எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க வில்லை- பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளன. இந்த நிலையில் குமரி மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடல், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று நடந்தது.
இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் இளைஞரணியின் அகில இந்திய தலைவர் பூனம் மகாஜன், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் முறையில் பேசி வருகிறார். கன்னியாகுமரியில் இன்று இளைஞரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
வருகிற 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி மதுரையில் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவிக்கிறார்.
தமிழகத்தில் எந்த கட்சிகளுடனும் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில பாரதீய ஜனதா மகளிரணி பொதுச் செயலாளர் உமா ரதி, மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் விசு, மாவட்ட இளைஞரணி தலைவர் நீலேஷ், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் காயத்திரி பிரியதர்ஷினி, கன்னியாகுமரி மண்டல தலைவர் சுடலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ponradhakrishnan #bjp #parliamentelection