தமிழ்நாடு செய்திகள்

நாளை மறுநாள் முதலமைச்சர் கள்ளக்குறிச்சி வருகை - புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்

Published On 2025-12-24 13:58 IST   |   Update On 2025-12-24 13:58:00 IST
  • தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
  • நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவும் நாளைமறுநாள் (26-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வருகை தருகிறார்.

அதனை முன்னிட்டு (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் தியாகதுருகம் எல்லையான திம்மலை ரோடு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து 10.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து 11 மணி அளவில் ஏமப்பேர் ரவுண்டானா சேலம் புறவழிச்சாலை சந்திப்பில் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து 11.15 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை தந்து சுமார் 70 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரத்தில் 8 தளங்களை கொண்டு ரூ.139 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

அதனைத்தொடர்ந்து தியாகதுருகம் வழியாக மணலூர்பேட்டை சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் திருவண்ணாமலை செல்கிறார்.

நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வருகையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் தி.மு.க. பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு விழாகோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News