தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- நிபுணர்களுடன் போலீசார் அதிரடி சோதனை

Published On 2024-04-29 08:46 GMT   |   Update On 2024-04-29 08:46 GMT
  • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
  • வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை முகநூல் பகுதியில் தனிநபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும் 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தகவல் அனுப்பியதாக தெரிகிறது.

இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.

பயணிகளின் வாகனங்கள் மற்றும் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News