என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிகளுக்கு முன் கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12-ந்தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு முடிவதால் 13-ந்தேதி முதல் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பஸ் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பஸ்கள் இயக்கப்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 1000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலால் முன் கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.
இதன் காரணமாக வெளியூர் செல்லும்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஏ.சி. பஸ் பயணம் அதிகரிக்கிறது. தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற நாட்களில் அதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயரும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 67 ஸ்பேர் பஸ்கள் உள்ளன. அவற்றையும் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தாண்டு கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் சிறப்பு பஸ்களை இயக்குகிறோம். மேலும் அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளதால் முன்பதிவு அதிகரித்து வருகிறது.
முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர பஸ்சில் செல்வதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வதற்கும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வீடுகளுக்கு செல்ல மாநகர பஸ் வசதியை பயன்படுத்தும் வகையில் ரூ.40 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது.
- தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டு உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜனதாவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை வாயிலாக தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசை விமர்சித்தும் பிரசாரம் செய்தார்.
இந்த சூழலில், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தொடர்ந்து, நெல்லையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். நெல்லையில் பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில், பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக சாடினார். அதன்பிறகு, சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது. இதே உற்சாகத்துடன் பிரதமர் மோடி மீண்டும் தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 15-ந்தேதியும், கோவைக்கு 18-ந்தேதியும், சேலத்துக்கு 19-ந்தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா தொண்டர்களை சந்தித்தார். பிரதமரின் தொடர் வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக, மீண்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய 4 இடங்கள் அல்லது கூடுதலாக ஒரு இடம் என 5 இடங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்ய இருப்பது உற்சாகத்தை அளிப்பதாக, பா.ஜனதா தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
- 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
- கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை:
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து குஷிப்படுத்துவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒரு அணி, குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இப்படி ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.
ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 2-வது பவுன்சர் வீசினால் நோ-பாலாக அறிவிக்கப்படும். இனி 3-வதாக வீசப்படும் பவுன்சரே நோ-பால் ஆகும். இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.
கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி மைதானத்தில் உள்ள நவீன 8 ஹாக்-ஐ கேமராவின் காட்சிகள் டி.வி. நடுவருக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்காக அந்த ஒளிப்பதிவு காட்சிகளை கையாளுவதற்கு இரு நிபுணர்கள் டி.வி. நடுவர் அறையிலேயே இருப்பார்கள். இதனால் நடுவரால் சீக்கிரமாக முடிவுகளை எடுக்க முடியும். மேலும் கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை (இம்பேக்ட் விதி) நடப்பு தொடரிலும் தொடருகிறது. இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை இறக்கி விளையாட வைக்கும் இம்பேக்ட் விதி இந்த ஆண்டும் பரபரப்புக்கு தீனி போடும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுக்கட்டுகின்றன.
6-வது பட்டத்திற்கு குறி வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்து இருப்பதால் அவரது கேப்டன்ஷிப் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
ருதுராஜ், புதுமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, மொயீன் அலி, ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், தீக்ஷனா, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்ேட, முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சிலும் சென்னை அணிக்கு வலு சேர்க்கிறார்கள். டோனி விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். ரசிகர்களின் ஆரவாரம், உள்ளூர் ஆடுகளம் இவை எல்லாம் சென்னை அணிக்கு சாதகமான அம்சமாகும். 'குட்டி மலிங்கா' என்று அழைக்கப்படும் பதிரானா தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் சில ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மேக்ஸ்வெல், 2 மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள விராட் கோலி, கேப்டன் பிளிஸ்சிஸ், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் என்று அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. பந்துவீச்சில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், ரீஸ் டாப்லே மிரட்டக்கூடியவர்கள்.
2008-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடிக்க முடியாமல் தவிக்கும் பெங்களூரு அணி அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வரிந்து கட்டுகிறது.
இவ்விரு அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் சென்னையும், 10-ல் பெங்களூருவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கினாலும் அதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
போட்டிக்கான் இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டோனி, டிவான் கான்வே, ரஹானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டேரில் மிட்செல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, முஸ்தாபிஜூர் ரகுமான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், சவுரவ் சவுகான், மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கரண் ஷர்மா, கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், மயங்க் தாகர், மனோஜ் பண்டாகே, ஆகாஷ் தீப், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள், டாம் கர்ரன், ரீஸ் டாப்லே, ஹிமான்ஷூ ஷர்மா, வைஷாக் விஜய் குமார், ராஜன் குமார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ சினிமா செயலியிலும் போட்டியை பார்க்கலாம்.
- தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.
- பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே வாய்ப்பு இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளை பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இதில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு அடைந்துவிட்டது. தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இதையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சி சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான மேடை
இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் கட்-அவுட்
இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
இன்று இரவு தஞ்சாவூரில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை (சனிக்கிழமை) தஞ்சை மற்றும் நாகை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
- தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி.
- ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக கருத்து.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.
பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.
ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.
24 மணி நேரத்திற்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆளுநருக்கு காலக்கெடு விடுக்கப்பட நிலையில், இன்று காலை 9 மணிக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், திரவுபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சந்திரசேகர் என்ற அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பொது மக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.
- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளது.
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும்ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.
அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க செயலை காட்டுகிறது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவு போன்றவற்றை அம்பலப்படுத்தி, ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ எதிர்கொள்வதில்லை.
பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையான சூனிய வேட்டையை காட்டுகிறது.
இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை அதிகரித்து, இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
- இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக் மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக தேனீ, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரம்பத்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது
- நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம்.
- அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.
தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம்.
அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.
சென்னை:
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:
புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
- பா.ஜ.க. சார்பில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல இன்று மாலை வெளியானது.
இதில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார்.
இதனால் தென் சென்னை தொகுதி பிரபலங்கள் மோதும் ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளது. தென் சென்னையில் வெற்றி பெறுவது தமிழிசையா அல்லது தமிழச்சி தங்க பாண்டியனா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழச்சியும், ஜெயவர்த்தனனும் களம் கண்டனர். அதில் 5,64,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழ்ச்சி தங்க பாண்டியன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






