search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic congestion"

    • தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த திட்டம்.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்கள்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'பேர்புரோ 2025' கட்டுமான வீட்டு மனை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டிடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்த கண் காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.

    மக்கள்தொகை பெருக்கம் அதிகம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் எல்லாத்தேவைகளையும் அரசே செய்துவிட முடியாது. உங்களை போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமய மாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும்.

    சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது.

    நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப்போகிறது.

    அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால்…

    சென்னையின் நெரி சலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம்.

    கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப் பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டிட அனுமதி பெறும் முறை தற்போது நிறை வேற்றப்பட்டிருக்கிறது.

    இந்த திட்டத்தின்கீழ், மனைப் பிரிவு மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒப்புதல் வழங்கு வதற்கான கால அளவு 180 நாட்களிலிருந்து 64 முதல் 90 நாட்களாக குறைந்திருக்கிறது.

    குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டிட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது.

    அதனால், முன் அனுமதிக்கப்பட்ட 100 கட்டிடத்திட்டங்களை பதிவேற்றி இந்த செயல் முறையை மேலும் செம்மைப்படுத்தி எளிமையாக்கு வதற்கான முயற்சிகளை வீட்டுவசதித் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.

    சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும், சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம்.

    குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.

    சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிக ளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள். இதை மேம் படுத்த, முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது.

    இந்தத் திட்டம், பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.

    ஸ்பாஞ்ச் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சந்தைகள், பேருந்து முனையங்கள், சுரங்கப்பாதைகளை நவீனபடுத்துதல், புதிய திட்ட சாலை இணைப்பு பகுதிகளை கண்டறிந்து மறுவடிவமைத்து மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள்.

    இதனை செயல்வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது.

    நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னை யிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டிடம் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, தொழில் துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் தொழில் அதிபர்கள், வங்கி அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெங்களூருவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுகிறது.
    • புனேவில் 10 கி.மீ-ஐ கடக்க 33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது.

    Tom Tom நிறுவனம் வெளியிட்ட 2024ம் ஆண்டின் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா 2-ம் இடம் பிடித்துள்ளது.

    இந்த பட்டியலில் பெங்களூரு, புனே ஆகிய நகரங்கள் முறையே 3 மற்றும் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

    கொல்கத்தாவின் சராசரி வேகம் மணிக்கு 17.4 கிமீ ஆகும். கொல்கத்தாவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுகிறது.

    பெங்களூருவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுகிறது. புனேவில் 10 கி.மீ-ஐ கடக்க 33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது

    உலக அளவிலான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஐதராபாத் 18 ஆம் இடத்திலும் சென்னை 31 இடத்திலும் உள்ளது. சென்னையில் 10 கி.மீ-ஐ கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுகிறது

    • அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.
    • தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் பஸ்நிலைய பகுதி எப்போதும் போக்கு வரத்து நெரிசலாக காணப்படும். தாம்பரத்திற்கு என தனி பஸ் நிலையம் இல்லாததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி ஆங்காங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.

    ஜி.எஸ்.டி.சாலை மூன்று தடங்களை கொண்டதாக உள்ளது. பயணிகளை இறக்குவதற்காக ஒரு தடத்தில் பஸ்கள் வரிசை கட்டி நிற்கும்போது மற்ற இருதடங்களில் பஸ்கள், வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. இதற்காக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி செல்ல 110 மீட்டர் நீளத்திற்கு மேற் கூரையுடன் கூடிய(தடம்66) பஸ்நிலையமும், பல்லாவரம் கிண்டி வடபழனி வழியாக கோயம்பேடு செல்ல (தடம்70) 90 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு பஸ்நிலையமும் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்நிலையங்களாலும் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த 2 பஸ்நிலையங்களிலும் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மண்டல தலைவர் காமராஜ் இந்திரன், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது 2 பஸ்நிலையங்களையும் நவீன வசதியுடன் மறு சீர மைப்பு செய்து போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

    அதன்படி ஜி.எஸ்.டி.சாலையின் ஓரத்தில் ஒருபுறத்தில் மட்டுமே இரண்டு மீட்டர் அகலத்திற்கு நடைபாதை, கான்கிரீட் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டம் மற்றும் சென்னையை ஒட்டி உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    இதில் சாலையின் ஓரத்தில் ஒரு புறத்தில் மட்டுமே தூண்கள் அமைத்து கட்டப்படவுள்ளதால் சாலையை ஒட்டி உள்ள பகுதியில் சாலை மார்க்கத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு காலியிடம் கிடைக்கும். இதன் மூலம் தற்போது இரண்டு வரிசைகளில் செல்லும் வாகனங்கள் 3 வரிசைகளில் செல்ல முடியும்.

    இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் சீரமைக்கப்படும் பஸ்நிலையங்களில் நவீன மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள். ஒலிபெருக்கிகள், டிஜிட்டல் பெயர்பலகை உள்ளிட்டவை நவீனமாக அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.
    • 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை நகரம் முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாடிக்குப்பம் மெயின் ரோடு - பிள்ளையார் கோவில் தெரு இடையே 900 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.

    இதன் மூலம் பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி செல்லும் வாகனங்கள், நெரிசல் மிகுந்த ஜவஹர்லால் நேரு சாலையை எளிதாக கடந்து செல்ல முடியும். இந்த சாலை விரிவாக்க திட்டத்தால், ரெயில் நகர் பாலம் வழியாக, பூந்தமல்லி உயர் மட்ட சாலைக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியும்.

    மற்றொரு இணைப்பு சாலையானது ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைகிறது. இந்த இணைப்பு சாலையானது, டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை, துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கும்.


    இதன் காரணமாக மயிலாப்பூர், கிரீன்வேஸ் சாலை மற்றும் சாந்தோம் வழியாக செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் கிண்டியை மாற்று பாதையில் சென்று அடையலாம். ரூ.37.8 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.

    இந்த 630 மீட்டர் இணைப்பு சாலை பணிகள் முடிந்ததும், துர்காபாய் தேஷ்முக் சாலை நடுவில் உள்ள தடுப்பு அகற்றப்பட்டு, ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இந்த 2 இணைப்பு சாலை திட்டங்களையும் ஒரு வருடத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3-வது இணைப்பு சாலை, தற்போது பகுதி அளவில் பயன்பாட்டில் உள்ளது, இந்த சாலையானது பரங்கிமலை - மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிகமாக செயல்பாட்டில் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழக-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது.

    இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இந்த மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில் 25 டன் வரை எடை உள்ள லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு கொண்ட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுவதே ஆகும் என வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

    வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
    • டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

    குறிப்பாக மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த பகுதியை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. அதற்கு காரணம், சாலையின் இருபுறமும் உள்ள குறுகலான தெருக்களுக்கு பொது மக்கள் கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை குறுக்காக ரோட்டை மறித்து கடந்து செல்வதுதான்.

    இதனிடையே சமீபத்தில் அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்திய கவர்னரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு சாலை விரிவாக்கம் தான் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒரே வழி என்ற போதிலும் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி உள்ளதா? என்ற ஆய்விலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நேற்று இரவு 7 மணிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள், எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன? என்பன போன்ற விவரத்தை அவர்கள் பதிவு செய்தனர்.

    குறிப்பாக முருங்கப்பாக்கத்தில் இருந்து கொம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், மரப்பாலம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் நோக்கி வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என்பது தொடர்பாக அவர்கள் டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.

    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு ராஜவீதி சாலை வழியாக சென்றுதான் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியும். அதேபோல் பேருந்து நிலையம் வரும் அரசு பஸ்களும் அதே வழியாகத்தான் சென்று திரும்ப வேண்டும். ஒருவழி பாதை இல்லாததால் விடுமுறை நாட்களில் இந்த பிரதான சாலைகளில் எப்போதும் நெரிசலுடனே வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது. இதை விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீண்ட நேர வாகன நெரிசலுக்கு பின்னர் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இதனால் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • கூடுதலாக 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

     எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதலாக பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பஸ்களும், பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பஸ்களும், தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பஸ்களும் என மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


    மேலும், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்து மிஷன் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் வருகிற 18-ந் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. ரோட்டையும் பழைய மகாபலிபுரம் ரோட்டையும் இணைக்கும் வகையில் வண்டலூர்-கேளம்பாக்கம் மெயின் ரோடு உள்ளது.

    19 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரோட்டில் பள்ளி, கல்லூரிகள் நிறைய உள்ளன. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.

    இந்த சாலையில் கனரக வாகனங்களும் எப்போதும் சென்று வருவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    வண்டலூர் சந்திப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தொடங்கும் நெரிசல் பஸ் நிலைய பகுதியிலும் நீடிக்கிறது.

    ரத்தினமங்கலம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை பராமரிப்பும் சரி இல்லை. இதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை கடும் விமர்சனத்துக்குள்ளானது.

    அந்த பகுதியில் குடியிருப்பவர்களும் நெரிசல் காரணமாக சாலையை கடக்க 45 நிமிடங்கள் வரை ஆவதாக கூறுகிறார்கள்.

    வார இறுதி நாட்களில் கார் மற்றும் இதர வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் நகர பகுதியில் நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் கேளம்பாக்கம் சாலை வழியாக வண்டலூர் வருகிறார்கள். இதனால் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசாரும் திணறுகிறார்கள்.


