செய்திகள்

நவாஸ் தொகுதி இடைத்தேர்தல்: தீவிரவாதி சயீத் ஆதரவு வேட்பாளருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு

Published On 2017-09-17 07:01 GMT   |   Update On 2017-09-17 07:01 GMT
லாகூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளரான யாகூப் ஷேக்குக்கு பாகிஸ்தான் ராணுவம் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
லாகூர்:

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து மும்பை தாக்குதல் தீவிரவாதியும் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக் போட்டியிடுகிறார். தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அக்கட்சி தேர்தல் கமி‌ஷனால் இன்னும் அங்கீகரிக்கபடவில்லை. எனவே அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தீவிரவாதி சயீத்தின் ஆதரவு வேட்பாளர் யாகூப் ஷேக்குக்கு பாகிஸ்தான் ராணுவம் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தகவலை ஓய்வு பெற்ற ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அம்ஜத் சுயாப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தீவிரவாதி சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் வெற்றி பெற சிறிதளவு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மில்லி முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் பிரசார பேரணியின் போது ‘ஹபீஸ் சயீத் வாழ்க’, ‘பாகிஸ்தான் ராணுவம் நீடூழி வாழ்க’ ‘இந்தியாவுக்கு நண்பனாக இருப்பவன் துரோகி என்பன போன்ற கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் மூலம் தீவிரவாதி சயீத் வேட்பாளருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவாக இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
Tags:    

Similar News