மீனவர்களுக்கு நிவாரண நிதி 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் - இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி
- பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
- முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது, ''இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.
திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.
இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.
நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? நாட்டு மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளைக் கொடுத்து இன்னும் பலவற்றை நிறைவேற்றவே இல்லை. திமுக வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர், வெள்ளை அறிக்கை கேட்டேன், பதிலில்லை.
இது கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயத் தொழிலாளிகள் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. நாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியது. ஆனால் திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
பணிப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதை ரத்துசெய்ய முடியாது. ஊராட்சிக்கு பணியை தேர்வுசெய்ய அதிகாரம் கொடுத்துள்ளனர். ஊழியர்களுக்கு 15 நாளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். இதெல்லாம் செய்துகொடுத்தது மத்திய அரசு. அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாள் 150 நாளாக உயர்த்தப்படும்.
10 அறிவிப்புகளை நான் அறிவித்தேன். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்போம். நாங்கள் அறிவித்ததால் பயந்துபோய் அவர் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஏன் கோடை காலத்துக்கு முன்பு கொடுக்கவில்லை.? மக்களை பற்றி சிந்தித்தார்களா? தேர்தல் வருவதால் வாக்கு தேவை அதனால் கொடுத்தனர். 2022, 23, 24, 25 நான்கு கோடைக் காலம் முடிந்தது, அப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை, உங்களுக்கு சும்மா கொடுக்கவில்லை, வாக்குக்கு விலை பேசி கொடுத்துள்ளனர்.
உரிமைத் தொகையை 28 மாதம் கழித்து, அதிமுகவின் அழுத்தத்தால் தான் கொடுத்தனர். சட்டமன்றத்தில் பேசினோம் வேறு வழியின்றி கொடுத்தார். தாய்மார்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் வருவதால் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்கிறார், அப்படியென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..? நிறுத்தவில்லை. மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெறுவதற்கு தந்திரமாக ஸ்டாலின் சொல்லும் காரணம். தொடர்ந்து நடைபெறும் திட்டத்தை எந்த அரசும் நிறுத்த முடியாது. இந்த 3 மாதம் உங்களுக்கு பணம் வராது. மே மாதம் அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாய் வரும்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் கொடுக்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். கணவன், மனைவி இருவரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம். பட்டியலின மக்கள், ஏழை மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும். தனிக்குடித்தனம் சென்றாலும் பட்டியலின மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும். ஒவ்வொரு தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்துசெய்யப்படும். ஜல்லிக்கட்டு வீரர் மரணம் அடைந்தால் 10 லட்சம் குடும்பத்துக்கு கொடுக்கப்படும். சிறுபான்மை மகளிர் தொழில் தொடங்க கடனுதவி வழஙப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி, புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
உதயநிதி இன்று இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். எடப்பாடி பாஜகவுக்கு முரட்டு அடிமையாம். புதிதாக கண்டுபிடித்திருக்கிறார், இதற்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உதயநிதி சிந்தியுங்கள், எனக்கு முரட்டு அடிமை என்றால் உங்க தாத்தாவுக்கு என்ன பட்டம் கொடுப்பது..? வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்தாரே, அவருக்கு என்ன பட்டம் கொடுக்கப்போறீங்க..? கத்துக்குட்டி நீங்க, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. நீங்க கூட்டணி வைத்தால்
பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் கெட்ட கட்சியா?
அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுகள் சிதறாமல் இருக்க கூட்டணி வைப்போம். அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் தான் திமுகவோடும், திமுகவோடு கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவோடும் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் இது மாறுபடும். இதை வைத்துக்கொண்டு உதயநிதி பேசுகிறார். நான் முரட்டு அடிமை இல்லை, உங்கள் தாத்தாதான் முரட்டு அடிமை.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஊழல் நடக்காத துறையே இல்லை.
ரெய்டை கண்டு பயப்பட மாட்டேன், ஆட்சி போனால் போகட்டும் என்கிறார், ஆட்சி போகத்தான் போகிறது, மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆக ஆட்சி போகப்போகிறது என்று ஸ்டாலினே முடிவுசெய்து அறிவித்துவிட்டார். ஸ்டாலின் கட்டுப்பாட்டில் எந்த துறையும் இல்லை, எல்லா அமைச்சர்களும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
சமீபத்தில் தீர்ப்பு வந்தது, நகராட்சி நிர்வாகத்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஒவ்வொரு பணியிடத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியும், டெண்டர் விட்டு கமிஷனும் வாங்கி இருக்கிறார்கள். அதெல்லாம் ஆதாரத்தோடு அமலாக்கத்துறை அனுப்பியது. அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர், ஆக, லஞ்சம் வாங்குவது உண்மையாகிவிட்டது.
திட்டங்களை கொண்டுவர நிதி இல்லை, எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க 82 கோடி. தேவையா? எழுதும் பேனாவை அரசு மாணவர்களுக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். காலுக்கு செருப்பே இல்லாமல் இருக்கிறார்கள். நான் விவசாயிகள் கஷ்டத்தை அனுபவ ரீதியாக உணர்ந்தவன், இவர்கள் கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள். சென்னையில் கார் ரேஸ் நடத்துகிறார். ஏழை மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிடும் அரசு தேவையா?
ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணம். கருணாநிதியின் குடும்ப பணம் இல்லை. ஊழல் அரசை வீட்டுக்கு அனுப்ப தேதி நெருங்கிவிட்டது, குடும்ப ஆட்சி தேவையா வாரிசு அரசியல் தேவையா? இரண்டுக்கும் முடிவுகட்டும் தேர்தல். மிகப்பெரிய பணக்கார குடும்பம் ஸ்டாலின் குடும்பம். இப்படியே விட்டுவிட்டால் குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து நாட்டை குட்டிச்சுவராக்கி விடுவார்கள். அதனால் விழிப்புடன் இருந்து அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்.
மின்கட்டணம், வரி உயர்வு, குப்பைக்கும் வரி, வரிமேல் வரி போடும் அரசு வேண்டுமா? வாக்குறுதி நிறைவேற்றவில்லை, எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்களமாகிவிட்டது. மக்களை ஏமாற்றும் ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். கொரோனா காலத்தில் விலைவாசி உயரவில்லை, ஓராண்டு விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அற்புதமான ஆட்சி கொடுத்தோம். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர், ஆல்பாஸ் போட்டோம். மாணவர்கள் குறைகளையும் போக்கினோம்.
ஏரி குளம் குட்டை குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரினோம். விவசாயத்துக்கு, குடிப்பதற்கு தேவையான நீர் கொடுத்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். ஒரே ஆண்டில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்துகொடுத்தோம்.
7.5% இடஒதுக்கீடு, ஏழை அரசு பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க இடஒதுக்கீடு கொடுத்தோம். 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவம் படித்தனர். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, 68 கலை கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம், 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண்மை கல்லூரி, 7 சட்டக்கல்லூரி ஏழை மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், யார் யாரோ புதுப்புது கட்சி நடத்துகிறார்கள். அவர்களா இதெல்லாம் செய்தார்கள்? ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு சூழல் உருவாக்கி தந்தது அதிமுக. கல்விச்செல்வம் அழியாச்செல்வம், உயிர் இருக்கும் வரை ஒரே செல்வம் கல்வி செல்வம். அதை கொடுத்தது அதிமுக அரசு. இளைஞர்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற நற்செய்தியை சொல்லிக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களின் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். வந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பாக வீடுபோய் சேர வேண்டும்…" என்று முடித்தார்.