என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா, இவரது மகன் மாடசாமி (வயது38).
இவர் சொந்தமாக வேன் வைத்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்றி, இறக்கி வந்துள்ளார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகாஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மாடசாமி நேற்று காலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமி இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாடசாமி உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சுடுகாட்டில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.
தாம்பரம்:
சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. இதனால் இங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன போக்கு வரத்திற்கு முக்கியமான சாலையாக உள்ளது.
தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் முக்கிய சந்திப்பு இடமாக உள்ள பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறையும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டது.
அதன்படி பெருங்களத்தூர் ரெயில்நிலையத்தின் இரு பக்கங்களிலும் இருந்த, எல்.சி.32, எல்.சி.33 ரெயில்வே கேட்டுகளை, நிரந்தரமாக மூடிவிட்டு, அந்த இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக முதலில் கடந்த 2000-ம் ஆண்டில் ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்தன. நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த பணி ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது.
பின்னர் கடந்த 2018-ம் ஆண்டில் மீண்டும் மேம்பாலப் பணி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.236 கோடியில் புதிதாக திட்டம் உருவாக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெருங்களத்தூரில் முட்டை வடிவில் ரவுண்டானாவுடன் கூடிய பிரமாண்டமான மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த மேம்பாலம் பெருங்க ளத்தூர், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், நெடுங்குன்றம், மற்றும் வண்டலூர், தாம்பரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமாக, வண்டலூரில் இருந்து பீர்க்கன்கரணை ஏரிக்கரை வரையில், மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு அந்த பாதை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக மேம்பாலத்தின் மேற்குப் பகுதியான, ெரயில்வே பாதையை கடந்து, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர் வழியாக, காமராஜ் நெடுஞ்சாலையில் இணையும், மேம்பால பணி தீவிரப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. அந்த மேம்பாலப்பாதை கடந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மேம்பாலத்தின் 3-வது கட்டமான தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள மேம்பால பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் தாமதமானது.
தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமான மேம்பால ப்பணியும் முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே இந்த பாதை அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதத்தில் 2 வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கடைசியாக உள்ள 4-வது கட்டமான கிழக்குப் பகுதியில் இருந்து சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் அமைப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதில் வனத்துறை நிலம் குறுக்கிடுவதால், பணிகள் தாமதம் அடைந்துள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள பெருங்களத்தூர் துணை மின் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அந்தத் துணை மின் நிலையத்தை முழுமையாக இடமாற்றம் செய்தால் தான் மேம்பாலப்பணியை தொடர முடியும் என்ற சிக்கலும் ஏற்பட்டு உள்ளது.
துணை மின்நிலை யத்திற்கான மாற்று இடம் அமைவதில் பிரச்சி னைகள் ஏற்பட்டு உள்ளதால் மேம்பால பணிகள் முடங்கிப் போய் நிற்கிறது.
இப்போது புது பெருங்களத்தூர் நேதாஜி சாலையில், மின்வாரிய துணை மின் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது.
இதைப்போல் மின்வாரிய அலுவலகத்தையும் முழுவதுமாக இடமாற்றம் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மின்வாரியத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
பெருங்களத்தூர் துணை மின் நிலைய அலுவலகம் வருகிற 8 மாதத்திற்குள் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் பின்னர் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெருங்களத்தூர் மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, `பெருங்களத்தூர் மேம்பாலத்தின் இறுதிக்கட்டமான மேற்குப் பகுதியில் சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளை இணைக்கும் மேம்பால பணி, தற்காலிகமாக தடைப்பட்டு நிற்கிறது.
வனத்துறை நிலம் குறுக்கீடு, துணை மின்நிலையம் இடமாற்றம் அதற்கு காரணமாக இருந்தது. அதில் துணை மின் நிலையம் இடமாற்றப் பணிகள், டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்கி விட்டது. துணை மின் நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும்.
இதைப்போல் வனத்துறையிடம் நிலம் பெறுவதில், மாநில மத்திய அரசுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து முடியும் நிலையில் உள்ளன. மேம்பால பணியை விரைந்து முடித்து முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
பொதுமக்கள் கூறும்போது, `பெருங்களத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். மேம்பாலத்தின் 4 கட்ட பணிகளும் முடிந்து மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு முழுமையான பலன் கிடைக்கும்' என்றனர்.
- படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
- ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அப்பொழுதே, உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலித்தது.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கின் விசாரணைக் கைதியான குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் வகையில், இதனை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
- பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.
- குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை?
சென்னை :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு தம்பி பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சியாகும். எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்? இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை? அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்தரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப்பொருட்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை? குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும்! அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?
ஏற்கனவே, கன்னியாகுமரியில் எனது ஆருயிர் தம்பி சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது தம்பி பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்; கைதுசெய்து, அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன்.
இத்தோடு, தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து இக்கொடுந்துயரில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பாலசுப்ரமணியனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
- ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
- இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.
ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.
அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்டு மாதத்திற்கான வினியோகத்துக்கும் இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை மிக மிக கடுமையாக உயர்ந்து விட்டதால் அவற்றுக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது.
தற்போது அந்த மானிய தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் ரேசன் கடை களில் தொடர்ந்து துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு ஒரு கிலோ துவரம் பருப்பை வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு ஏழை எளியவர்களுக்கு 30 ரூபாய்க்கு கொடுத்தது. அது போல பாமாயிலை வெளிச்சந்தையில் லிட்ட ருக்கு 45 ரூபாய் கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்கு 25 ரூபாய்க்கு வழங்கியது.
தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ 155 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 95 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.
தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேசன் கடைகளில் 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது போல இன்றும் துவரம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயிலை 25 ரூபாய்க்கும் வழங்கி வருகிறது.
துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய 2 பொருட்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இத னால் இந்த விவகாரத்தில் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களை பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
அதன்படி ரேசனில் வழங்கும் துவரம் பருப்பு, பாமாயில் விலையை சற்று அதிகரிக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்றாலும் சில மாதங்களில் ரேசனில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
- வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
- இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை:
ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 11-ல் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினர்.
இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அவர் ஆஜர் ஆனார்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
சம்பந்தபட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை வரை நடைபெறும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது.
- பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் மாலை நேரங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்ததால் கிராமங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
தொடர் சாரல் மழையின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளிமலை வனப்பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதன் காரணமாக இன்று காலை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வைகை அணையில் இருந்து தற்போது திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பின் காரணமாகவும், மீண்டும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.90 அடியாக உள்ளது. வரத்து 1000 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2250 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.30 அடி. வரத்து 6264 கன அடி. திறப்பு 1178 கன அடி. இருப்பு 3281 மி.கன அடி.
பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை என 2 கடல் பகுதிகளை கொண்டுள்ளது. இதில், மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றன.
இதே போன்று பாக் நீரினை கடல் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்குதளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி நீர்மட்டம் எட்டி உள்ளது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
தருமபுரி:
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி நீர்மட்டம் எட்டி உள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என 2 அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நேரத்தில் இருந்து கர்நாடகா- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு பகுதிக்கு வரத் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதி வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக வந்த கொண்டிருந்தது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்ட இந்நிலையில் இன்று நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடி அளவில் அதிக ரித்து வந்து கொண்டிருப்பதால், அருவிகளிலும் மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லு முடியாமல், அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று தொடங்கி இன்று காலை வரையிலும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று காலை வரை 44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 4 ½ அடி உயர்ந்து 110.80 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 129.20 அடியாகவும் உள்ளது.
இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக மாவட்டத்தின் 7 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் நீர் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த கால்வாய் வரத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த அணை பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பரவலாக பெய்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது. கன்னடியன் பகுதியில் 6.4 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.6 மில்லிமீட்டரும், களக்காட்டில் 6.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாங்குநேரியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையில் சுமார் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை நிரம்பி ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் நேற்று கூடுதல் தண்ணீர் வெளியேறியது.
கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் அந்த அணையின் நீர் இருப்பு 4 ½ அடி உயர்ந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது.
அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் விவசாய பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது.
ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள தென்காசியில் 15 மில்லிமீட்டரும், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டையில் 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் தமிழக -கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பாலருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
- கொலை நடந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
- கொலையாளிகள் நிச்சயமாக 3 பேருக்கு மேல் இருந்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரில் ஒரே குடும்பத்தில் தாய்-மகன்-பேரன் என 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ராஜாராம் நகரை சேர்ந்த கமலேஸ்வரி என்ற 60 வயது பெண், தனது மகன் சுகுந்தகுமார், பேரனுடன் வசித்து வந்த நிலையில்தான் மர்ம நபர்கள் அவர்களை மிகவும் கொடூரமாக வெட்டிக் கொன்று உடல்களை எரித்துள்ளனர்.
கமலேஸ்வரியின் கணவர் சுரேஷ்குமார் இறந்து விட்ட நிலையில், சுகந்தகுமாரின் மனைவி விவாகரத்தாகி பிரிந்து சென்று விட்டார். இதனால் மகன் நிஷாந்தை தாய் வீட்டில் விட்டு விட்டு சுகந்தகுமார் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கடலூருக்கு வந்து சென்றுள்ளார்.
இதுபோன்ற ஒரு சூழலில்தான் 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கடலூரையே கலங்கடித்துள்ளது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொலை சம்பவம் தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது.
கொலையாளிகள் யார்? எதற்காக 3 பேரையும் கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுகுந்தகுமார் ஐதராபாத்தில் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணுடன் சுகந்தகுமாருக்கு தகராறு ஏற்பட்டு அது தொடர்பான முன்விரோதத்தில் சுகுந்த குமாரை கொலை செய்யவந்தவர்கள் தாய்-மகனையும் கொன்றார்களா? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகள் கடந்த 12-ந்தேதி அன்று 3 பேரையும் கொலை செய்து விட்டு பின்னர் நேற்று அதிகாலையில் வந்து தடயங்களை அழிப்பதற்காக 3 பேரின் உடல்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்பிறகே கொலை சம்பவம் வெளியில் தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். ஆனால் அதில் பதிவாகி இருந்த காட்சிகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
கொலை நடந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரி, சுகுந்தகுமார் ஆகியோர் பயன்படுத்திய இந்த செல்போன்களை வைத்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
கொலையாளிகள் நிச்சயமாக 3 பேருக்கு மேல் இருந்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.
சுகுந்தகுமாரின் தலைமுடி வாசல் கதவுக்கு வெளியில் சிதறி கிடந்துள்ளது. இதனால் முதலில் வீட்டுக்கு வெளியில் வைத்து கொலையாளிகள் அவரை வெட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிருக்கு பயந்து அவர் வீட்டுக்குள் ஓடியதும் தாய், மகன் ஓடி வந்திருக்கலாம் என்றும் அப்போது கதவை பூட்டிக் கொண்டு 3 பேரையும் கொலையாளிகள் துடிக்க துடிக்க கொன்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுகுந்தகுமாரின் செல்போனில் பதிவாகி உள்ள எண்கள் மற்றும் அவர் யார்-யாருடன் அதிகமாக பேசியுள்ளார் என்பது பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார் அதன் மூலமாக கொலை வழக்கில் துப்பு ஏதும் கிடைக்குமா? என்று விசாரித்து வருகிறார்கள்.






