செய்திகள்

இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: வைகோ - தலைவர்கள் இரங்கல்

Published On 2017-12-14 06:42 GMT   |   Update On 2017-12-14 06:43 GMT
ராஜஸ்தானில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை:

மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து துடித்து போனேன்.

அவரது இரு மகன்களின் (18, 14 வயது) கல்வி செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் தகுதியானவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும்.

மூவிருந்தாளி சாலைப் புதூர் கிராமத்தில் பெரிய பாண்டியன் குடும்பத்தினர் இலவசமாக வழங்கிய நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளிக்கு பெரிய பாண்டியனின் பெயரை சூட்ட வேண்டும்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது வீரமரணம் அடைந்துள்ள பெரிய பாண்யனின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மிகுந்த பொறுப்புணர்வுடன் கடமையாற்றிய ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றியவர் ஆய்வாளர் பெரிய பாண்டியன். அவரது அகால மரணம் தமிழக காவல் துறைக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக நமது ஆய்வாளர் பெரிய பாண்டியனின் வீரமரணம் அமைந்துள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. :-

பெரிய பாண்டியன் உயிர் தியாகம் தமிழக மக்களை உலுக்கியிருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரோடு கூடுதல் காவலர்களை அனுப்பி இருந்தால், இந்த துயர சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து நியாயமானது.

இனி வரும் காலத்தில், காவல்துறை மேலிடம் இதுபோன்ற நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

Tags:    

Similar News