என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கள்ள நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் நேரடியாக வந்து விளை பொருட்களுக்கு பணம் கொடுத்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    இது தவிர அய்யலூர் ஆட்டுச்சந்தை வாரம் தோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மையமாக உள்ளது. இது போன்ற இடங்களில் சமீப காலமாக கள்ளநோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தற்போது புதிதாக வந்துள்ள 500, 200, 100 ரூபாய் நோட்டுகளில் அசல் எது, போலி எது என கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வந்த வாலிபர் சாப்பிட்டு விட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

    அங்கிருந்த சிறுமி சாப்பாட்டுக்கு ரூ.120 எடுத்துக் கொண்டு மீதி ரூ.80 கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தந்தை கல்லாவில் பார்த்த போது போலியான 200 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து தனது மகளிடம் கேட்ட போது தற்போதுதான் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு விட்டு இதை கொடுத்துச் சென்றதாக கூறினார். உடனே மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் அங்கிருந்த கடை வீதிகளில் அந்த வாலிபரை தேடிப்பார்த்தபோது அவர் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

    கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல் பெரும்பாலும் பெண்கள் இருக்கும் கடைகளிலும், சி.சி.டி.வி. பொருத்தாத கடைகளிலும் சென்று அதனை மாற்றி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விடுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த நோட்டுகளை மற்றவர்களிடம் கொடுக்கும்போதுதான் அது போலியானது என தெரிய வருகிறது.

    எனவே போலீசார் இது போன்ற கள்ள நோட்டு மற்றும் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றும் கும்பலை தீவிரமாக கண்காணித்து அவர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் இந்த கும்பலுக்கு பின்புலத்தில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றை குறி வைத்து கள்ள நோட்டுகளை மாற்றி வந்த கும்பல் தற்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதால் தங்களது திட்டத்தை வேறு வகையில் மாற்றி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர் எழுத்தாளர் மணி எம்.கே. மணி.
    • எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் 3-வது நாளாக நீர்வரத்து சீராகாத நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.

    நேற்று இரவில் பழைய குற்றாலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அருவிக்கரைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் நின்றிருந்த 2 பனை மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

    இதில் அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நாளை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்த்த நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

    • எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி காப்பாற்றப்படும்.
    • எனது கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து மற்றும் விருப்பம் ஆகும். அதற்கு வழிவகுக்க வேண்டும்.

    ஓசூர்:

    ஓசூரில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அவரது சிலைக்கு.நேற்று பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது புகழேந்தி கூறியதாவது:-

    மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நெஞ்சார பாராட்டுகிறேன். ரவுடிகள் சுடப்படுகிறார்கள் என்றால் அதனை நான் வரவேற்கிறேன். தி.மு.க. அரசு, யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரவுடிகளை சுட்டுத்தள்ள வேண்டும்.

    அ.தி.மு.க வை ஒருங்கிணைக்க, வெறும் வாயால் பேசிக்கொண்டிருப்பதை விட மனதார அனைவரும் முன்வர வேண்டும். . எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி காப்பாற்றப்படும். இது எனது கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து மற்றும் விருப்பம் ஆகும். அதற்கு வழிவகுக்க வேண்டும். அதற்காகத்தான் எங்கள் ஒருங்கிணைப்புக்குழு பாடுபட்டு வருகிறது. இது சரிப்பட்டு வரவில்லை என்றால் மக்கள் மத்தியில், அவர்கள் யார்? என்பதை தோலுரித்து காட்டுவதற்கு ஒருங்கிணைப்பு குழு தயங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, டாக்டர் ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
    • அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது

    சென்னை:

    காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்குவதை முறைப்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக மேற்கண்ட அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமலேயே இருந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகிய 2 அமைப்புகளும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கணக்கிட்டு கடந்த 12.7.2024 முதல் 31.7.2024 வரையில் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. என்ற கணக்கில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.

    ஆனால் இதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதன்படி அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ் குமார், பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உரிய முடிவுகளை எடுத்து அதனை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
    • 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

    இந்த நிலையில் தேசிய பட்டியல் ஆணையமும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. நேரில் விசாரிப்பதற்காக தேசிய பட்டியல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ராமசந்தர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    பெரம்பூர் வேணு கோபால்சாமி தெருவுக்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் நடந்தது பற்றியும், காரணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து பிற்பகலில் கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி. போலீஸ் கமிஷனர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் பேசுகிறார்.

    அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிகிறார். வழக்கின் புலன் விசாரணை, கொலைக்கான சதி பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்கிறார்.

    இந்த ஆய்வை முடித்துக் கொண்டு இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • நெல்லை-மதுரை அணிகள் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    கோவை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.

    டி.என்.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் 13-ந் தேதி தொடங்கியது. 18-ந் தேதி வரை அங்கு போட்டிகள் நடைபெறுகிறது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும். நெல்லை-மதுரை அணிகள் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (13 ரன்), திருப்பூர் தமிழன்ஸ் (1 ரன்), நெல்லை ராயல் கிங்ஸ் (9 விக்கெட்) ஆகிய அணிகளை தோற்கடித்தது.

    கடந்த ஆண்டையும் சேர்த்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று இருக்கிறது. கோவை அணியின் வெற்றி இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் பேட்டிங்கில் சச்சின் (169 ரன்), சுரேஷ்குமார் ஆகியோரும், பந்துவீச்சில் ஷாருக்கான், எம். முகமது (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    திருச்சி அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 16 ரன்னில் தோற்றது. அதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்சை 67 ரன் வித்தியாசத்திலும், சேலம் ஸ்பார்டன்சை 35 ரன் வித்தியாசத்திலும் வென்றது.

    • கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது?
    • பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.

    ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றுவது வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும்.

    திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி, பொதுமக்கள் 400 மின்அலகு வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 40 காசுகளும், கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள், விசைத்தறி, கிராம ஊராட்சி மன்றங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதல் பாதுகாப்புபடை வீரர்களின் குடியிருப்புகள் என அனைத்திற்கும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு.

    ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் மீண்டும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல் அப்பட்டமான கொடுங்கோன்மையாகும்.

    கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதை பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை திமுக அரசு அதிகரித்திருப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இக்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால் மீண்டுவரமுடியாமல் முடங்கிய சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மூச்சுவிடும் நிலையில் தற்போதைய திமுக அரசின் மின்கட்டண உயர்வு அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி மீண்டும் முடக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, குருதி உறிஞ்சும் அட்டைப்போல மக்களைக் கசக்கிப் பிழிந்து, வழிப்பறிபோல வரியைப் பறிக்க நினைப்பது சிறிதும் அறமற்ற கொடுங்கோன்மையாகும். பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    ஆகவே, மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால், இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தபால் ஓட்டுகள் தொடங்கி இறுதி சுற்று முடிவு வெளியாகும் வரைக்கும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் கைதான் ஓங்கி இருந்தது.

    இறுதி சுற்றின் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார்.

    இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி மு க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா இன்று பொறுப்பேற்றுள்ளார். தலைமை செயலகத்தில் அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை.
    • வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    மேலும் குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
    • 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.

    தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது அம்மாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த விடியா

    திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது.

    * திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.

    * பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள்.

    * குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விடியா திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.

    * 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    * தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு.

    * பாராளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    * அம்மா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 'மின்சாரத்தை தொட்டால்தான் ஷேக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷேக் அடிக்குது' என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    * 'சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று நாடக வசனம் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்!

    * ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னதை இந்த கையாலாகாத அரசு நிறைவேற்றியதா? என்று அல்லலுறும் மக்கள் கேட்கிறார்கள்.

    * உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை.

    மக்களுக்குத் தேவையில்லாமல் வரி மற்றும் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் அதனை ஒப்பீடு செய்ய, தங்களுக்கு வசதியாக இதர மாநிலங்களையும் விடியா தி.மு.க. அரசு துணைக்கு அழைத்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்து வரிச் சுமையை தமிழக மக்கள் தலையில் கட்டுவதற்கல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் செய்ததுபோல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

    எனவே, விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், விடியா திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.
    • சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் பகுதியில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாதிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ் (வயது 39). இவர் தேவாலயத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி(35). இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே காவனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா (8) என்ற மகளும், ஜோவின் (2) என்ற மகனும் உண்டு. இவர்களது மூத்த மகள் ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை பாதிரியார் ஜோஸ் மோட்டார் சைக்கிளில் சென்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருநின்றவூர் பகுதியில் தனியார் கம்பெனி அருகே சென்ற போது, அவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்பொழுது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வந்த சிறுமி ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா தலையின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கனரக லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜோஸ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன் 3-ம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×