செய்திகள்
வெறும் நடிகனாக சாக விரும்பவில்லை, மக்கள் சேவையில் என் உயிர் பிரியட்டும் - கமல் உருக்கம்
ஒரு சாதாரண நடிகனாக சாக மாட்டேன், மக்கள் சேவையில் என் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry
வாஷிங்டன்:
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.
‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் கமலின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படம் இன்னும் முழுமை பெற வில்லை. இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் குறுக்கிட்டதால் அந்த பட வேலைகள் முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ‘இந்தியன்-2’ படம் தொடங்க இருப்பதாகவும் ஷங்கர் இதை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே வருகிற 21-ந் தேதி கட்சியின் பெயரை கமல் அறிவிக்கிறார்.
எனவே, ‘இந்தியன்-2’ படமும் அறிவிப்பாகவே இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை எடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் கமல் இதுவரை தயாராகவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் பேசும் போது, “விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்கள் வெளியானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.
மேலும், “நான் வெறும் நடிகனாக சாக விரும்பவில்லை. அதனாலேயே, அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் சேவையிலே எனது உயிர் பிரியட்டும்” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.