search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் இந்தியா தொடர்"

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
    • இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

    • உள்நாட்டு கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்
    • ரஞ்சி கோப்பையில் ஒரு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்

    இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு 19 வயது. அதன் பிறகுடெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.

    இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை ரஞ்சி டிராபியில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

    வங்காளதேச அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பிடித்திருந்தார். அவர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடி அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்தால் அறிமுக போட்டிக்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    • இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
    • காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. கேப்டனாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
    • வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    மிர்புர்:

    3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை.
    • பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

    சிட்டாகாங்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே இழந்து விட்டது. முதல் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றது.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி வரை நெருங்கி வந்த வாய்ப்பை பறி கொடுத்தது. பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

    காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார். தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி , ஷிகர் தவான் ஆகியோர் வங்காளதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்கள் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவானுடன இணைந்து ராகுல் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களும் நெருக்கடியில் உள்ளனர்.

    வங்காளதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது.

    சொந்த மண்ணில் அந்த அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மெகிதி ஹசன் மிராஸ், சகீப்-அல்-ஹசன் , கேப்டன் லிட்டன் தாஸ் , மகமதுல்லா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

    • காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    இந்தியா-வங்காளதேச கிரிக்கெட் அணிகள் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி சிட்டகாங்கில் நடக்கிறது.

    இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அதே போல் கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    • 2-வது ஒருநாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேச அணி.
    • அத்துடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    மிர்புர்:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.

    இந்நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    • கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.
    • 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.

    மிர்புர்:

    வங்காளதேசம் மற்றம் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்தார். மஹ்முதுல்லா 77 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி (5 ரன்), ஷிகர் தவான் (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 82 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 56 ரன்கள் சேர்த்தார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் போதிய ரன்ரேட்டை எட்டவில்லை.

    கடைசி நேரத்தில் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டி வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் எபடோட் உசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மெஹிடி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் அசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது.
    • 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்து அசத்தினார்

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 77 ரன்களும், 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் 100 ரன்களும் விளாசியதால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

    இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
    • 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்

    வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.

    அதை பயன்படுத்திய ஹசன் 38* (39) ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

    ஆனால் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

    உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.

    சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.

    ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும். சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும் என்று கூறினார்.

    அவர் கூறியதை கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் முடிவில் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிராக எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸை அற்புதமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்த ராகுல் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் கூட பேட்டிங்கில் 73 ரன்கள் எடுத்த அவர் நீண்ட நாட்களுக்கு முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்ததால் துரதிஷ்டவசமாக கேட்ச்சை தவற விட்டார் என்பதால் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல என்பதே நிதர்சனம்.

    • 186 ரன்கள் என்பது போதுமான ரன்கள் இல்லை.
    • வங்காளதேச அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    மிர்புர்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

    முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்தியா 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. பின்னர் வங்காளதேச அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    186 ரன்கள் என்பது போதுமான ரன்கள் இல்லை. ஆனால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தோம். அதன் மூலம் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நாங்கள் 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்த மாதிரியான ஆடுகளங்களில் விளையாடி நாங்கள் பழக்கப்பட்டவர்கள். அதனால் இதற்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது. அடுத்த போட்டியை எதிர்பார்த்து உள்ளோம்" என ரோகித் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 186 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாக்கா:

    இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.

    வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.

    ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வேகமாக ஓடிச்சென்றார். அவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்ச் தவறவிட்டதை தொடர்ந்து, அதிரடியை தொடர்ந்த ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    ஹசன் மிர்சா - ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

    முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும், கேட்சை தவறவிட்ட கே.எல்.ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    ×