என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
    • பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.

    முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.

    நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.

    ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.

    நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

    எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.

    • காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
    • மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

    அந்த வகையில் ஆளும் கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் இடம்பெற்று உள்ளன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.

    இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இக்குழுவினர் சந்தித்து பேசினார்கள். காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

    காங்கிரசில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது போன்று தி.மு.க.விலும் விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது.

    இன்றைய சந்திப்பின் போது கூட்டணி கட்சிகள் இணக்கமாக செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் பேசுவதற்கு தி.மு.க. நேரம் ஒதுக்க உள்ளது.

    • மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    • மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.

    இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

    அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    * உணர்ச்சிகரமான நெகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி, உங்களை இப்படி பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என தோன்றுகிறது.

    * மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்பு என்பதை நினைவுபடுத்தும் நாள் இது.

    * தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.

    * உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும்.

    * பெரும்பாலான மக்கள் தீண்டாமையை கைவிட்டு முற்போக்கு பாதையில் செல்லத் தொடங்கி விட்டனர்.

    * கடந்த கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர். தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.

    * மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    * உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் பணி அமர்த்தப்படுவர்.

    * விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

    * மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி நிதியாக 22,300 பேருக்கு ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * அரசு பணிகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.

    * மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக மாறி என்ன செய்யப் போகிறார்கள் என சிலர் நினைக்கலாம்.

    * மாற்றுத்திறனாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றி இருக்கிறோம்.

    * சக்கர நாற்காலியில் பம்பரம் போல் சுழன்று உழைத்தவர் கலைஞர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நாளை கிருஷ்ணகிரி, திருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றுடன் சென்னையில் மழை ஓயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
    • தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி காரில் காதலனுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் (வயது 30), கார்த்திக் (21), குணா (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    பி.எஸ்.என். சட்டத்தின் கீழ் கடத்தல், கொலை மிரட்டல், கூட்டுச்சதி, கூட்டு பாலியல் பலாத்காரம், தடயங்களை மறைத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சம்பவம் நடந்து 29-வது நாளான நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணையானது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது. வழக்கு விசாரணை விரைவில் முடிந்து குற்றவாளிகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு.

    குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.

    இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.

    இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
    • மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

    மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
    • 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வேண்டும்.

    சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தி உள்ளது.

    • சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
    • இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலா தலமான இப்பகுதியில் திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம், பஞ்சலிங்கம் அருவி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

    பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

    இந்தநிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் லேசான தொடர் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் இன்று காலை அருவியில் குளிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 

    • தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான் டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்து திரும்பினர்.

    இந்தநிலையில் தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து 14 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.

    முன்னதாக நேற்று முதலே கடலுக்கு செல்வ தற்கான முன்னேற்பாடு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விசைப்படகு மீனவர்கள் வலைகளை தயார் செய்தல், ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் கேன்களை படகுகளில் சேமித்தல் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டு மாவடி முதல் அரசங்கரை வரையிலான 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் இன்று காலை கடலுக்கு சென்றனர்.

    கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு சம்பவங்களால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 வாரங்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று கடலுக்கு சென்றுள்ளனர்.

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர– சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

    சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்றவர்களுக்கு உலக மற்றுத்திறனாளிகள் தின வாழ்த்தகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர– சகோதரிகள் அனைவருக்கும், உலக மாற்றுத்திறனாளிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×