என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டில் வேன் டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
- மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா, இவரது மகன் மாடசாமி (வயது38).
இவர் சொந்தமாக வேன் வைத்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்றி, இறக்கி வந்துள்ளார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகாஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மாடசாமி நேற்று காலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமி இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாடசாமி உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சுடுகாட்டில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.