என் மலர்
இந்தியா
- தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என குற்றம்சாட்டப்பட்டவர் வாதிட்டார்.
- உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும்
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மடிக்கணினி வாங்கித் தர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம், 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தொழிலதிபரான தனது தாய்மாமன் மீது பாலியல் புகார் அளித்தார்.
பள்ளிக்குச் செல்லும்போது அவர் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை தவறாகத் தொட்டு முத்தம் கேட்டதாகவும் அந்தச் சிறுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என்றும், தற்போது குடும்ப உறுப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வழக்கை மேலே தொடர விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ஆர். போன்ஸ்லே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர்.
மேலும் தங்கள் உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படிப்புக்கு செல்ல உள்ளதால், அவருக்கு ஆப்பிள் மேக்புக் அல்லது அதற்கு இணையான ஒரு உயர்தர லேப்டாப்பை ரூ.1.5 லட்சம் அபராதத் தொகையில் இருந்து வாங்கித் தர வேண்டும்.
லேப்டாப் வாங்கியது போக மீதமுள்ள தொகையை உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
- விழாவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா தரமணியில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை.
கடந்த 2 மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த வந்த நிலையில் இன்றைய விழாவில் அமைச்சர் துரைமுருகனும் புறக்கணித்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் 38 பேர் ஆராய்ச்சி படிப்புக்கான முனைவர் பட்டம் பெற்றனர். 86 பேருக்கு நேரில் பட்டங்களை ஆளுநர் வழங்கினார். 16,571 பேருக்கு அந்தந்த கல்லூரிகளில் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
விழாவில் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் நீதிபதி பாரதிதாசன், உறுப்பினர்கள் சார்ஜ் அலெக்சாண்டர், ஓம். பிரகாஷ் மற்றும் பதிவாளர் கவுரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க.வின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க.வின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
* கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
* இந்த முறை ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
- இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது பெற்றோர், சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வெளியில் செல்வதாக இளம்பெண் கூறி சென்றார்.
அதன் பிறகு அவரை காணவில்லை. இளம்பெண்ணின் வீட்டினர் அவரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணன் டிர்டோல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மறுநாள் பாரதீப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழே விழுந்த நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில் இறந்து கிடந்தது காணாமல் போன இளம்பெண் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து மர்ம சாவு என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் இளம்பெண்ணின் அண்ணன் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து ஜகத்சிங்பூர் எஸ்.பி. அங்கித் குமார் வர்மா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த சோம்நாத் ஓஜா என்ற வாலிபரை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஜகத்சிங்பூர் பாரதீப் பகுதியில் உள்ள சரளா கோவிலில் திருமணம் செய்து கொள்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சம்பவத்தன்று அந்த பெண் காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
ஜகத்சிங்பூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்த இளம்பெண்ணை சோம்நாத் ஓஜா ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் அங்குள்ள ரஹ்மா பஸ் நிறுத்தத்தில் நிற்குமாறு கூறிவிட்டு சோம்நாத் ஓஜா ஓடிவிட்டார். இந்த வேளையில் அந்த வழியாக ஜார்க்கண்டின் தன்பாத்தைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அவர் அந்த பெண்ணிடம் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நடந்த விவரத்தை கூறிய இளம்பெண்ணிடம் நானும் பாரதீப் பகுதிக்கு செல்கிறேன். அங்கு இறக்கி விடுகிறேன் என கூறி இளம்பெண்ணை லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார்.
செல்லும் வழியில் அந்த பெண்ணை சுபம் குமார் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பலவந்தமாக இளம்பெண்ணை வன்கொடுமை செய்தார்.
கதறி அழுத இளம்பெண் உடனே அங்கு உள்ளவர்களிடம் உதவி கேட்க முயன்றார். இந்த வேளையில் சுபம் குமார் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று கருதி திடீரென்று அந்த இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில் இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி காதலியை வன்கொடுமை செய்து தவிக்க விட்டு சென்ற சோம்நாத் ஓஜா, லிப்ட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சுபம் குமார் ஆகிய 2 பேர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலன் சோம்நாத் ஓஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவுகள் 87, 75(2), 79, 69, மற்றும் 64(2)(எம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுபம் குமார் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு நடந்த இந்த சோக சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் ஒடிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது.
- திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும்.
திண்டிவனம்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் தனித்தனி கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். 28-ந் தேதிக்குள் (இன்று) கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அப்போது தான் எந்த வாகனத்தில் பயணிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றார்.
இதனால் அவர் இன்று கூட்டணி குறித்து அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ராமதாஸ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் எப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளனர்.
- தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
- கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
* தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
* தி.மு.க. தவிர வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
* காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.
* தி.மு.க.வுடன் காங்கிரஸ் நடத்திய முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
* கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பைக் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி அருகேயுள்ள அங்கனாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வினோத் (வயது29). இவர் தருமபுரி நகர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.
இவர் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கனாம் புதூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (23) ஓட்டி பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த வினோத், ஹரிகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
- டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இந்நிலையில் கூடுதல் தொகுதி விவகாரத்தில் இருதரப்பும் விடாபிடியாக இருப்பதால் இழுபறி என தகவல்வெளியாகி உள்ளது.
39 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும், தி.மு.க. தரப்பில் 22 சீட்கள் மட்டுமே தர முடியும் என உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
- காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் பரவி வந்தது. இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
நடிகர் விஜய்யும் அரசியல், பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு தனியாகவே சென்று வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்- சங்கீதா விவாகரத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வித தகவல்கள், கருத்துகள் பரவி வரும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு திருப்பமும் ஒரே தேதியில் நடைபெறுவது தற்செயலா அல்லது திட்டமிட்ட உத்தியா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருவர் வெளியிட்ட பதிவே காரணம். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
27-ந்தேதியானால் விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. அதில் ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ள போஸ்டில் "27th Timeline - Coincidence?" என்று தொடங்கி கடந்த ஆறு மாத நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அவர்களை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்தது.

நவம்பர் 27-ந்தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது. (செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இணைப்பால் தவெகவுக்கு நன்மைதான்).
டிசம்பர் 27-ந்தேதி எச்.வினேத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' ஆடியோ வெளியிட்டு விழா, மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஜனவரி 27-ந்தேதி 'ஜன நாயகன்' பட சென்ஸார் தொடர்பான வழக்கு மீண்டும் புதிய விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
பிப் 27-ந்தேதி விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த செய்தி வெளியானது.
இப்படியாக பட்டியலிட்டு போஸ்ட்டின் இறுதியில் "Mar 27- Be Ready Guys" என்று கூறப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
- பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.
- பூசாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படும்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூசாரிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.
* பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
* இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்.
* ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை மேலும் ரூ.1000 உயர்த்தப்படும்.
* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளின் இளநிலை, முதுநிலை படிப்பிற்கான நிதியுதவி மேலும் ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு உதவித்தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது.
- அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
சென்னை:
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி கடந்த டிசம்பர் மாதமே செங்கல்பட்டு கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.
விஜய்யின் அரசியல் பற்றி கருத்து கேட்டால் எப்போதும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. மனைவி, கணவர் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் அவர்களுக்குள் சந்தோசம் நிலைக்கட்டும். அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.
அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த விவகாரம் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன்.
எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.
அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்.
விஜய்யை பொறுத்தவரை இது அவருக்கு தீயை எதிர்கொள்ளும் சோதனையை போன்றதுதான். அரசியலுக்கு வராமல் நிம்மதியாக வீட்டில் இருந்து இருக்கலாம். நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து இருக்கலாம். நான் கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கலாம்.
சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு இதைப் போன்ற அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டியே வந்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது. எனவே இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
விஜய் இதை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். நியாய தர்மங்களை தாண்டிதான் அவர் பயணம் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
- தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு உதாரணம் தான் இந்த விழா.
* கோவிலுக்குள் அனைவரும் வரலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.
* கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என கூறியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
* அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
* இறைப்பற்றை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதுதான்.
* நான் அதிகமாக கலந்துகொண்ட துறை நிகழ்ச்சி என்றால் அது அறநிலையத்துறையின் நிகழ்ச்சி தான்.
* தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 29 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* அறநிலையத்துறையில் 900-க்கும் அதிகமானவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* 11 பெண்கள் உட்பட 41 ஓதுவார்களை நியமனம் செய்துள்ளோம்.
* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
* ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.






