என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு மோதல்
- 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
- கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை:
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து குஷிப்படுத்துவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒரு அணி, குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இப்படி ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.
ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 2-வது பவுன்சர் வீசினால் நோ-பாலாக அறிவிக்கப்படும். இனி 3-வதாக வீசப்படும் பவுன்சரே நோ-பால் ஆகும். இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.
கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி மைதானத்தில் உள்ள நவீன 8 ஹாக்-ஐ கேமராவின் காட்சிகள் டி.வி. நடுவருக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்காக அந்த ஒளிப்பதிவு காட்சிகளை கையாளுவதற்கு இரு நிபுணர்கள் டி.வி. நடுவர் அறையிலேயே இருப்பார்கள். இதனால் நடுவரால் சீக்கிரமாக முடிவுகளை எடுக்க முடியும். மேலும் கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை (இம்பேக்ட் விதி) நடப்பு தொடரிலும் தொடருகிறது. இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை இறக்கி விளையாட வைக்கும் இம்பேக்ட் விதி இந்த ஆண்டும் பரபரப்புக்கு தீனி போடும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுக்கட்டுகின்றன.
6-வது பட்டத்திற்கு குறி வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்து இருப்பதால் அவரது கேப்டன்ஷிப் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
ருதுராஜ், புதுமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, மொயீன் அலி, ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், தீக்ஷனா, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்ேட, முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சிலும் சென்னை அணிக்கு வலு சேர்க்கிறார்கள். டோனி விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். ரசிகர்களின் ஆரவாரம், உள்ளூர் ஆடுகளம் இவை எல்லாம் சென்னை அணிக்கு சாதகமான அம்சமாகும். 'குட்டி மலிங்கா' என்று அழைக்கப்படும் பதிரானா தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் சில ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மேக்ஸ்வெல், 2 மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள விராட் கோலி, கேப்டன் பிளிஸ்சிஸ், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் என்று அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. பந்துவீச்சில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், ரீஸ் டாப்லே மிரட்டக்கூடியவர்கள்.
2008-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடிக்க முடியாமல் தவிக்கும் பெங்களூரு அணி அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வரிந்து கட்டுகிறது.
இவ்விரு அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் சென்னையும், 10-ல் பெங்களூருவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கினாலும் அதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
போட்டிக்கான் இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டோனி, டிவான் கான்வே, ரஹானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டேரில் மிட்செல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, முஸ்தாபிஜூர் ரகுமான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், சவுரவ் சவுகான், மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கரண் ஷர்மா, கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், மயங்க் தாகர், மனோஜ் பண்டாகே, ஆகாஷ் தீப், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள், டாம் கர்ரன், ரீஸ் டாப்லே, ஹிமான்ஷூ ஷர்மா, வைஷாக் விஜய் குமார், ராஜன் குமார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ சினிமா செயலியிலும் போட்டியை பார்க்கலாம்.






