என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீப்பந்தத்தில் நுழைவது மாதிரி அரசியல்: விஜய் இதை கடந்துதான் வர வேண்டும்- அண்ணாமலை
    X

    தீப்பந்தத்தில் நுழைவது மாதிரி அரசியல்: விஜய் இதை கடந்துதான் வர வேண்டும்- அண்ணாமலை

    • எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது.
    • அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி கடந்த டிசம்பர் மாதமே செங்கல்பட்டு கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.

    விஜய்யின் அரசியல் பற்றி கருத்து கேட்டால் எப்போதும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. மனைவி, கணவர் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் அவர்களுக்குள் சந்தோசம் நிலைக்கட்டும். அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.

    அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த விவகாரம் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன்.

    எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.

    அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்.

    விஜய்யை பொறுத்தவரை இது அவருக்கு தீயை எதிர்கொள்ளும் சோதனையை போன்றதுதான். அரசியலுக்கு வராமல் நிம்மதியாக வீட்டில் இருந்து இருக்கலாம். நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து இருக்கலாம். நான் கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கலாம்.

    சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு இதைப் போன்ற அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டியே வந்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது. எனவே இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.

    விஜய் இதை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். நியாய தர்மங்களை தாண்டிதான் அவர் பயணம் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×