    போக்குவரத்து நெரி சலை சமாளிக்க வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்து உள்ளார்கள்.

    அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைப்பதற்காக மட்டும் அல்ல. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி குறிப்பிட்டார்.

    இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலையும் சமாளிக்க முடியும் என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த போக்கு வரத்து மாற்றம் அடுத்த சில மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது.
    • நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல்.

    கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள மேம்பாலம் அருகே தொடங்கி சேலையூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம், வேங்கை வாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி வழியாக கிண்டி ஹால்டா அருகே அண்ணா சாலையில் இணைகிறது. இந்த சாலை 16.3 கிலோமீட்டர் நீளம் உடையது. மேலும் இந்த சாலை தாம்பரத்தில் இருந்து கிண்டி வரையில், ஜி.எஸ்.டி. சாலைக்கு மாற்று சாலை ஆகவும் விளங்குகிறது.

    சென்னை விமான நிலையத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் முக்கியமான வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள், தாம்பரம்- வேளச்சேரி சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.

    மேலும் தாம்பரம்- வேளச்சேரி சாலையில், புகழ்பெற்ற தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலையின் இரு பகுதிகளிலும் புதிய புதிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் பெருமளவு உருவாகி வருகிறது.

    வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பெருமளவு உள்ளதால் இந்த சாலை 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்த சாலையாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் தாம்பரம்-வேளச்சேரி சாலை 1990-ம் ஆண்டு வரை, ஒரு வழி சாலையாக இருந்தது. இதன்பின்னர் 1992-ம் ஆண்டில், இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறை இரு வழி சாலையாக விரிவுபடுத்தியது. தொடர்ந்து 4 வழிச் சாலை ஆகவும் சில ஆண்டுகளில் மாற்றப்பட்டது.

    ஆனால் இந்த சாலை நான்கு வழி சாலையாக விரிவு படுத்தப்பட்ட போது, கிழக்கு தாம்பரம் தொடங்கி கிண்டி ஹால்டா வரையில் ஒரே சீராக, சாலை விரிவுபடுத்தப்படவில்லை.

    சாலை அகலப்படுத்துவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதில், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், சேலையூர், கேம்ப் ரோடு, ஆதிநகர் உள்ளிட்ட பல இடங்களில், சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதனால் காலை மாலை நேரங்களிலும், பருவமழை நேரத்திலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மின்கம்பங்கள், அகற்றப்பட்டு தள்ளி நடப்படாததால் பல இடங்களில் சாலை ஓரத்தில் மிக அருகிலேயே மின்கம்பங்கள் உள்ளன. குறிப்பாக சேலையூர் முதல் காமராஜபுரம் வரையில் இதை போல் மின்கம்பங்கள் காட்சி அளிக்கின்றன.

    நெடுஞ்சாலைத்துறையினர் மின்கம்பத்தை அகற்றாமலேயே அதனை சுற்றிலும் சாலைகள் அமைப்பதற்கு ஜல்லிகளை கொட்டி வைத்துள்ளனர். மின் கம்பங்கள் அகற்றப்பட்ட பின்பு, சாலை போடும் பணிகள் நடைபெறும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆனால் எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட பின்பு அங்கிருந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், கேளம்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த பஸ்கள் அனைத்தும் தாம்பரம்- வேளச்சேரி சாலையை பயன்படுத்துவதால் போக்குவரது நெரிசலில் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம்- வேளச்சேரி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்து அற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு, தேவையான நிலங்கள் முழுமையாக இன்னும் வருவாய்த் துறையினர் கையகப்படுத்தி கொடுக்கவில்லை.

    இதனால் நெடுஞ்சாலை த்துறையினர், தற்போது 6 வழி சாலையாக மாற்றுவதற்கு இடவசதி உள்ள இடங்களில் மட்டும் சாலைகளை பகுதி, பகுதியாக விரிவு படுத்தி உள்ளனர்.

    மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் வரையில் சாலையை முற்றிலும் விரிவுபடுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.

    எனவே தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப்பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, `மின் கம்பங்களை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து, வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கு, ஆகும் செலவுகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு அல்லது நெடுஞ்சாலை துறை, மின்வாரியத்திற்கு முன்னதாகவே செலுத்த வேண்டும்.

    அதுமட்டுமின்றி தற்போது உள்ள மின்கம்பங்களை எடுத்து, சாலை விரிவு படுத்துவதற்கு வசதியாக ஓரத்தில் நடுவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால் அந்த சாலையோர நிலங்கள், தனியாருக்கு சொந்தமானவை ஆகும். அவற்றை முறைப்படி வருவாய் துறையினர் கையகப்படுத்தி நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கவில்லை.

