search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
    • மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    திருக்கனூர்:

    புதுச்சேரியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் முருகன் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் காமேஷ் (வயது 23) மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். வேலை தேடி காமேஷ் கடந்த மாதம் மும்பைக்கு சென்றார்.

    அங்கு ஒரு அறையில் வாடகைக்கு தங்கி பல நிறுவனங்களுக்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மும்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால் முருகன் ராமசாமி காமேசை மும்பையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

    மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தையே முருகன் ராமசாமி கடன் வாங்கி செலுத்திய நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

    வறுமையில் வாடும் முருகன் ராமசாமி தனது மகனின் உயிர் காக்க தன்னார்வலர்களும் புதுச்சேரி அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருக்கனூர் இளைஞர் மும்பையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் 350 வரை மட்டுமே விற்பனையானது.
    • உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது.

    திருப்பூர்:

    பருவ மழைகள் ஏமாற்றி வருவதால், திருப்பூர், உடுமலை, சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால், தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. கிணற்று நீரை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக, தக்காளி செடிகள் பாதித்தும், மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.

    இதனால் திருப்பூர், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் விலை உயராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் 350 வரை மட்டுமே விற்பனையானது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வரத்து குறைவு காரணமாக, கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தரமற்ற பழங்கள், வெயிலுக்கு தாங்காதது உள்ளிட்ட காரணங்களினால், வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.

    உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது. கடுமையான வறட்சி, நீர்ப்பற்றாக்குறையிலும் தக்காளி சாகுபடி செய்தும், விலையில்லாததால் நஷ்டமே ஏற்படுகிறது என்றனர்.

    • மே தினம் என்பதால் நேற்று கொடைக்கானலுக்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக வருகை தந்தார்.

    பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். தனது ஓட்டலிலேயே நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பசுமை பள்ளத்தாக்கில் உள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார்.

    அதன்பின் விடுதிக்கு திரும்பியபோது ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    மே தினம் என்பதால் நேற்று கொடைக்கானலுக்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலைச்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கும், பேரிஜம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மோயர்பாயிண்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ஏரி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்ததுடன் படகு சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவரது அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் துர்கா ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக படகு குழாமுக்கு வந்த துர்கா ஸ்டாலினை நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையர் சத்தியநாதன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

    5 நாள் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி வரை இங்கு தங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அவர் சென்னை புறப்பட உள்ளார். இதற்காக கொடைக்கானல் ஓட்டலில் இருந்து கார் மூலம் பிற்பகலில் மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளார். இதனை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார்.
    • பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சமீப காலமாக திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    அந்த வகையில் நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'. இந்த படமானது தமிழக தியேட்டர்களில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகி பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் நேற்று அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்தனர். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தியேட்டரில் பேனரை கிழித்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதில் எபினேஷ் கூறியிருப்பதாது,

    காசி திரையரங்கில் தீனா படம் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். உற்சாகத்தில் நண்பர்களுடன் இருந்த உற்சாகத்தின் மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு எனது வண்டி சாவியை கொண்டு கில்லி பேனர் கிழித்துவிட்டேன். அதற்காக நான் அண்ணன் விஜய் அவர்களிடமும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறி தலைவணங்கி மன்னிப்புக் கொண்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது.
    • ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது.

    14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாக தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையத்தில் தேசிய தேர்வு முகமை பதிவேற்றம் செய்தது. https://exams.nta.ac.in/NEET என்ற வெப்சைட்டில் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பெறலாம்.

    ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கீழஉப்பிலிக்குண்டு நடந்த குவாரி வெடி விபத்தின் அதிர்வு அருகில் உள்ள கிராமங்களில் உணரப்பட்டது.வெடி விபத்து நடந்தபோது லேசான அதிர்வு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ன நடந்தது? என பொதுமக்களால் உடனடியாக உணர முடியவில்லை. அந்த கிராமத்தில் மட்டும் பல வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.

    மேலும் ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடந்த வெடி விபத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டதில் இருந்து சில நிமிடம் காது கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    வெடி விபத்து நடந்த குவாரியில் தினமும் இரவு பகலாக வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் இதனால் நாங்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே இந்த குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது.
    • 6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மட்டுமின்றி வீராணம் ஏரியில் இருந்தும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இதில் வீராணம் ஏரி இப்போது வறண்டு விட்ட நிலையில் நெம்மேலியில் இருந்து வீராணம் குழாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதுவும் தற்போது குறைந்துவிட்டது. இதனால் தென்சென்னை பகுதி மக்களுக்கு இப்போது நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது. வீராணம் ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 90 மில்லியன் லிட்டர் தண்ணீரும் அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 90 மில்லியன் லிட்டர் என்.எல்.சி. தண்ணீரும் சென்னைக்கு வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரி வறண்டதால் நெம்மேலியில் உள்ள கடல் குடிநீர் மூலம் தினமும் 200 எம்.எல்.டி.க்கு மேல் குடிநீர் கிடைத்து வருகிறது. இதன் மூலம் தென் சென்னை பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இது மட்டுமின்றி திரிசூலம் கல்குவாரி மாங்காடு சிக்கராயபுரம், எருமையூர் கல்குவாரிகளில் இருந்தும் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
    • டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டல் தினசரி மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

    இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனால் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே உணவின் மீதியை தடயவியல் நிபுணர்கள், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் உணவில் விஷத்தன்மை இருப்பதை மருத்துவக்குழுவினர் உறுதி செய்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், மாணவர் பகவதி ஆகியோரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சிக்கன்ரைஸ் சாப்பிட்டு 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் துரித உணவகம் மற்றும் அசைவ உணவு ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு இதேபோல் நாமக்கல்லில் உள்ள ஒரு துரித உணவகத்தில் மாணவி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்ததும், 20-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • கூட்டத் தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்து சட்டசபையில் அதற்கேற்ப காரசார விவாதம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

    அப்போது அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த கவர்னர் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்துக்கு முரணாகவும் உள்ளதால் இதை நான் வாசித்தால் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால் உரையை முடித்துக் கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறினார்.

    இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையின் தமிழாக்கத்தை முழுவதையும் வாசித்து முடித்தார். இது அன்றைய தினம் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கானன பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தது.

    தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டாலும் இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்து ஜூன் 4-ந் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் அதன் பிறகு சட்டசபை கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றி அரசு முடிவெடுக்க உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் முதல் வாரத்தில் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு ஜூன் 2-வது வாரம் கூடி எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது எந்தெந்த தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய உள்ளது.

    இந்த கூட்டத் தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்து சட்டசபையில் அதற்கேற்ப காரசார விவாதம் நடைபெறும். அதிலும் குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளிடையே தான் அனல் பறக்கும் விவாதம் சட்டசபையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த முறை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் விவகாரம், குடிநீர் பிரச்சனை, தேர்தல் வெற்றி- தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அ.தி.மு.க. கிளப்ப உள்ளதாக தெரிகிறது.

    இதனால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

    • பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரூபாலி கங்குலி. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது டி.வி. சீரியல்களில் பிரபலமாக உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார்.

    பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தொலைநோக்குத் திட்டங் கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன. அவரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரத மர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜனதாவில் இணைந்து உள்ளேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×