பத்திரப்பதிவுத்துறை குறித்து அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்- அமைச்சர் மூர்த்தி
- தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
- வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும்.
அவனியாபுரம்:
மதுரை குலமங்கலம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. அதில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 479 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். பின்பு அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும். பத்திரப்பதிவுத்துறையில் ஒரே நாளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்தது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்திரப்பதிவுத்துறையில் அதுபோன்று எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலக தயார்.
பத்திரப்பதிவுத் துறையில் இந்தியாவிலேயே முன் உதாரணமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு இன்னும் கையெழுத்திடாமல் 7 மாதமாக கிடப்பில் போட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.