என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Govt"

    • ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவிப்பு.
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்ததன் எதிரொலியால் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.லு அறையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி, C,D பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 மிகை ஊதியமாகவும் C,D பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

    இதற்காக C,D பிரிவு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், முன்னாள் கிராம அலுவலருக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது தி.மு.க. அரசு தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது தி.மு.க. அரசு தான்.

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ந்து விட்டோம் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, நிதி நிர்வாகத்தில் உத்தரப்பிரதேச அரசிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

    உத்தரப் பிரதேசத்திடம் நிதிநிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தி.மு.க. அரசு, தமிழகத்தின் வரிப் பணம் உத்தரப் பிரதேசத்திற்கு செல்வது தான் இதற்கு காரணம் என அடிமுட்டாள்தனமான பொய்யை கூறுகிறது.

    தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை தி.மு.க. அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    • பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு 'பை' மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டன.

    அதே போல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. இவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.

    அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை.

    இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்க உள்ளது. அது ரூ.3 ஆயிரமா? அல்லது ரூ.4 ஆயிரமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இது மட்டுமின்றி பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதன்படி 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 2,22,91,700 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 1,77,22,000 வேட்டியும், 1,77,64,000 சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

    அதன் பிறகு பொதுமக்கள் எந்தெந்த தேதிகளில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த டோக்கனில் எழுதி கொடுப்பார்கள். அதன்படி சென்று ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

    பொங்கல் ரொக்கப் பணம் மற்றும் பரிசு தொகுப்பு விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை.
    • பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.

    சென்னை:

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது.

    மேற்கொண்ட புலன் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் இந்த குற்றத்தை செய்திருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு இளையோர் நீதிக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.

    மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

    இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடகதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகுதியான பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
    • சாதாரண ஆட்டோக்களின் கட்டணமே வசூலிக்கப்படும்.

    "பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இது சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு, பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம், பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் பெண் பயணிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன.

    திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    நோக்கம்: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துதல். இந்த ஆட்டோக்கள் GPS உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

     

    மானியம்: தகுதியான பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 100 ஆட்டோக்கள் தொடங்கப்பட்டன, பின்னர் 250 வரை விரிவாக்கம்.

    தொடக்கம்: 2025 மார்ச் 8ஆம் தேதி (சர்வதேச மகளிர் தினம்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

    விதிமுறைகள்: இந்த ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். ஆண்கள் இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

    கட்டணம்: சாதாரண ஆட்டோக்களின் கட்டணமே வசூலிக்கப்படும்.

    விண்ணப்பம்: சென்னையில் வசிக்கும் தகுதியான பெண் ஓட்டுநர்கள் (ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள்) மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மூன்றாம் கட்ட விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    பயன்கள்: பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து. பெண் ஓட்டுநர்களுக்கு சுயமரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரம்.

    இந்த திட்டம், சென்னையின் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். 

    • மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.
    • மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் மலை, முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோவில், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் இந்த சர்ச்சைக்குரிய கல் தூண் உள்ளன. இந்த தூணை "தீபத்தூண்" என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அரசு தரப்பு இதை சமணர் காலத்திய தூண் என்று வாதிடுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் கார்த்திகை தீப திருநாள் அன்று (3-ந் தேதி) தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது அதே நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்த ராம ரவிக்குமார் மற்றும் அவரது தரப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ராம ரவிக்குமார் தரப்பினரை மலை ஏற அனுமதிக்கவில்லை. மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.

    எனவே மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறி மறுநாள் (4-ந் தேதி) ராம ரவிக்குமார் தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அன்றைய தினமே ராம ரவிக்குமார் தரப்பினர் மீண்டும் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

     

    இந்த 2 உத்தரவுகளையும் நிறைவேற்றாதது குறித்து விசாரிப்பதற்காக தமிழக தலைமை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந்தேதி வீடியோ கான்பரன்சிங் (காணொலி) முறையிலும், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரிலும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி முறையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு ஆஜரானார்கள். அதேபோல மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதன்படி இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி மாதம் 7-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை கடந்த 19-ம் தேதிக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

     

    இதனிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திருப்பரங்குன்றம் விவகாரம் எதிரொலித்தது. இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

    திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து குடிமக்களும் கவலையில் உள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் யார் தீபத்தை ஏற்றுவது என்பதுதான் பிரச்சனை. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்றுவதா அல்லது பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒருவர் ஏற்றுவதா என்பதுதான்" என்றார்.

    இதனைத் தொடர்த்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் இந்த விவகாரம் பற்றி பேசினார், "மதுரையில் திமுக அரசு மக்கள் வழிபடுவதை தடுத்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் அங்கு சென்றவர்களை கைது செய்து அராஜகப் போக்கில் திமுக அரசும், காவல்துறையும் மக்களின் வழிபடும் உரிமைமை தடுத்து வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றாமல் வழிபட செய்பவர்களை கைது செய்து வருகிறது. திமுக அரசு அரசியலுக்காக இவ்வாறு செய்து வருகிறது" என்றார்.

    பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், "திருப்பரங்குன்றம் மக்கள் பல நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது" என்று தெரிவித்தார். மேலும் எல்.முருகன் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் தொடர்பாக பொய் பிரசாரத்தை முன்வைத்துள்ளதாகக் கூறிய கனிமொழி, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவுகிறது. பாஜக ஆளும் ஏதேனும் மாநிலத்தில் அத்தகைய நிலை உள்ளதா? தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று கூறினார்.

    இதனிடையே வளர்ச்சி அரசியலா? அல்லது *** அரசியலா? எது தேவை என்பதை மதுரை மக்களே முடிவு செய்வார்கள் என்று திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

    இவ்விவகாரத்திற்கு நீதிமன்றத்தில் வெளியிடப்படும் தீர்ப்பின் மூலமாகவே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

    • 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா?
    • பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே...

    நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

    நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!

    அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

    20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.

    திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே-

    நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.

    இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!)

    அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...

    என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?

    அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?

    OPEN CHALLENGE IS STILL ON! என்று கூறியுள்ளார். 



    • திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.
    • இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.

    கள்ளக்குறிச்சியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * உங்களால் முதலமைச்சரான நான், உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

    * எந்த வேலையைக் கொடுத்தாலும் 200 சதவீதம் சிறப்பாக செய்யக்கூடியவர் அமைச்சர் எ.வ.வேலு.

    * கள்ளக்குறிச்சியில் புதிய ஆட்சியர் கட்டிடம் உள்ளிட்ட ரூ.1,773 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன்.

    * திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு.

    * சிலர் வாயிலேயே வடை சுடுவார்களே, தி.மு.க. அரசு அப்படி அல்ல. மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படுத்தும் அரசு.

    * கள்ளக்குறிச்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை கூற போகிறேன்... நான் ரெடி.. நீங்க ரெடியா..?

    * கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி, நாகலூரில் அங்கன்வாடி கட்டிடம், சுற்றுலா மாளிகை, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    * ரிஷிவந்தியம் கல்லூரிக்கு புதிய கட்டிடம், பிள்ளையார்குப்பத்தில் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    * சங்கராபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்கள், புதிய அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சிக்கு புதிய பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் வர உள்ளது.

    * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3.18 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 741 பள்ளிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

    * நான் முதல்வன் திட்டத்தால் ஒரு மாணவி, எஸ்.பி.ஐ. வங்கிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    * கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 143 குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * புதுமைப்பெண் திட்டத்தில் 16,094 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    * கள்ளக்குறிச்சியில் 7965 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

    * விபத்தில் சிக்குவோருக்கான இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 10,000 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொகுதி வாரியாக செய்யப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    * இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா.

    * இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.

    * கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றார். 

    • சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள்.

    வீடு சுத்தமாக இருந்தால் தெரு நன்றாக இருக்கும். தெரு சுத்தமாக இருந்தால் நகரம் நன்றாக இருக்கும். நகரம் நன்றாக இருந்தால் மாவட்டம் நன்றாக இருக்கும். மாவட்டம் நன்றாக இருந்தால் மாநிலம் நன்றாக இருக்கும். மாநிலம் நன்றாக இருந்தால் நாடே நன்றாக இருக்கும் என்பார்கள்... இதற்கு பொருள்...

    வீடு சுத்தமாக இருப்பது என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் குறிக்கிறது, இது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. வீடுகளின் தூய்மை தெருக்களின் தூய்மையைத் தீர்மானிக்கிறது. இது குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பை உணர்த்துகிறது.

    சுத்தமான தெருக்கள், சுத்தமான நகரங்களுக்கு வழிவகுக்கும். இது நகர்ப்புற மேம்பாடு, சுற்றுலா, மற்றும் பொது சுகாதாரத்திற்கு உதவுகிறது. மாவட்டங்கள் சீராக இருந்தால் மாநிலங்கள் வலுப்பெறும்; மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதாகும்.

    இதற்கெல்லாம் முழு முதற்காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள். இவர்கள் குறித்து நாம் எப்போது பேசுகிறோம்... வெள்ளம் வந்தால் தெருக்களை சுத்தம் செய்ய இரவு, பகல் பாராமல் பணியாற்றும் போது. பிறகு போராட்டம் என்ற பெயரில் சாலைகளில் போட்டு செல்லும் குப்பைகளை சுத்தம் செய்யும் போது. பிறகு குப்பைகளில் தவறவிட்ட நகைகளை மீட்டு தரும் போது அவர்களை பாராட்டுகிறோம். அவ்வளவுதான்..

    நம் வீட்டில் சேரும் மீதமான உணவு, குப்பைகளின் நாற்றத்தை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் குப்பை வண்டிகள் செல்லும் போது ஏற்படும் துர்நாற்றத்தை கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்படியிருக்க.. இதை எதை பற்றியும் கவலைப்படாமல் தெரு, சாலைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை தெய்வத்திற்கு நிகர் என்றால் மிகையல்ல...

     

    இப்படியான தூய்மை பணியாளர்கள் 120 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து யாரும் கவலைப்படவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியவர்கள்

    1 குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    2 பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    3 மாநகராட்சிகளில் நேரடியாகப் பணியாற்றுபவர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாட்டைக் களைய வேண்டும்.

    4 தரமான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும்.

    5 என்.எம்.ஆர் (NMR) முறையில் பணியாற்றியவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    என்பன முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடங்கிய போராட்டமானது உண்ணாவிரதம், காலவரையற்ற போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

     

    இதனிடையே தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனையும் செய்தது. அதில், ஊதிய உயர்வு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு உள்ளிட்ட சில புதிய திட்டங்களை அறிவித்தது, ஆனால் போராட்டக்காரர்கள் இவை போதுமானதல்ல எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை, கோவை, மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு வருடமும் தீர்க்கப்படாத பிரச்சனையா தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்ய உணவு பாதுகாப்புதுறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
    • தரமான மாவுகளை பயன்படுத்த, கை மற்றும் தலையில் உறைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பத்தில் தரம் இல்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு கட்டுப்பாடு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்நிலையில், இனி இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறவேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை இதனைப் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தரமான மாவுகளைப் பயன்படுத்தவும், கை மற்றும் தலையில் உறைகள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல், நோய்த்தொற்று பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபடவும் உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

    • எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
    • கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

    பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

    மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

    எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! என்று கூறியுள்ளார். 



    ×