தமிழ்நாடு

நரிக்குறவ மக்களுக்கு புதிய வகையான மரபணு கண்டுபிடிப்பு- இளம் வயதில் இதயநோய் ஏற்படும் அபாயம்

Published On 2024-04-29 07:57 GMT   |   Update On 2024-04-29 09:34 GMT
  • புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
  • மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம்

சென்னை:

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறையை சேர்ந்த நிபுணர்கள், சென்னையை சேர்ந்த நரிக்குறவர் மக்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அப்போது அவர்களின் உடலில் புதிய வகை மரபணு மாற்றத்தை கண்டுபிடித்தனர்.

இந்த புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய வகை மரபணு தொடர்பாக ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 3 நாட்கள் தொடர் மருத்துவ கல்வி திட்டம் மற்றும் பகுப்பாய்வு உயிர் வேதியியல் குறித்த பயிலரங்கு நடந்தது. இந்த பயிலரங்கில் நரிக்குறவ மக்களிடையே கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மரபணு பற்றிய ஆய்வு அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து 110 மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இந்த பயிலரங்கத்தில் அல்காப்டோனூரியா மரபணு மாற்றம் பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்த பயிலரங்கத்தில் பேசிய மருத்துவர்கள் கூறியதாவது:-

அல்காப்டோனூரியா நோயை தோற்றுவிக்கும் புதிய வகை மரபணு மாற்றம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவலி மற்றும் இதயநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு சிறுநீர் கருப்பு நிறத்தில் வெளியேறும். அல்லது காற்று பட்டவுடன் சிறுநீர் கருப்பு நிறத்தில் மாறும்.

இது உடலில் ஹோமோ ஜென்டிசிக் அமிலம் எனப்படும் ரசாயனத்தை உருவாக்கி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு மாற்றமானது பரம்பரை வழியாக மிகவும் அரிதாகவே ஏற்படும். மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். மேலும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News