செய்திகள்

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை

Published On 2019-02-21 10:33 GMT   |   Update On 2019-02-21 10:33 GMT
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை (22-ந்தேதி) ராமநாதபுரம் வருகிறார். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கின்றார். #AmitShah #parliamentelection #bjp

ராமநாதபுரம்:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடக்கிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நட்டா, பியுஸ் கோயல், பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பகல் 11 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஹெலிபேட் திடலுக்கு வரும் அமித்ஷா அங்கிருந்து காரில் விழா திடலுக்கு செல்கிறார்.


கூட்ட ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பார்வையிட்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

மாநில துணைத் தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் ஆத்மா கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #AmitShah #parliamentelection #bjp

Tags:    

Similar News