்தில் வேகமாக செல்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இழுக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தன் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறவே விரும்புகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் பா.ம.க.விடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதில் எந்த உடன்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை.
பா.ஜனதாவிடம் பா.ம.க. 8 தொகுதிகள், ஒரு மேல்சபை எம்.பி. மூலம் மத்திய மந்திரி சபையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு பா.ம.க. கேட்கும் தொகுதியில் 7 கொடுக்க பா.ஜ.க. சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் மேல்சபை எம்.பி.க்கு உறுதி சொல்லவில்லை. மேல்சபை எம்.பி. மூலம் கேபினட் மந்திரி சபையில் இடம் பெறுவதற்கான கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு பா.ஜனதா தரப்பில் முதலில் கூட்டணிக்கு வாருங்கள். மேல்சபை எம்.பி., கேபினட் மந்திரி பற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று வந்தால் மத்திய மந்திரி பதவி குறித்து பேசலாம் எனவும் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடி விரும்புவதாகவும் அதனால் மத்திய மந்திரி பதவி குறித்து பின்பு பேசிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பா.ம.க.வை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியை விட வலுவான கூட்டணியை உருவாக்கும் வகையில் பா.ம.க.விடம் தொடர்ந்து பா.ஜ.க. பேசி வருகிறது.

தமிழகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அதற்கு முன்னதாக பா.ம.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளனர்.
16 அல்லது 17-ந்தேதிக்குள் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு விடும். மத்திய மந்திரி சபையில் இடம் கொடுப்பது தொடர்பான ஒரே விவகாரத்தில்தான் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. அதற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர்.
கோவையில் 18-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.
இதே போல அ.தி.மு.க. கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. தே.மு.தி.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விடும். எனவே அடுத்து வருகின்ற சில நாட்களில் தமிழக தேர்தல்களம் மேலும் சூடு பிடிக்கும்.
- ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
- பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதி உலா நடைபெறும். அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 23-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியானதேரோட்டம் 24-ந்தேதி மாலை 4 மணிக்கு கிரிவீதியில் நடைபெறுகிறது. 27-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷம் முழங்க பழனி கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பழனி கோவில் அடிவாரம், கிரி வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
ஐ .எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாதோப்பு ஆகிய 7 உட்கோட்டத்தில் 107 அம்பேத்கர் சிலை உள்ளது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பானக்காரம் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
- பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.
இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்' ஆகும். இந்த பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- பிரமாண்ட ரோடு ஷோ மட்டுமின்றி பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி வருகை காரணமாக கோவை மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாகி உள்ளனர்.
கோவை:
பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தற்போது தொடங்கி விட்டன.
பிரதமர் நரேந்திரமோடி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜனதா தீவிர களப்பணியாற்றி வருகிறது.
பிரதமர் மோடியும் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். மேலும் 2 முறை அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். நாளை கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.
அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந் தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் மோடி மற்ற மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று பேசி வந்தார். ஆனால் கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.கவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ரோடு ஷோவானது சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்பட உள்ளதாகவும், ரோடு ஷோவின்போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரமாண்ட ரோடு ஷோ மட்டுமின்றி பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட பா.ஜ.கவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோவை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தையும் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடுஷோ மற்றும் பொதுக்கூட்டத்தை குறிப்பிட்ட சில இடங்களில் நடத்த தேர்வு செய்துள்ளனர். அந்த இடங்களில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த முடியுமா? பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் வசதிகள் உள்ளனவா? பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பா.ஜ.கவினர் இன்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து அவர்கள் தலைமைக்கும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். பின்னர் அவர்கள் கோவைக்கு வந்து அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்துவார்கள். விரைவில் ஒப்புதல் கிடைத்த பிறகு ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளது.
பிரதமர் மோடி வருகை காரணமாக கோவை மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாகி உள்ளனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தயாராகி வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி போலீசாரும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
சேலம்:
தமிழகம்-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து பெங்களூரு நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும், தமிழகத்திற்கும் சேர்த்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
நேற்று காலை விநாடிக்கு 67 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 148 கன அடியாக வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 62.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியானது. நீர் இருப்பு 26.38 டி.எம்.சி.யாக உள்ளது.
- வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து மைசூரு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பெண்கள் குழுவினர் பாட்டு பாடும் வீடியோ தெற்கு ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
'மகிழ்ச்சியின் சிம்பொனி' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், 12 பெண்கள் சேர்ந்து ஒரு பாடலை பாடுகின்றனர். அதில் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மொபைலில் பாடல் வரிகளை பார்த்து பாடுவது போன்று காட்சிகள் இருந்தது.
இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், பொது இடத்தில் தொல்லை கொடுக்கும் இது போன்ற பயணிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஊக்குவிக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் ஆவேசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
?? A symphony of joy aboard the #Chennai - #Mysuru Vande Bharat Express! ?✨
— Southern Railway (@GMSRailway) March 12, 2024
Witness the enchanting moments as these young ladies turn their journey into a delightful musical escapade with their sweet songs.#SouthernRailway #VandeBharat #VandeBharatExpress pic.twitter.com/BuiwzxZnz3
- தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
- கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.
அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
- வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் ஒன்றியம் வைப்பூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் விஜயஸ்ரீ (வயது 13). இவர் வைப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே நடந்து வருகிறது. அதனால் விஜயஸ்ரீயை திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு விஜயஸ்ரீயை நேற்று அப்பள்ளிக்கு அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார்.
ஆனால் ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை கொடுத்து சேர்க்கை படிவத்தில் கையெழுத்துட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.
தனது விருப்பத்திற்கு மாறாக தோழிகளை பிரிந்து வெளியூர் சென்று படிக்க வேண்டியுள்ளது என விஜயஸ்ரீ மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு திரும்பிய முத்துலட்சுமி மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி விஜயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தோழிகளை பிரிவதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர்.
- பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொண்ட அவர், நாளை (15-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வருகிறார். அங்கு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து பகல் 12.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள ஹெலிபேடில் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை செய்த காட்சி - கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகாப்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரி முதல் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரையிலும் பிரதமர் மோடி செல்ல உள்ள பாதையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலையின் இருபுறமும் 5 அடிக்கு ஒரு போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அந்த சாலையில் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் விழா நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பணியை மேற்கொண்டு உள்ளனர்.
பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் வருகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமையும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் கருதுகிறார்கள். மோடி வருகையையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 19-ந்தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
- யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன்.
- பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும்.
சென்னை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
ராகுலின் யாத்திரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். யாத்திரையின் போது சக்தி வாய்ந்த முழக்கங்களை காங்கிரஸ் எடுத்து செல்கிறது.
ராகுலின் யாத்திரை வெற்றி அடைந்து வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையை அடைகிறது.
இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது.
இந்தியா நீதி ஒற்றுமை யாத்திரை நிறைவு பெறும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாத்திரையின் நோக்கம் வெற்றி அடைந்ததை விளக்கி பேசுகின்றனர்.
யாத்திரை நிறைவு விழாவில் பங்கு பெற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும். ஒரு மதச்சார்பற்ற வலுவான ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உதவும் என்று அக்கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.
கார்கேவின் அழைப்பை ஏற்ற திருமாவளவன் மும்பைக்கு செல்கிறார். யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.
- பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சனிக்கிழமை மதியம் அவர் சென்னை திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் அவர் யாரை சந்திக்க உள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த காரணத்தால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இதனால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலை கடிதம் எழுதி உள்ளார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.
இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.20 மணிக்கு விஸ்காரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்றும் 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில் அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