    இதனால் நாங்கள் மின்கம்பங்களை தனியார் நிலத்தில் கொண்டு போய் நடுவதற்கு முடியாது. எனவே சாலையை விரிவுபடுத்துவதற்கு வசதியாக முதலில் அந்த இடங்களில் நிலங்களை கையகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை இடம் ஒப்படைத்தால் தான், அதை செய்ய முடியும் என்றனர்.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, `கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலையை விரிவு படுத்துவதற்கு வசதியாக, நிலங்களை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் தாமதம் ஆனது.

    இப்போது நில உரிமையாளர்களிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் வருவாய்த்துறை நிலங்களை கையகப்படுத்தி, ஒப்படைக்க உள்ளனர். சாலையை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
    • அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.

    இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.

    இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

    மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.

    தாம்பரம்:

    சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. இதனால் இங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன போக்கு வரத்திற்கு முக்கியமான சாலையாக உள்ளது.

    தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் முக்கிய சந்திப்பு இடமாக உள்ள பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறையும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டது.

    அதன்படி பெருங்களத்தூர் ரெயில்நிலையத்தின் இரு பக்கங்களிலும் இருந்த, எல்.சி.32, எல்.சி.33 ரெயில்வே கேட்டுகளை, நிரந்தரமாக மூடிவிட்டு, அந்த இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக முதலில் கடந்த 2000-ம் ஆண்டில் ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்தன. நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த பணி ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது.

    பின்னர் கடந்த 2018-ம் ஆண்டில் மீண்டும் மேம்பாலப் பணி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.236 கோடியில் புதிதாக திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெருங்களத்தூரில் முட்டை வடிவில் ரவுண்டானாவுடன் கூடிய பிரமாண்டமான மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் பெருங்க ளத்தூர், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், நெடுங்குன்றம், மற்றும் வண்டலூர், தாம்பரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமாக, வண்டலூரில் இருந்து பீர்க்கன்கரணை ஏரிக்கரை வரையில், மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு அந்த பாதை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக மேம்பாலத்தின் மேற்குப் பகுதியான, ெரயில்வே பாதையை கடந்து, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர் வழியாக, காமராஜ் நெடுஞ்சாலையில் இணையும், மேம்பால பணி தீவிரப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. அந்த மேம்பாலப்பாதை கடந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    மேம்பாலத்தின் 3-வது கட்டமான தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள மேம்பால பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் தாமதமானது.

    தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமான மேம்பால ப்பணியும் முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே இந்த பாதை அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதத்தில் 2 வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கடைசியாக உள்ள 4-வது கட்டமான கிழக்குப் பகுதியில் இருந்து சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் அமைப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதில் வனத்துறை நிலம் குறுக்கிடுவதால், பணிகள் தாமதம் அடைந்துள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள பெருங்களத்தூர் துணை மின் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அந்தத் துணை மின் நிலையத்தை முழுமையாக இடமாற்றம் செய்தால் தான் மேம்பாலப்பணியை தொடர முடியும் என்ற சிக்கலும் ஏற்பட்டு உள்ளது.

    துணை மின்நிலை யத்திற்கான மாற்று இடம் அமைவதில் பிரச்சி னைகள் ஏற்பட்டு உள்ளதால் மேம்பால பணிகள் முடங்கிப் போய் நிற்கிறது.

    இப்போது புது பெருங்களத்தூர் நேதாஜி சாலையில், மின்வாரிய துணை மின் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது.

    இதைப்போல் மின்வாரிய அலுவலகத்தையும் முழுவதுமாக இடமாற்றம் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மின்வாரியத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பெருங்களத்தூர் துணை மின் நிலைய அலுவலகம் வருகிற 8 மாதத்திற்குள் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதன் பின்னர் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெருங்களத்தூர் மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, `பெருங்களத்தூர் மேம்பாலத்தின் இறுதிக்கட்டமான மேற்குப் பகுதியில் சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளை இணைக்கும் மேம்பால பணி, தற்காலிகமாக தடைப்பட்டு நிற்கிறது.

    வனத்துறை நிலம் குறுக்கீடு, துணை மின்நிலையம் இடமாற்றம் அதற்கு காரணமாக இருந்தது. அதில் துணை மின் நிலையம் இடமாற்றப் பணிகள், டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்கி விட்டது. துணை மின் நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இதைப்போல் வனத்துறையிடம் நிலம் பெறுவதில், மாநில மத்திய அரசுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து முடியும் நிலையில் உள்ளன. மேம்பால பணியை விரைந்து முடித்து முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    பொதுமக்கள் கூறும்போது, `பெருங்களத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். மேம்பாலத்தின் 4 கட்ட பணிகளும் முடிந்து மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு முழுமையான பலன் கிடைக்கும்' என்றனர்.

    ×